Friday, July 7, 2023

மாமன்னன் தவறவிட்ட இலக்கு எது?

இரண்டாவது நாளிலேயே மாமன்னனைப் பார்த்து விட்டேன்.மக்களின் உணர்வை அறிவதற்காக நம்ம மக்கள் திரளாக வாழும் வடசென்னை பட்டாளம் மகாலட்சுமி அரங்கில் பார்த்தேன்.மகாலட்சுமியில் படம் பார்ப்பதே சுகமான அனுபவமாக இருந்தது. எனது பார்வையை கருத்தை பிறகு சொல்லலாம் என நினைத்து ஐந்து நாட்களுக்கு பிறகு இன்று எழுதுகிறேன். மாரி செல்வராஜியின் விடுதலை உணர்வு சார்ந்த அரசியலைப் போற்றுகிறேன். அடித்தால் அடிப்போம்;வாடா என்றால் போடா என்போம்;திருப்பி அடிப்போம் என்று தோழர் சீனிவாசராவ் தலைமையில் ஐம்பதுகளில் கம்யூனிஸ்டுகள் தலைமையிலான விவசாயத் தொழிலாளர்கள் காவிரி நதிக்கரை மண்டலத்தில் முழங்கி வெற்றி பெற்றார்கள் என்பது சமநீதிக்கான போராட்ட வரலாறு. மாரிசெல்வராஜ்,வைகைப்புயல் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின்,ஏ.ஆர்.ரஹ்மான்,தேனி ஈஸ்வர் ,பகத்பாசில், கீர்த்தி சுரேஷ், கீதாகைலாசம் பங்களித்த கொங்குமண்டலத்தின் சாதீயை சித்திரித்த மாமன்னனை பாராட்டாமல் இருக்க இயலுமா? மாமன்னன் தன் இலக்கை நோக்கி பயணித்தாரா? இலக்கை அடைவதற்கான சமூகத்தின் சூழலைப் புரிந்து கொண்டாரா ? சனாதனத்தின்படி மனிதர்களை மேல் கீழ் என வரலாற்று காலத்திற்கு பிறகு தொடங்கி மனிதர்களை இன்று வரை பிரித்து வைத்து உழைப்பை உற்பத்தியை அபகரித்து வளரும் தமிழ்நாட்டின் இந்தியாவின் சனாதன சிஸ்டத்தை கார்ப்பரேட் சாதியம் மதவெறி இடையிலான கள்ளக் கூட்டணியை உடைத்தெறிய அழகியல் சார்ந்த அரசியலை மாரியால் பயன்படுத்த முடிந்ததா? போன்ற கேள்விகள் எழுந்ததால் இன்று எழுதுகிறேன்.
மெய்யாலுமே தன்னை உணர்ந்த தன் சொந்தக் கட்சியின் சாதீயப்பார்வையை ஒடுக்குமுறையை உணர்ந்து,வாழும் வீட்டை தாக்க வேண்டும் என்கிற முடிவோடு வருகின்ற ரத்னவேலுவின் ஆள் அம்புகளை உணர்ந்து மகன் அதிவீரனிடம் மாமன்னன் வடிவேலு சொல்கின்ற அந்த வசனம் இருக்கிறதே, "வீட்டுக்குள் அத்துமீறி நுழையறவன் ஒருத்தனும் உசிரோடு வெளியே போகக்கூடாது" என்ற அந்த வசனம் தருகின்ற புரிதல் இருக்கிறதே அபாரமானது.தன் மீது சொந்தக் கட்சியினராலேயே சுமத்தப்படுகின்ற சாதீயத்தை உணர்ந்த பாத்திரமாக மாமன்னன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தன் அப்பனுக்கு உட்கார மறுக்கப்படுகிற இருக்கையில் உட்காரச் சொல்கின்ற அதிவீரனின் அந்த ஆவேச கொந்தளிப்பான எதிர்வினைக்கு மகாலட்சுமி திரையரங்கும் அதிர்ந்து ஆர்ப்பரித்தது.சாதீயத்தை எவ்வாறு எந்த முறையில் எதிர் கொள்ள வேண்டும் என்ற பார்வை அதிவீரனுக்கோ லல்லிக்கோ இருப்பதாக அந்தப் பாத்திரங்கள் வனையப்படவில்லை. கவுண்டர்கள் நடத்தும் கொங்குமண்டல ஆயத்த ஆடை தொழிலகங்கள் மீது உலக வங்கி ஓர் ஆய்வை நடத்துகிறது.இந்த தொழில் வளாகங்களை ஒட்டி மண்டலத்தை ஒட்டி சாதீயம் இயங்குவதை உலக வங்கி அறிந்து, இத்தகைய சாதியத்தோடு பிணைந்திருக்கிற தொழில்களை தொடர்ந்து நடத்திட நிதி உதவி செய்யலாம் என்று எழுதப்பட்ட அறிக்கையை அறிஞர் ஆனந்த் தில்டும்டே தன் சமீபத்திய நாலான தலித்துகள்: நேற்று இன்று நாளை என்கிற நூலில் ( கிழக்கு பதிப்பகம்,2020, தமிழில்: பாலுமணிவண்ணன்) குறிப்பிடுகிறார். சாதீயம் பழைய காலம் போல இல்லாமல் அது தன்னை காத்துக் கொள்ள இந்திய நிலப்பரப்பில் புதிய தாராளவாத , ஒளிரும் பாரதத்தை முன் வைத்து தங்களின் ஆட்சி அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ள இயங்கும் பெருமுதலாளித்துவ சக்திகளொடு இணக்கமாகிப் போகிறது. நவீன ஓருலக அணுயுத்த போரை முன்னெடுக்கும் நிதிமூலதன கார்ப்பரேட் சக்திகளை தங்களை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு இந்திய அளவிலான பெருமுதலாளிகள் பயன்படுத்துகிறது. உலக அளவில் தன்னுடைய சுரண்டலை அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சாதிய திரட்சி அடிப்படையிலான தொழில்கள் மீது குறி வைத்து சாதீயத்தை மதவாதத்தை கையாள்கிற இந்திய ஆளும் வர்க்கத்தினரை காப்பாற்றிக் கொள்ள உலகவங்கியை கையாளும் க்ரோனி காப்பிடலிசம் உதவுகிறது.
இந்தப் புரிதல் நவீனகல்வி பெற்ற அதிவீரனோ லல்லியோ அறியாமல் இருப்பது என்ற முறையில் மாரி செல்வராஜ் உருவாக்கிய அந்தப் பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டதன் வழியாக சாதீயத்தின் மதவாதத்தின் வேர் எது என்கிற புரிதல் தெளிவாக்கப்படவில்லை.உள்ளூர் அளவிலான ரத்தினவேலுவை எதிரியாக கட்டமைத்து ரத்தினவேலு போன்றவர்களை இயக்குகிற தீண்டாமை சாதீயத்தை தாங்கிப் பிடிக்கும் சக்திகளை மாமன்னன் காப்பாற்றவே செய்கிறது. சாதீயத்தின் சனாதன அரசின் தாங்குசக்தி எதுவென மாமன்னன் போன்ற படங்கள் சித்திரிக்காதவரை இவைகளை அழித்தொழிப்பதற்கான வேர்களை இந்த திரைப்படங்கள் கண்டறியாதவரை இந்திய தமிழ்நாட்டின் சாதியத்திற்கு எந்த ஆபத்தும் இத்தகைய படைப்புகளால் உருவாகப் போவதில்லை. படியேறும் பெருமாளில் கற்கத் தொடங்கிய மாரி , கர்ணன் வெற்றிப்படமாக அமைந்து விட்டனதால் தொடர்ந்து கற்பதை அவர் விட்டுவிடக்கூடாது சிவப்பு காட்டும் தத்துவ வெளிச்சத்தில் தொடர்ந்து சாதீயத்திற்கு எதிரான கலைபடைப்புகளை தர மாரிசெல்வராஜ் முயல வேண்டும். வாங்க தோழர் ஒரு டீ குடித்துக் கொண்டே பேசுவோமா?

Tuesday, November 15, 2022

சிகரம் 80: செயற்பாடுகளின் கண்ணி அறுந்து போகாத ஆளுமை

தோழர் சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களின் 80 ஆவது வயதை ஓட்டி , அரியலூர் மாவட்ட செந்துறை தமிழ்ச்சங்க செயலாளர் வே.குமரவேல் முன்னெடுப்பில் ,சந்தியா பதிப்பகம்{சென்னை} சார்பில் வெளிவந்திருக்கும் சிகரம் செந்தில்நாதன் : பாதை பயணம் படைப்புலகம் எனும் தொகுப்பு நூலிற்கு நான் எழுதிய கட்டுரை இங்கு வெளியாகியிருக்கிறது.-இரா.தெ.முத்து சிகரம் ச..செந்தில்நாதன் எனில் நேர்மறைசக்தி எனப் பொருள் கொள்ளலாம்.சரியானது என அவர் கருதினால் அந்த சரியான முயற்சிகளின் ஊக்கசக்தியாக அவர் இருப்பார். சரியான முயற்சிகளுக்கு செயற்திட்டம் முதல் அமைப்பு வரை முன்னெடுக்க அவர் அறிவும் அனுபவமும் துணை நிற்கும்.  இவ்வாறான நேர்மறை பகிர்வின் வழியே உருவானது கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு. 2013 ஆம் ஆண்டின் ஒரு நாள் சிகரத்திற்கு போன்  செய்து 'தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னை வந்து பார்த்த செ.து.சஞ்சீவி தனக்கு வயதாகி விட்டது என்றும் இனிமேல் கவிஞர் தமிழ்ஒளி குறித்த நிகழ்வுகள் நடத்த இயலாது என்றும் சொல்கிறார். இது குறித்து பொருத்தமாக யோசியுங்கள் என்று சொன்ன தகவலைப் பகிர்ந்தேன். தகவலைக் கேட்டுக் கொண்ட சிகரம் செந்தில்நாதன் ஒன்று செய்வோம் என்றார். பிரின்ஸ் கசேந்திரபாபுவிடம் தான் பேசிவிடுவதாகவும் என்னையும் பிரின்சிடம் பேசி அவர் நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் கூட்டம் ஒன்றை கூட்டுங்கள் என்று ஆலோசனை தந்தார். யார் யாரை தொடக்க கூட்டத்திற்கு அழைக்கலாம் என்று சிகரம் செந்தில்நாதன்,இரா.தெ.முத்து ,பிரின்ஸ் கஜேந்திரபாபு மூவரும் சில முறைகள் போனில் கலந்து பேசி , 2013 ஜூலை 29 ஆம் திகதி பிரின்சின் பள்ளியான நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் கவிஞர் தமிழ்ஒளி 90 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தோம். ஆலோசனைக் கூட்டத்திற்கு யார் யாரை அழைப்பது என சிகரம் அவர்கள் வழிகாட்டினார்கள்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்ந்த படைப்பாளர்கள் தோழர்கள்,கவிஞர் ஈரோடு தமிழன்பன்,சே.து.சஞ்சீவி,புதுச்சேரி சார்பாக படைப்பாளர்கள், முகம் மாமணி , பேராசிரியர் இராமகுருநாதன் ,சந்தியா நடராசன்,உதயை வீரையன், முனைவர் பி.இரத்தினசபாபதி,விழிகள் நடராசன் எனப் பட்டியல் தயாரித்தோம். இவ்வாறுத் தொடங்குகிற ஆலோசனைக்கூட்டம் விரிவான அளவில் மாற வேண்டும் என்றும் தன் அவாவை முதல் கூட்டத்திலேயே சிகரம் செந்தில்நாதன் பகிர்ந்து கொண்டார்கள். அவ்வாறே நூற்றாண்டு விழாக்குழுவினை தொடர்ந்து இரண்டாம் முறையாக விரிவாக்கும் திட்டத்தை வைத்திருக்கிறோம். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு ஒவ்வொர் தேவைக்கும் குழு உறுப்பினர்களை கொடையாளர்களை சார்ந்து செயல்படுகிறது. நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் நடத்தப்படும் குழுக் கூட்டத்திற்கு சிற்றுண்டி தேநீர் வழங்குவதை பிரின்ஸ் கசேந்திரபாபு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் , தொடர்ந்து வரும் விழா நிகழ்வுகளில் செலவுகள் பெரியதாகப் போகும் எனில் முதலில் ஒரு தொகையை அளித்து , நிகழ்வுகள் உற்சாகத்தோடு நடப்பதற்கான மனநிலையை உருவாக்கி விடுவார் சிகரம் செந்தில்நாதன் அவர்கள். நிகழ்வுப் போக்கினை உடனிருந்து கவனித்து சொல்லப்படும் கருத்துகளை உள்வாங்கி நிதி என்பது ஒரு சுமையாக மாறி விடாதபடி முதன் முதலில் விழாக்குழு தலைவர் என்ற முறையில் சிகரம் நல்கும் நன்கொடை, ஏனைய குழு நண்பர்களிடம் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுதியை உருவாக்கி விடும். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு பல சமூகப் பின்புலத்தைக் கொண்டவர்களால் இயக்கப்படும் குழு என்பதால் , குழு உறுப்பினர்கள் முன் வைக்கும் கருத்துகள் நீர் போல மென்மையாகவும் இருக்கும். மலையருவி போல தடாலடியாகவும் வந்து மோதும். இம்மாதிரியான சூழலில் தலைவர் என்ற முறையில் சிகரம் அவர்கள் கூட்டத்தில் குறுக்கீடு செய்து , சொல்லப்படும் உறுப்பினரின் கருத்தை மட்டும் எடுத்து அதை பொதுக்கருத்தாக மாற்ற முயல்வதோடு ,கருத்தை சொன்னவரை அமைதி செய்து தொடர்ந்து கூட்டம் சுமுகமாக நடைபெறும் சூழலை தக்க வைத்துக் கொள்வார். தனக்கு வயது 80 ஆகி விட்டது என்ற உணர்வை செயல்படுவதற்கான தடையாக மூப்பாக சிகரம் கருதுவதில்லை. கூட்டங்கள் சென்னையில் சென்னைக்கு வெளியே எங்கு நடைபெற்றாலும் குறித்த் நேரத்திற்கு சென்று கலந்து கொள்வதை காலப் பண்பாடாக கடைபிடித்து வருகிறார். கொரொனா பெருந்தொற்று காலத்திலும் பல குழுக்கூட்டக்களை தன் இல்லத்தில் நடத்தி செயல்பாடுகளின் கண்ணி அறுந்து போகாமலும் தோழமையின் தொடர்பை நெருக்கமாவும் இயக்கிக் கொண்டு , ஏனைய தோழர்களுக்கான செய்தியாகவும் இந்தப் இயங்குச் செயற்பாட்டினை உனர்த்தி வருகிறார். ( இரா.தெ.முத்து, தமுஎகச தலைவர்களுள் ஒருவர் செயலாளர்;கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு)

Sunday, May 1, 2022

புதுமைப்பித்தனை வாசித்த முதல் அனுபவத்தை முன் வைத்து...

  


புதுமைப்பித்தன் பிறந்து 116 ஆண்டுகள் ஆகி விட்டன.

முதன் முதலாக புதுமைப்பித்தனை எப்போது வாசித்தேன்?

1982 கன்னியாகுமரியில் எனது உறவினர் சங்கம் லாட்ஜ் உரிமையாளர் அவர்களின் வீட்டிற்கு சென்ற உறவினரோடு நானும் சென்றிருந்தேன்.

அவரின் இளைய மகள் பிளஸ் டூ மாணவி. அவருடைய பிளஸ் டூ தமிழ் புத்தகம் வீட்டின் மேசையில் இருந்தது.எடுத்துப் புரட்டிப் பார்த்து வாசித்து பார்க்கிறேன்.

அதில் "ஒரு நாள் கழிந்தது" என்கிற கதை பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதை எழுதியவர் புதுமைப்பித்தன் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்நாடு பாடப்புத்தக பாடத்திட்டத்தின் வழியாக புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது கதை வழியாக நான் புதுமைப்பித்தன் எனும்  பெயரை முதன்முதலாக அறிந்து கொள்கிறேன்.

பிளஸ் டூ மாணவி உயர்படிப்பு படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களை மணமுடித்ததை பின்னர் அறிந்து கொண்டேன் என்பது தனி.

ஒரு நாள் கழிந்தது கதை 1937 ல் எழுதப்பட்டது. மீண்டும் "ஒரு நாள் கழிந்தது" கதையை வாசிக்கிற பொழுது காலங்கள் ,ஆட்சிகள் மாறின; காட்சிகள் மாறினவா? என்பதற்கான ஓர் ஆவணமாக அந்தக் கதை இன்றும் இருக்கிறது.

அன்றாடம் காய்ச்சிகளின், ஒட்டுக் குடித்தன வாசிகளின், எழுத்து வாழ்வை இலக்கியவாழ்வை முழுவாழ்வாக வரித்துக்கொண்ட இலக்கியவாதிகளின் வாழ்க்கைப் பாடுகளை இந்த வாழ்வின் வரவிற்கும் செலவிற்கும்  பொருந்தி வராத சம்பளக் காசுகளை,  கதை மீண்டும் மீண்டும் அன்றாட வாழ்வின் துயரங்களை ஞாபகங்களை  நினைவுபடுத்தி 21 ஆம் நூற்றாண்டின் வாழ்வு 20 ஆம் நூற்றண்டின் வாழ்விலிருந்து அப்படி ஒன்றும் தலைகீழாக மாறிவிடவில்லை என்பதை துலக்கப்படுத்துகிறது ஒரு நாள் கழிந்தது.

 குழந்தை அலமுவின் வார்த்தைகளும் செயல்களும் கதையின் இன்னுமொரு அடுக்காக நின்று எழுத்தாளர் முருகதாசர் -கமலா இணையரின் வாழ்வின் துயரத்தை பேசாமல் உணர்த்துகின்றன. முருகதாசர் கொடுக்க தாமதிக்கும்  11 ரூபாய் நிலுவைக்காக அந்தியில் விளக்குப் பொறுத்த தீப்பெட்டியைக் கூட தர மறுக்கும் கடைக்காரரின் செயல் பெரிய பாரத்தை வாசகர் மீது வைத்து விடுகின்றன. 

நேர்கோட்டு linear கதையாக இல்லாமல் non linear கதையாக உத்தி கொண்டு அரசியல் பொருளாதார பண்பாட்டு விடயங்களை புதுமைப்பித்தனின் இந்தக் கதை உள்வாங்கி இருக்கிறது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்கள்-  இந்தியச் சந்தைக்கு வந்து குவியும் சோயாபீன்ஸ் முதல் மெழுகுவர்த்தி வரையான இறக்குமதிப் பொருட்களுக்கு எழுத்தாளர் முருகதாசர் ,அட்வர்டைசிங் கம்பெனியின் பொருட்கள் விளம்பரத்திற்காக சாகா வரம் பெற்ற எழுத்தோவியங்கள் எழுதுவதை விட்டு விட்டு, சந்தைப்படுத்தப்படுத்தப்படும் பொருட்களின் மீதான மகாத்மியங்களை காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார் எனும் புபி யின் எழுத்தில் தொனிக்கும் நையாண்டி, வந்து இறங்கும் வெளிநாட்டுப் பொருட்களையும்  நையாண்டி வழி அவர் சமூகத்தின் விசாரணைக்கு உட்படுத்துகிறார் என நாம் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

மளிகைக்கடை பாக்கியில் ஒரு முன்று ரூபாய் கொடுத்து விட்டால் கொஞ்ச நாள் மளிகைக்கடைக்காரரின் அர்ச்சனைக்கு ஆட்படாமல் இருக்கலாம் என்பதற்காக சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுக்க நினைத்தாலும் ஒட்டிக் கொள்கிற சுந்தரம்பிள்ளை, பக்கத்து வீட்டு நெக்டை சுப்ரமணியபிள்ளை விளக்குப் பொறுத்தும் நேரத்தில் அந்திக் காப்பி குடிக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட அலமுவை வைத்துக் கொண்டு மூணு கப் காப்பிப் போட கமலாவிற்கு குரல் கொடுக்கிறார் முருகதாசர்.

அப்பா எனக்கில்லையா? மாமா எனக்கில்லையா? எனக் கேட்கும் அலமுவை விட்டு விட்டு வந்தவரோடு காப்பி சாப்பிடுகிறார் புனைப்பெயர் சூடிக் கொண்ட பிரபல எழுத்தாளர் முருகதாசர்.

சுந்தரம் காப்பி குடித்து விட்டு கிளம்பி விட்டார்.தொண்டையைக் கணைத்துக் கொண்ட நம் எழுத்தாளர் சுப்ரமணியம்பிள்ளையிடம் "சேஞ்ச் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்" என கேட்கிறார். "சம்பளம் போடலே; அவசியமாக இருக்கிறது" என்கிறார். அதனாலென்ன என்ற டாம்பீகத்தோடு பர்ஸ் திறந்து எட்டணாவை (50 பைசா) "இப்போதைக்கு இதுதான் இருக்கிறது" என தூக்கித் தருகிறார் சுப்ரமணியம்பிள்ளை.

எட்டணாவை வைத்துக் கொண்டு என்ன செய்ய என நினைக்கும் முருகதாசரிடம் மளிகைகடைக்கான மூன்று ரூபாயை திங்கள் கிழமை பார்ப்போம்; இப்போதைக்கு இதை கொடுத்து காப்பிப்பொடி வாங்கியாருங்கோ என கணவரை கடைக்கு விரட்டுகிறார் கமலா

பதினோரு ருபாய் கடனைத் தாள இயலாத மளிகைக்கடைக்காரர் ,ஒரு மூன்று ரூபாய் புரட்டுவதற்கு சிரமப்படும் ஓர் எழுத்தாளர்; காப்பிப் பொடிக்கும் வழி இல்லாத சென்னை ஒட்டுக்குடித்தன வாழ்வு, நண்பர்கள் எனும் பேரில் அந்திக்காப்பி குடிக்க வரும் வாழ்வில் சிரமப்படும் இன்னும் இருவர்; சப்ரிஜிஸ்தர் மகள் ரிக்‌ஷாவில் போவது போல,தானும் ஏன் போகக்கூடாது என ரிக்‌ஷாகாரரிடம் சண்டை இடும் ஐந்து வயது அலமு என ஒரு தினசரி வாழ்வை கழிக்க சிரமங்களை எதிர்கொள்ளும் மனிதர்கள் என 1937 ல் ஒரு நாள் வாழ்வு என்பது 85 ஆண்டுகள் கழிந்தும் மாறிவிடாமல், மனிதர்களின் ஒரு நாள் வாழ்வை கடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது என்பதை காட்சிப்படுத்துகிறது.

உற்பத்தி பெருகி இருக்கிறது; டிஜிட்டல் இந்தியா பிறந்து பத்தாண்டுகள் ஆகிறது;ரிக்‌ஷாவிற்குப் பதில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வந்து விட்டன. இன்றும் கமலாக்கள் முருகதாசர்கள் சுப்பிரமணிய பிள்ளைகள் வாழ்வில் வறுமை இல்லாத வாழ்வு வந்து விட்டனவா? காப்பி பொடிக்கும் பாலுக்கும் மல்லுக்கட்டும் எத்தனையாயிரம் குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.இந்தநிலை மாறுவது எப்போது? என கதையில் இல்லாத பல கேள்விகளை ஒரு நாள் கழிந்தது வழி புதுமைப்பித்தன் எழுப்புகிறார்.

Thursday, May 27, 2021

புதுப்பேட்டை 15 ஆவது ஆண்டு நிறைவு


தனுஷின் 9ஆவது படமான புதுப்பேட்டை படத்திற்கு இது 15 ஆவது ஆண்டுதனுஷ் திரைப்படத்துறைக்கு வந்து இருபதாவது ஆண்டு.20 ஆண்டுகளில் 45 படங்கள் நடித்திருக்கிறார்.நான் 35 படங்களுக்கும் மேல் பார்த்திருக்கிறேன் . வடசென்னையை நான்கு முறை பார்த்திருக்கிறேன்.அசுரனை இரண்டு முறைகளும் கர்ணனை தியேட்டரில் ஒரு முறையும் அமேசான் ப்ரைமில்  இருமுறையும் பார்த்ததை சேர்த்தால் 44 காட்சிகள் பார்த்திருக்கிறேன்.துள்ளுவதோ இளமை ,காதல் கொண்டேன், திருடா திருடி இவைகளிலிருந்து மாறுபட்ட தோற்றமும் நடிப்பும் தனுஷால் காட்டப்பட்ட படம் புதுப்பேட்டை.கதாபாத்திரங்களை தேர்வு செய்கிற ஆழ்ந்த கவனத்தால் 20 ஆண்டுகளாக தமிழ்த் திரையில் வெற்றிகரமான கதாநாயகனாக தனுஷ் இருப்பது மகிழ்ச்சி.இரண்டு முறை நடிப்பிற்காக தேசிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் தனுஷ்.புதுப்பேட்டையை பொருத்தவரை கூவம் ஓடுகிற காய்லான் கடை உதிரிப்பாகங்கள் கொண்ட நிலம் மயங்கித் திரிந்து பொதுவான சென்னை என்பதாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. கொக்கி குமார் கேங்ஸ்டராக மாறி வந்ததற்கான பின்னணி அத்துணை இயல்பானதாக இல்லை.கழகங்களுக்கிடையிலான வன்முறை அரசியலை பின்னணியாகக் கொண்டது படம் என்பதை புரிய வைக்கிறார் செல்வராகவன்.நிலமோ பின்னணியோ புதுப்பேட்டை படத்திற்கு அவசியமில்லை .தனுஷூற்கு திரை உலகில் அழுத்தமாக நிற்பதற்கான ஒரு பாத்திரம்  படம் தேவை.பாத்திரத்திற்கு ஏற்ற தேவைக்கேற்ற படமாக  புதுப்பேட்டை  வார்க்க ப்பட்டிருக்கிறது. கோபம் ,ஆவேசம் ,குழந்தைத்தனம் காதல்,  பாசம் , சோகம் போன்ற போன்ற உணர்ச்சிகளுக்கு  தனுஷ் என்கிற கொக்கி குமார் பொருந்திப் போகிறார்.கொக்கி குமாருடைய நாயகிகளாக வேணி என்கிற சினேகாவும் செல்வி என்கிற சோனியா அகர்வாலும்ஆளுமை கொண்ட , நினைவில் நிற்கும் பாத்திரங்களாகவே வார்க்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி.நடிப்பு , ஒளிப்பதிவு ,இசை ,இயக்கம் அனைத்தும் கச்சிதமாக புதுப்பேட்டையில் கையாளப்பட்டிருக்கிறது.புதுப்பேட்டையில் ஒரு துண்டு பாத்திரத்தில் தொடக்கத்தில்நடித்திருந்த விஜய்சேதுபதியின் வளர்ச்சி  அடுத்த 20 ஆண்டுகளாக  நமக்கு பிரமிப்பை தருகிறது.20 ஆண்டுகளில் தனுஷ், விஜய் சேதுபதி தமிழ்த் திரை உலகில் அழுத்தமாகத் தடம் பதித்திருக்கிறார்கள். செல்வராகவன் ,யுவன் ஷங்கர் ராஜா தொடர்ச்சியாக தமிழ்த் திரை உலகில் பயணப்பட்டு இருக்கவேண்டும் என்கிற கவலையும் புதுப்பேட்டை வழியாக நமக்கு எழுகிறது. நடிப்புக்கலைஞனாக தனுஷுக்கு புதுப்பேட்டை மாறுபட்ட  திரைப்படம்.படத்தில் பங்கு கொண்ட அத்துனை கலைஞர்களை வாழ்த்துகிறேன்.தயாரிப்பாளர் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகள்.

Tuesday, May 25, 2021

கேரள இடது ஜனநாயக முன்னணியின் இரண்டாம் வருகை

.இடது ஜனநாயக முன்னணி அரசு கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததை உலகளாவிய முற்போக்காளர்கள் சனநாயக எண்ணம் கொண்டோர்  பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.  


கேரளாவின் சமூக அரசியல் வரலாற்றை கவனிப்பவர்களுக்கு இரண்டாம் வருகை என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரிந்திருக்கும். 


கேரள வரலாற்றில் அதிகாரம் , நிலம் முதன்முறையாக உழைப்பாளி விவசாயிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதை ஆளும் அதிகாரவட்டம் விரும்பவில்லை. கல்வியில் சாதி மத தலையீடுகளை தவிர்க்க இஎம்ஸ்  தலைமையில் கம்யூனிஸ்ட் கடசி அரசு  பெருமுயற்சி எடுத்ததை  தனியார் கல்வி அதிபர்கள் விரும்பாமல் விமோசன சமரத்தை முன்னெடுத்தார்கள்.

இதை முறியடிப்பதற்காக  வர்க்க பலாபலத்தை புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  1979 ல் உருவாக்கியதுதான்  இடது ஜனநாயக முன்னணி . இதன் சூத்திரதாரி இ.எம்.எஸ்நம்பூதிரிபாட்.

கம்யூனிஸ்டுகள்  தலைமையிலான அரசை, இடது சனநாயக முன்னணி அரசை தொடர்ந்து ஐந்தாண்டுகள் ஆள விடாமல் எத்தனை எத்தனை  சூழ்ச்சிகள் எத்தனை எத்தனை  தோழர்கள் பலி கொள்ளப்பட்டார்கள். 

 கேரளாவில் வர்க்கப் போராட்டம் தீவிரமாக முடுக்கி விடப்பட்டது.விடப்பட்டும்  வருகிறது.

 இந்த சூட்சுமங்கள் எல்லாம் புரிந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,கேரள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், தேசிய காங்கிரஸ் கட்சி, அதன் தலைமை அதன் தோழர்கள்
தோழர் பினராயி விஜயன் தலைமையில் வியூகங்களை புனரமைத்து மீண்டும்  40 ஆண்டுகளுக்கு பிறகு இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் இரண்டாம் முறை தொடர்ந்து பொறுப்புக்கு வந்திருக்கிறது.

இதனை இரண்டாம் வருகை என்று கேரளா எளிமையாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கொண்டாட்டத்தின் தொடக்கமாக நம்முடைய தமிழக கேரள இந்திய அளவிலான இசைக்கலைஞர்கள் 50 பேர் இணையவெளியில் கலந்து கொண்ட ஒரு மாபெரும் கீதாஞ்சலி இசை நிகழ்வு  நடைபெற்றது. 

இரண்டாம் வருகையின் முதல் நிகழ்வு இந்த கீதாஞ்சலி இசை நிகழ்வு ஆகும் .

தமிழ்நாட்டின் கேரளாவின்  உலகப் புகழ் பெற்ற  கே. ஜே . ஜேசுதாஸ்
ஏ ஆர் ரகுமான் , டிரம்ஸ் சிவமணி,  சித்ரா , உன்னிகிருஷ்ணன் , சுஜாதா திரைக்கலைஞர்கள் மம்முட்டி ,மோகன்லால், ஜெயராம் என 50 கலைஞர்கள்  இணையவழியில் கலந்து கொண்ட அந்த மாபெரும் இசை நிகழ்வு இரண்டாம் வருகை பதவி ஏற்பின் மாபெரும் இசைக் கோலமாக அமைந்தது. கம்யூனிஸ்ட்டுகளுக்கு போராடவும் தெரியும் ; கலை இலக்கியங்களை கொண்டாடவும் தெரியும் என்பதற்கான சாட்சியம் இந்த கவிதாஞ்சலி நிகழ்வு . 

ஸ்ரீ நாராயணகுரு ,வயலார் ராமவர்மா,வள்ளத்தோள், ஒய்.என்.வி.க்ரூப் போன்ற போன்ற மகாகவிகள் முதல் நவீனக்கவிகளின் கவிதை   வரிகளை எடுத்துத்  தொடுத்துப் பாடினார்கள். கேரளாவின் நிலம் ,வானம் ,சூழல் ,போராட்டம்  என தொடக்கி 
முதலாளித்துவத்தின் முன் மண்டியிட மாட்டோம்; எங்கள் போராட்டம் தொடரும் தொடரும் என இசைவேள்வி நிகழ்த்தியதை கவனித்துக் கொண்டிருந்த பிரபல இயக்குநர் அடூர் கோபால கிருஷ்ணன் போல நாம் ஒவ்வொருவரும் புளகாங்கிதம் அடைந்தோம்.

பினராயி விஜயன்  தலைமையிலான பதவி ஏற்பு நிகழ்வை  பார்த்தவர்களுக்கு கேரளாவின் அரசியல் பண்பாட்டுத் தாக்கம் புரிந்திருக்கலாம் . அமைச்சர்கள் தனித்தன்மை உடையவர்களாக இருந்தார்கள் . அமைச்சர்கள் பொறுப்பேற்க அழைக்கப்பட்டு மேடை ஏறி வந்து  விழாவுக்கு வந்தவர்களைப்  பார்த்து  வணக்கம் செலுத்தியதும் கரங்களை உயர்த்தி செவ்வணக்கம்  சொல்லியதும் கேரளம் வழிகாட்டிய புதிய பண்பாட்டின் சுயமரியாதைத் தடம் துலங்கியதை காண முடிந்தது.

 பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிற முகமது ரியாஸ் பதவிகள் பதவியேற்பு மேடையில் முட்டியை உயர்த்தி செவ்வணக்கம் செலுத்தியது உணர்ச்சிகரமாக இருந்தது .

விழா தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியம் வந்துவிட்ட முதலமைச்சர் பினராயி விஜயன் கொரானா தனிநபர் இடைவெளியில் அமர்ந்திருந்தவர்களை  ஒவ்வொருவராக நேரடியாக பார்த்து வணக்கம் செலுத்தினார். 

 தமிழ்நாட்டின் நல்லெண்ணத் தூதுவராக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்  சார்பில்  பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்ற தொழில்துறை & தமிழ் வளர்ச்சி பண்பாட்டு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம்தென்னரசு கலந்துகொண்டு ஏ.எஸ்.பன்னிர்செல்வன் எழுதிய Karunanidhi A life நூலை  கேரள முதல்வரிடம் கையளித்து கேரள இடது ஜனநாயக முன்னணி அரசுக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.  
)) நன்றி : தீக்கதிர் நாளேடு /25.5.2021 (( 

Monday, May 10, 2021

சென்னையின் வயது : ஒரு லட்சம் ஆண்டு என்பது சரியா?



என் பால்ய காலங்களின் 1967 களிலிருந்து  சென்னை குறிப்பாக வடசென்னை நிலம் பற்றி அதன் மக்கள் ,வரலாறு, பண்பாடுகள்,சூழல்கள் , பற்றி இந்த சரிநிகர் யுடியூப் தளத்தில் முதல் பகுதியாகப் பேசி இருக்கிறேன் . தரவுகள் பற்றி பேசுகையில் சில பிழைகள் நேர்ந்திருப்பதை பின்னர் உணர்ந்தேன். கேளுங்கள் ; கருத்துக்கள்,பின்னூட்டங்கள் வழி விவாதியுங்கள்

Tuesday, November 17, 2020

சோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்

 


திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் சுப்பிரமணியம் கிருஷ்ணசாமி 1920 நவம்பர் 12 ல் பிறந்தார். 2006 நவம்பர் 9 ல் நாடறியப்பட்ட வல்லிக்கண்ணனாக சென்னையில் இயற்கை அடைந்தார்.

100 சிறுகதைகள் ,  13 நாவல்கள் , சரஸ்வதி காலம், தீபம் யுகம் போன்ற இதழ் தொகுப்புகள் , புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்கு பின் உரைநடை, தமிழில் சிறுபத்திரிகைகள்  உள்ளிட்ட கட்டுரை தொகுதிகள் , டால்ஸ்டாய் ,கார்க்கி குறித்த படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் , அமரவேதனை கவிதை தொகுப்பு ,நாடகம் ,கடித இலக்கியம் என்று 86 நூல்களை 65 ஆண்டுகால தம் எழுத்து இயக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கு கையளித்திருந்தார்.

சென்னை வானொலிக்காக கவிஞர் ரவிசுப்பிரமணியனிடம் வல்லிக்கண்ணன் 12 மணி நேர அற்புதமான பேட்டியை தான் இறப்பதற்கு ஓராண்டு முன் அளித்திருக்கிறார் . இது நூலாக தொகுக்கப்பட இருக்கிறது.  வல்லிக்கண்ணன் குறித்த சிறந்த ஆவணமாக இந்த நூல் அமையும். 

1939 ல் பிரசண்டவிகடன் இதழில் சந்திரக்காந்தக்கல் என்கிற தன் முதல் கதையை எழுதிய வல்லிக்கண்ணனின்  இறுதி எழுத்தாக அமைந்தது ஒரு கவிதை நூலிற்கு அவர் எழுதிய முன்னுரையாகும். அ. உமர் பாரூக் எழுதிய நல்லாப் புரியும் நவீனக் கவிதைகள் என்பது வல்லிக்கண்ணன் இறுதி எழுத்து இடம் பெற்ற நூலாகும்.

வாழ்நாள் முழுவதும் அறத்தின் பால் நிற்கின்ற படைப்பாளியாக யாரிடமும் எதன் பொருட்டும் தயை கோராத சுயமரியாதை கொண்டவராக வாழ்ந்தார் வல்லிக்கண்ணன்.

எழுத வருகின்ற இளம் படைப்பாளர்களை அன்போடு வழி நடத்தும் தாயுள்ளம் கொண்டவர். தமிழ்நாட்டின் ஏதோ ஒர் ஊரில் வல்லிக்கண்ணனின் வழிநடத்தலை பாராட்டை முன்னுரையை பெற்ற ஒரு படைப்பாளி இருந்து கொண்டிருப்பார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விட்டு வெளிவந்து சென்னையில் வாழ்வதற்கான இடம் தேடிய பொழுது சில காலம் சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் தான் குடியிருந்த வீட்டில் தங்க வைத்து ஆதரித்தவர் வல்லிக்கண்ணன்.

கடல்புரத்தில் , எஸ்தர் ,போன்ற பாராட்டு பெற்ற படைப்புகளையும்
எம்.எல் என்ற கடுமையாக விமர்சிக்கப்பட்ட நாவலையும் தந்த
உ.ராமச்சந்திரனிற்கு வண்ணநிலவன் என தமிழ் எழுத்துலகிற்கான பெயர் வைத்தார்.

தன் தொடக்க காலம் முதல் இறுதி வரை அநீதிகளை எதிர்ப்பவராக அவ்வாறு எதிர்க்கும் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு நீதி கோருபவராக இருந்திருக்கிறார் வல்லிக்கண்ணன்.

ஏவிஎம் ஸ்டுடியோ அதிபர் ஏ.வி.மெய்யப்பசெட்டியாரிடம் மகாகவி பாரதியின் படைப்புகள் சிறைபட்டு கொண்டிருந்த 1948 காலத்தில் , பாரதியின் படைப்புகளை மக்கள் எவரும் பயன்படுத்தும் பொருட்டு அரசை வற்புறுத்தி நாட்டுடைமையாக்குவதற்கான பெரும் இயக்கம் அன்று நடந்தது . அன்றைய இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர்களுள் ஒருவர் தோழர் ஜீவா முன் நின்று அரசியல் ரீதியிலான குரல் கொடுத்தார். நாரணதுரைகண்ணன் , வ. ரா , அவ்வை சண்முகம் ,திருலோகசீதாராம் போன்ற அன்றைய புகழ் பெற்ற   படைப்பாளர்களை திரட்டி படைப்பாளர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர் வல்லிக்கண்ணன்.

 2001 ல் புதுமைப்பித்தன் பெயரை எவர் ஒருவரும் பயன்படுத்தக்கூடாது என்று காலச்சுவடு தூண்டுதலில் தினகரி சொக்கலிங்கம் கண்மணி கமலாவிற்கு நூல் மீதான பதிப்புரிமை வழக்கு ஒன்று தொடுத்தார். இதனை எதிர்த்து புதுமைப்பித்தன் தமிழ்ச்சொத்தா? தனிச் சொத்தா? என முகிழ்த்த இயக்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மைய அச்சாக இருந்தது . சிகரம் ச. செந்தில்நாதன், இரா.தெ.முத்து ஒருங்கிணைப்பில், பலபல படைப்பாளர்களை ஒருங்கிணைத்து , பல வடிவங்களில் புதுமைப்பித்தன் படைப்புகளை நாட்டுடைமையாக்கப் போராடி வெற்றி பெற்றது. இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இது குறித்த கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று நீதியின் பால் உறுதியோடு வல்லிக்கண்ணன் நின்றார் .  

சுயசாதி அபிமானம் அற்றவராகவும் சாதிகள் மீது விமர்சன கண்ணோட்டம் கொண்டவராகவுமே வாழ்ந்தார். 1996 ல் திருநெல்வேலியில் தமுஎச அவருக்கு எடுத்த பாராட்டு விழாவிற்கு வந்த வல்லிக்கண்ணனை, சுயசாதிக்காரர்கள் சிலர் சந்தித்து தாங்கள் நடத்தும் பாராட்டு விழாவிற்கு அழைத்திட , அந்த அழைப்பை திடமாக மறுத்துவிட்டு , தனது எழுத்து குறிப்பிட்ட சாதிக்கு சொந்தமானவைகள் அல்ல என்றும் அவைகள் தமிழ் மக்களுக்கானது என்று மறுத்துப் பேசி  வந்தவர்களை அனுப்பி விட்டதை எழுத்தாளர் நாறும்பூநாதன் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

1950களின் தமிழ் கலை இலக்கியப்போக்குகளை தம் வாழ்வின் அனுபவப் பின்னணியில் வல்லிக்கண்ணன் பகிர்வது இன்றும் பொருந்தி வருகின்றது. வாழ்வு குறித்து அவரின் பார்வையை புரிந்து கொள்ள உதவுகிறது .

வல்லிக்கண்ணன் சொல்கிறார் :

எழுத்தாளர்கள் பிறர் எழுதுவதை படிக்க மனமற்றவர்களாக வளர்வதை உணர்ந்தோம்.அறிவுப்பசியை அவ்வளவாகக் காணவில்லை.
பத்திரிக்கைகாரர்களும் புத்தக வெளியீட்டார்களும் பிஸினஸ் பிஸினஸ் என்று உச்சரிக்க கற்றுக் கொண்டார்கள். ஆகவே நான் யாரையும் சந்திக்க சென்று காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. எழுத்தை நம்பி உயிர் வாழ இயலாது.

Cynicism என்கிற சுயநல தேடலிற்கு நான் ஒத்துழைத்து இருந்தால் சினிமா உலகம் எனக்கு பணம் தர தயாராக இருந்தது. நான் வாழும் முறை தனி ரகமானது. பிறர் என்னை ஒத்துக்கொள்ள வேண்டுமென நான் விரும்பவில்லை. (1958 சரஸ்வதி இதழ் )

வாழ்வின் மன அலைகளை எண்ண ஓட்டங்களை காலத்தின் அனுபவம் சார்ந்து பதிவு செய்தவைகள் வல்லிக்கண்ணன் கதைகள் நாவல்கள் . இப்படைப்புகள் காலத்தின் அழியாத ஆவணமாக வாசகர் முன் இருக்கின்றன. இவைகளை மீளுருவாக்கம் செய்து பரவலான வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். பாரதி, புதுமைப்பித்தன் மீதான ஈர்ப்பின் காரணமாக எளிய மொழிநடையை தன் படைப்புமுறைமையாக மாற்றிக் கொண்டார்.

காலவேகத்தில் கவிதையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் புதுக்கவிதை இயக்கம் . அது குறித்த வரலாற்றை தீபம் இதழில் 1972 நவம்பர் முதல் 1975 மே வரை எழுதினார். பாரதிக்குப் பிறகு கொஞ்சகாலம் தேக்கமுற்றிருந்த புதுக்கவிதை 1940 ல் கலாமோகினி இதழ் 1950 களில் எழுத்து இதழ் , உள்ளடக்கம் சார்ந்து வானம்பாடி இதழ் இயக்கம் வழியாக புதுக்கவிதை இயக்கம் நிகழ்ந்த வரலாற்றுக் காலத்தை எழுதியிருக்கிறார்.

புதுக்கவிதை இயக்கத்தில் வல்லிக்கண்ணன் முக்கிய கண்ணியாக இயங்கியமையை இந்த நூலின் வழியாக நாம் உணர்ந்து கொள்ளலாம். மகத்தான
புதுக்கவிதை இயக்க வரலாற்றை எழுதிய பங்களிப்பிற்காக புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூல் 1978 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெற்றது.

நவசக்தியிலும் ஜனசக்தியிலும் இணையாசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தோழர் கே. ராமநாதன் வழியாக சோவியத் இலக்கியங்கள் மீது ஆர்வம்  கொண்டு வாசித்தார்;மொழிபெயர்த்தார் வல்லிக்கண்ணன்.

நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சுவாசிக்க இயலாமல் சாப்பிட இயலாமல்  2006 நவம்பர் 9 இரவு ஒன்பதரை மணிக்கு இயற்கை அடைந்தார் வல்லிக்கண்ணன்.

அடுத்த சில நாட்களில் கவிஞர் இளையபாரதி உதவியில் தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தோடு இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வல்லிகண்ணனுக்கு அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்தது. அதில் பேசிய சிகரம் ச. செந்தில்நாதன் ,
ச.தமிழ்செல்வன், சின்னக்குத்தூசி, கவிஞர் இன்குலாப், பாலம் கல்யாணசுந்தரம் பேராசிரியர் வி. அரசு, இரா. தெ. முத்து போன்ற      படைப்பாளிகள் பலரும் வல்லிக்கண்ணன் படைப்புகளை நாட்டுடமையாக்கி ,வல்லிகண்ணனை ஆதரித்த மறைந்த அவர் அண்ணன் கோமதி நாயகம் வாரிசுகளை பாதுகாக்க வேண்டும் என பேசினார்கள்.

படைப்பாளர்கள் குரல் முதல்வர் கலைஞர் காதுகளுக்குக் கேட்டது. 2008 மார்ச் மாதம் சு. சமுத்திரம் ,விந்தன் ,வல்லிக்கண்ணன் உள்ளிட்ட பதினெட்டு படைப்பாளர்கள் படைப்புகளை நாட்டுடமையாக்கினார் முதல்வர் கலைஞர் .வல்லிக்கண்ணன் குடும்பத்திற்கு 5 லட்சம் பரிவுத் தொகை கிடைத்தது.

வல்லிக்கண்ணன் அவர்களுக்கு நேரடி வாரிசு இல்லை என்பதால் பரிவுத்தொகையை அவர் அண்ணன் வாரிசுகளுக்கு தருவதற்கான வாரிசுரிமை சான்றிதழ் பெறுவதற்கு தமுஎசவின் தென்சென்னை மாவட்ட திருவல்லிக்கேணி கிளை நிர்வாகிகள் பிரின்ஸ்கஜேந்திரபாபு, வீரபெருமாள், பழனி போன்றோர்   
ச.செந்தில்நாதனிற்கு உதவினார்கள்.  

இருபதாம் நூற்றாண்டிற்கும் இருபத்தோராம் நூற்றாண்டிற்குமான
தமிழ் இலக்கிய வரலாற்று தொடர்ச்சியாக பாலமாக வல்லிக்கண்ணனின் படைப்புகள் இருக்கின்றன. புதுமைப்பித்தனின் யதார்த்தவாதப்பார்வை கொண்ட , சோசலிச முற்போக்குப் பார்வையை புரிந்து கொண்டு அதனோடு இயைந்து பணியாற்றிய வல்லிக்கண்ணனின் படைப்புகளை பரவலான வாசிப்பிற்கும் புரிதலிற்கும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய அரசியல் இயக்கத்திற்கு உண்டு.    

கட்டுரையாளர் : ஒருங்கிணைப்பாளர் ; எழுத்தாளர் வல்லிக்கண்ணன் விழாக்குழு .
 தொடர்பிற்கு  era.the.muthu@gmail.com

Sunday, September 20, 2020

புலம்பெயர் தொழிலாளிகளும் தொழிற்பேட்டைகளும்

 



அடுத்த கதை- ஆதவன் தீட்சண்யா

தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளை ஸ்கேன் வாசிப்பில் வாசித்த பொழுது எட்டாவது கதையான இந்தக் கதை தரவு ஒன்றிற்காக அவசியமாக இருந்தது.

மீதிக் கதைகளை அடுத்தடுத்து எழுதுவோம்.     

தொழிற்பேட்டையின் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு பணிக்கு ஆட்களை தரும் மேன்பவர் சப்ளை ஏஜென்சிகள் வழி தொழிற்நுட்பம் ஏதும் தெரியாத ஜக்லால் எனும் வடமாநில புலம்பெயர் தொழிலாளி வேலைக்கு வந்த சிலநாட்களில் தொழிற்சாலையின் எந்திர  விபத்தில் சிக்கி உடல் வேறு கால்  வேறு என அறுபட்டு இறந்து போகிறான்.

தொழிலாளியின் இறப்பை மறைக்கும் கூட்டுச்சதியை மருத்துவரும் மருத்துவமனை ஊழியரும்  அறிகிறார்கள் .

இறந்து  போன ஜக்லாலின் ஐடி கார்டை வைத்துக் கொண்டு , ஜக்லாலை அறிய வருகிறார் மருத்துவ ஊழியர் .

அப்படி ஒரு நபரே தங்களிடம் வேலை பார்க்கவில்லை என தொழிற்சாலை நிர்வாகிகளும்  மேன்பவர் சப்ளை ஏஜென்சிகளும் சொல்கின்றனர்.

ஜக்லாலின் படம் போட்ட ஐடி கார்டை காட்டி இதற்கு பதிலென்ன என கேட்கிறார் மருத்துவ ஊழியர்.

ஒருவரின் படத்திற்கு பல்வேறு பெயரிலான ஐடி கார்ட்கள் இருப்பதை காட்டி,மேன்பவர் சப்ளை நிறுவனங்களில் இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதான் என்று சொல்லி விட்டு, கடந்து போவதை கேட்டு  பதை பதைக்கிறார் மருத்துவ  ஊழியர் . 

ஓர் எழுத்தாளராக மருத்துவ ஊழியர் இருப்பதால் முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டல் வடிவத்தை அறிந்து அதிர்கிறார்.

ஆற்றாமையை இயலாமையை கதையில் சொல்வதன் வழி ஆறுதல் தேட முயல்வதோடு கதை முடிகிறது.

புலம்பெயர் மக்கள் இவ்வாறான கடுமையான சுரண்டலிற்கு ஆளாவதை   பொது சமூகம் அறியாமல் இருக்கிறது.

சுரண்டலையும் அறியாமையையும் பொது சமூகப் பார்வைக்கு வைப்பது எழுத்தின் கடமை என்பதை இக்கதை உணர்த்துகிறது. வாழ்த்துக்கள் ஆதவன் தீட்சண்யா . 

அற்புதமான வடிவில் கருப்பு பிரதி  112 பக்கத்தில் 100 விலையில்  தொகுப்பை இந்த சனவரியில் வெளியிட்டுள்ளது . 

Tuesday, April 7, 2020

மீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்

கீரனூர் ஜாகிர்ராஜாவின்  5 ஆவது நாவலான மீன்குகைவாசிகள் நாவலை ஏற்கனவே 28.3.2011 ல் வாசித்திருக்கிறேன்.இந்த கொரானா ஊரடங்கு காலத்தின் கடந்த நான்கு நாட்களாக வீட்டு வேலைகள் போக, 13 ஆவது நாளான  நேற்று  06. 4.2020  பிற்பகல் 2.45 மணிக்கு இரண்டாவது முறையாக நாவலை வாசித்து முடித்தேன்.இந்தப் பத்தாண்டு காலத்தில் சாருநிவேதிதாவின் ஜீரோடிகிரி பதிப்பகம் உள்ளிட்டு  வெவ்வேறு பதிப்பகங்கள் சார்பாக இந்த நாவல் நான்கு பதிப்புகள்  கண்டுள்ளன  .

திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி தாராபுரம் சாலையின் இடையே இருக்கும் ஊர் கீரனூர்.சண்முகநதி  இந்த ஊரின் வழியாக அமராவதி ஆற்றில் போய் கலக்கும் முனை கீரனூர்.  ஆலங்குளம் எனும் மீன்பிடிக்குளம்  குளத்தம்மாவாக வாழ்வளிக்கும் இந்த ஊரின் வாழ்வியல் சித்திரம்தான் மீன்குகைவாசிகள் நாவல். 1975 களின் வாழ்வு நாவலின் காலமாக உணரமுடிகின்றது.

உடல்  எரிக்கும் வெயிலும் , வியர்வைக் கரிப்பும் ,காற்றும் ,குளமும் ,குளத்தின் மீன்களும் ,மீன்கவுச்சியும், அழுகையும் ,கோபமும் ,சாபமும் ,மகிழ்வும் ,பாலியல் உரையாடல்களும் , காதலும், மதம் மாறுதலும் ,மதம் மாறினாலும் தொடரும் சாதிய இழிவுகளும் ,  பங்களாத்தெருவின் புலம்பெயர் தொழிலும் அதன் ஒளிவு மறைவுகளும் , முதலாளிமார்களின் பாலியல் வேட்டையும், பள்ளிவாசல் தர்கா சார்ந்த  முரண்பாடுகளும்,ஆணவக்  கொலையும் நாவலின் அத்தியாயங்களாக நம் வாசிப்பிற்கு வருகின்றன.

மார்க்கம் ஒன்றானாலும் வடக்குத்திசை மீன்காரத் தெருவின் எளிய மக்களை ஏற்றுக் கொள்ளாத பள்ளிவாசலில் ஆதிக்கம் செலுத்தும் தெற்குதிசை பங்களா தெருவின் பொருளாதாரமும்  அதிகாரமும் காட்சி சித்திரங்களாகின்றன. குளத்தை அம்மாவாக ஆமீனா விளிப்பதன் வழி இஸ்லாமாக மாறினாலும் மாறாத தங்களின் பூர்வீக நினைவுகளுமாக நாவல் பயணிக்கிறது.

மீன்காரத்தெரு ,பங்களாத்தெரு,செக்காட்டும் செக்காதெரு,பறத்தெரு என ஒவ்வோர் தெருவின் தன்மை ,வாழும் மனிதர்களின் இயல்பு என யாவற்றையும் காட்சிப்படுத்துகிறார் கீரனூர் ஜாகிர்ராஜா.
  ஆமீனா. நசீர் ,ஷேக்கா, சுபைதா,கணீர்காசிம்,ரஜியா,நைனார்முகமது,சண்முகம் ,நர்கீஸ் ,குப்பி,கூனன் லியாத்,நாச்சம்மை,மருதவீரன் போன்ற பாத்திரங்களின் வழியாக அவர்களின் உரையாடல் வழியாக ஊரின் சமூகத்தின் தோற்றத்தை அறிய முடிகின்றது.

கணீர் காசிம் ,ரஜியா,ஷேக்கா,நாவிதன்சண்முகம்,போன்ற பாத்திரங்கள் வாழ்வை சமூகத்தை வெல்ல முடியாத அதன் கைதிகளாக மாறி அவதிப்படுவதை வாசிக்க வாசிக்க அவர்கள் பின்னாலே மனம் சென்று  உழன்றாடுகிறது.

வட்டாரமொழி வழக்கில் நாவல் எழுதப்பட்டாலும் நாவலைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏதும் இல்லை. லே/ஏட்டி/பூட்டி/ஏனம்/ஆணம் போன்ற சொல்லில் கிளைக்கும் மொழி நடைகள் குமரி மாவட்ட வட்டார மொழிநடையோடு ஒட்டிப்  போகிறது . ஜாகிரோடு இதுபற்றி பேசிய  பொழுது ஏதோ ஒரு  காலத்தில் நெல்லை குமரி மாவட்ட எல்லை பக்கமாக இருந்து திண்டுக்கல் கீரனூர் வந்தவர்களாக மீன்காரத்தெருமக்கள்  இருப்பார்கள் தோழர் என்றார்.

வட்டார மொழிநடையோடு படைப்பாளியின் மொழிநடையும் இணைந்து நாவலை ஒரு நவீனப் பிரதியாக மாற்றி விடுகிறது
சுபஹ் ,இஷா ,ஜக்காத்,மினார்,பாங்கு ,ஜனாப்,ஜனாபா ,ஒலு,தீதார் ,
முத்தவல்லி,சால் போன்று நூற்று இருபது இஸ்லாம் வாழ்வியல் சார்ந்த சொற்களுக்கு பொருள் சொல்லும் பின்னிணைப்பு இஸ்லாம்   
வாழ்வியல் சொல்லாடலைப்  புரிந்து கொள்ள உதவுகிறது.

 'ஈருசுருக்காரி தர்காவை கெவர்மெண்ட் ஆர்டரோடு வந்து   இடிக்கிறாங்க' என்று மோதி நூர்தின் சொல்லி நாவல் முடியும் இடத்திலிருந்து ,அடுத்த நாவலிற்கான களத்தை துலக்கப்படுத்தி இருக்கிறார் ஜாகிர்ராஜா.இதன் தொடர்ச்சியை எழுதுவீர்களா ஜாகிர்?

வெளியீடு ஆழி பப்ளிஷர்ஸ் /2010 பதிப்பு விலை 140.00
             



Sunday, February 9, 2020

புரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2

நாடோடிகள் 2 ன் சுவரொட்டியைப் சென்னையில் பார்த்தப் பொழுதே பரவசம் தொற்றிக் கொண்டது.சசிகுமார்,அஞ்சலி,பரணியின் நிறைந்த சிரிப்பு மனதில் பரவசத்தை உருவாக்கியது.கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் என்று பி.சமுத்திரக்கனி இணைந்த, நாடோடிகள் 2 எதிர்பார்ப்பை எகிறவிட்டது.

பரவசமும் சிரிப்பும் கோபமும் வெடிப்பும் ஆவேசமும் கொண்டு மனதை வழி நடத்துகிறது நாடோடிகள் 2 .சாதிக்கு எதிராக , ஆணவக் கொலைக்கு எதிராக நாமாவோம் என்ற முழக்கம் உணர்வில் கலந்து பெரும் கொந்தளிப்பை  ஏற்றி விட்டிருக்கிறது.

 சம்போ சிவசிவ சம்போ / உறங்கும் மிருகம் எழுந்து கிடக்கும்/தொடங்கும் கலகம் துணிந்து கிடக்கும்/துடிக்கும் இதயம் கொழுந்து விடட்டும் என்ற நாடோடிகள் படத்தின் யுகபாரதியின் தீம் பாடல் நாடோடிகள் 2 லும் இடம் பெற்று , சாதியில் உறைந்து கிடக்கும் பகைமை அழிக்க பெரும் ஆவேசத்தை கிளறி விட்டிருக்கிறது.

புரட்சியை புரட்சியால் கொண்டாடுவோம் ,காட்சி முழுவதும் பரவி நிற்கிறது. சாதி அரசியலுக்கு எதிரான தொழிலாளிவர்க்கப் பார்வையை படம் கொண்டாடுகிறது.  இனம்,சுயசாதி அபிமானத்திற்கு எதிராக வசனங்களால் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. தோழர்-ஜீவா-செங்கொடி-சிவப்பு வண்ணம்-சிவப்பு எண்ணம்-தமிழ் உணர்வு படத்தின் பாத்திரங்களாக கலையின் அரசியலாக வெளிப்பட்டிருக்கிறது.

 வாழும் காலத்தின் இழிவுகளை , முதலாளித்துவ அரசியல் சீர்கேடுகளை அச்சமின்றி விமர்சிக்கும் மெகா போன் புரட்சியாளர் பாத்திரம் (மூர்த்தி) காவியப்பாத்திரமாக மிளிர்கிறது.

சமயோசித அறிவு , போராட்டக்குணம்,கலைப்பார்வை கொண்ட ஆளுமையாக அங்காடித்தெரு அஞ்சலி மனம் கவர்கிறார். துள்ளல், துடிப்பு ஆவேசம் , புரட்சியின் புத்துயிர்ப்பாக சசிகுமார் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்.ரெட் சல்யூட் தோழர் சசிகுமார்.

செங்கொடியின் குடும்பம் அன்பால் வனையப்பட்ட , புரட்சி புரிந்துணர்வுள்ள குடும்பமாக அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சுயசாதி தீக்குள் சிக்கிக் கொண்ட ஜீவாவை பாதுகாக்க,  கம்பு சுற்றி களமாடும் செங்கொடிவ்யின் அப்பா (ரவிச்சந்திரன்) அம்மா ஸ்ரீரஞ்சனி பாத்திரம் கச்சிதம்.

சசிகுமாரின் தாய்மாமா ஞானசம்பந்தன்,அம்மா துளசி, சுபாஷினி கண்ணன் அவரவர் இயல்பான நடிப்பில் ஒளிர்கிறார்கள்.
 சின்னச் சின்ன சொல் எடுத்து புரட்சிக்கு கட்டியம் கூறி இருக்கிறது யுகபாரதியின் தீம் பாடல் வரிகள்.வாழ்த்துகள் தோழா.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, ஏ.எல்.ரமேஷின் எடிட்டிங் படத்திற்கு துணை நிற்கிறது.
தயாரிப்பாளர் நந்தகோபால் மிகுந்த வணக்கத்திற்குரியவர்.செவ்வணக்கம் இயக்குநர் பி.சமுத்திரக்கனி.

தமிழ்நாட்டின் இடதுசாரி கட்சிகள்- முற்போக்கு இயக்கங்கள்,தொழிற்சங்கங்கள்,இளைஞர்,பெண்ணிய அமைப்புகள்,தமிழ் உணர்வாளர்கள் நாடோடிகள் 2 திரைப்படத்தை கொண்டாட வேண்டும்.திரையரங்கில் படத்தை சில வாரங்கள் ஒட வைக்க வேண்டும்.குற்றம் குறை பார்க்காமல் படத்தின் கலைக்காக அரசியலிற்காக, தமிழகத்தின் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்காக இந்தப் பொறுப்பை ஏற்றாக வேண்டும்.

செய் புரட்சி செய்/துணிந்து செய்/விரைந்து செய்