Tuesday, November 17, 2020

சோசலிச எதார்த்த எழுத்தின் நண்பர் வல்லிக்கண்ணன்

 


திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் சுப்பிரமணியம் கிருஷ்ணசாமி 1920 நவம்பர் 12 ல் பிறந்தார். 2006 நவம்பர் 9 ல் நாடறியப்பட்ட வல்லிக்கண்ணனாக சென்னையில் இயற்கை அடைந்தார்.

100 சிறுகதைகள் ,  13 நாவல்கள் , சரஸ்வதி காலம், தீபம் யுகம் போன்ற இதழ் தொகுப்புகள் , புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும், பாரதிக்கு பின் உரைநடை, தமிழில் சிறுபத்திரிகைகள்  உள்ளிட்ட கட்டுரை தொகுதிகள் , டால்ஸ்டாய் ,கார்க்கி குறித்த படைப்புகளின் மொழிபெயர்ப்புகள் , அமரவேதனை கவிதை தொகுப்பு ,நாடகம் ,கடித இலக்கியம் என்று 86 நூல்களை 65 ஆண்டுகால தம் எழுத்து இயக்கத்தில் தமிழ் வாசகர்களுக்கு கையளித்திருந்தார்.

சென்னை வானொலிக்காக கவிஞர் ரவிசுப்பிரமணியனிடம் வல்லிக்கண்ணன் 12 மணி நேர அற்புதமான பேட்டியை தான் இறப்பதற்கு ஓராண்டு முன் அளித்திருக்கிறார் . இது நூலாக தொகுக்கப்பட இருக்கிறது.  வல்லிக்கண்ணன் குறித்த சிறந்த ஆவணமாக இந்த நூல் அமையும். 

1939 ல் பிரசண்டவிகடன் இதழில் சந்திரக்காந்தக்கல் என்கிற தன் முதல் கதையை எழுதிய வல்லிக்கண்ணனின்  இறுதி எழுத்தாக அமைந்தது ஒரு கவிதை நூலிற்கு அவர் எழுதிய முன்னுரையாகும். அ. உமர் பாரூக் எழுதிய நல்லாப் புரியும் நவீனக் கவிதைகள் என்பது வல்லிக்கண்ணன் இறுதி எழுத்து இடம் பெற்ற நூலாகும்.

வாழ்நாள் முழுவதும் அறத்தின் பால் நிற்கின்ற படைப்பாளியாக யாரிடமும் எதன் பொருட்டும் தயை கோராத சுயமரியாதை கொண்டவராக வாழ்ந்தார் வல்லிக்கண்ணன்.

எழுத வருகின்ற இளம் படைப்பாளர்களை அன்போடு வழி நடத்தும் தாயுள்ளம் கொண்டவர். தமிழ்நாட்டின் ஏதோ ஒர் ஊரில் வல்லிக்கண்ணனின் வழிநடத்தலை பாராட்டை முன்னுரையை பெற்ற ஒரு படைப்பாளி இருந்து கொண்டிருப்பார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை விட்டு வெளிவந்து சென்னையில் வாழ்வதற்கான இடம் தேடிய பொழுது சில காலம் சென்னை கிருஷ்ணாம்பேட்டையில் தான் குடியிருந்த வீட்டில் தங்க வைத்து ஆதரித்தவர் வல்லிக்கண்ணன்.

கடல்புரத்தில் , எஸ்தர் ,போன்ற பாராட்டு பெற்ற படைப்புகளையும்
எம்.எல் என்ற கடுமையாக விமர்சிக்கப்பட்ட நாவலையும் தந்த
உ.ராமச்சந்திரனிற்கு வண்ணநிலவன் என தமிழ் எழுத்துலகிற்கான பெயர் வைத்தார்.

தன் தொடக்க காலம் முதல் இறுதி வரை அநீதிகளை எதிர்ப்பவராக அவ்வாறு எதிர்க்கும் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு நீதி கோருபவராக இருந்திருக்கிறார் வல்லிக்கண்ணன்.

ஏவிஎம் ஸ்டுடியோ அதிபர் ஏ.வி.மெய்யப்பசெட்டியாரிடம் மகாகவி பாரதியின் படைப்புகள் சிறைபட்டு கொண்டிருந்த 1948 காலத்தில் , பாரதியின் படைப்புகளை மக்கள் எவரும் பயன்படுத்தும் பொருட்டு அரசை வற்புறுத்தி நாட்டுடைமையாக்குவதற்கான பெரும் இயக்கம் அன்று நடந்தது . அன்றைய இயக்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அதன் தலைவர்களுள் ஒருவர் தோழர் ஜீவா முன் நின்று அரசியல் ரீதியிலான குரல் கொடுத்தார். நாரணதுரைகண்ணன் , வ. ரா , அவ்வை சண்முகம் ,திருலோகசீதாராம் போன்ற அன்றைய புகழ் பெற்ற   படைப்பாளர்களை திரட்டி படைப்பாளர்களின் குரலை ஒலிக்கச் செய்தவர் வல்லிக்கண்ணன்.

 2001 ல் புதுமைப்பித்தன் பெயரை எவர் ஒருவரும் பயன்படுத்தக்கூடாது என்று காலச்சுவடு தூண்டுதலில் தினகரி சொக்கலிங்கம் கண்மணி கமலாவிற்கு நூல் மீதான பதிப்புரிமை வழக்கு ஒன்று தொடுத்தார். இதனை எதிர்த்து புதுமைப்பித்தன் தமிழ்ச்சொத்தா? தனிச் சொத்தா? என முகிழ்த்த இயக்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் மைய அச்சாக இருந்தது . சிகரம் ச. செந்தில்நாதன், இரா.தெ.முத்து ஒருங்கிணைப்பில், பலபல படைப்பாளர்களை ஒருங்கிணைத்து , பல வடிவங்களில் புதுமைப்பித்தன் படைப்புகளை நாட்டுடைமையாக்கப் போராடி வெற்றி பெற்றது. இந்த இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு இது குறித்த கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்று நீதியின் பால் உறுதியோடு வல்லிக்கண்ணன் நின்றார் .  

சுயசாதி அபிமானம் அற்றவராகவும் சாதிகள் மீது விமர்சன கண்ணோட்டம் கொண்டவராகவுமே வாழ்ந்தார். 1996 ல் திருநெல்வேலியில் தமுஎச அவருக்கு எடுத்த பாராட்டு விழாவிற்கு வந்த வல்லிக்கண்ணனை, சுயசாதிக்காரர்கள் சிலர் சந்தித்து தாங்கள் நடத்தும் பாராட்டு விழாவிற்கு அழைத்திட , அந்த அழைப்பை திடமாக மறுத்துவிட்டு , தனது எழுத்து குறிப்பிட்ட சாதிக்கு சொந்தமானவைகள் அல்ல என்றும் அவைகள் தமிழ் மக்களுக்கானது என்று மறுத்துப் பேசி  வந்தவர்களை அனுப்பி விட்டதை எழுத்தாளர் நாறும்பூநாதன் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

1950களின் தமிழ் கலை இலக்கியப்போக்குகளை தம் வாழ்வின் அனுபவப் பின்னணியில் வல்லிக்கண்ணன் பகிர்வது இன்றும் பொருந்தி வருகின்றது. வாழ்வு குறித்து அவரின் பார்வையை புரிந்து கொள்ள உதவுகிறது .

வல்லிக்கண்ணன் சொல்கிறார் :

எழுத்தாளர்கள் பிறர் எழுதுவதை படிக்க மனமற்றவர்களாக வளர்வதை உணர்ந்தோம்.அறிவுப்பசியை அவ்வளவாகக் காணவில்லை.
பத்திரிக்கைகாரர்களும் புத்தக வெளியீட்டார்களும் பிஸினஸ் பிஸினஸ் என்று உச்சரிக்க கற்றுக் கொண்டார்கள். ஆகவே நான் யாரையும் சந்திக்க சென்று காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. எழுத்தை நம்பி உயிர் வாழ இயலாது.

Cynicism என்கிற சுயநல தேடலிற்கு நான் ஒத்துழைத்து இருந்தால் சினிமா உலகம் எனக்கு பணம் தர தயாராக இருந்தது. நான் வாழும் முறை தனி ரகமானது. பிறர் என்னை ஒத்துக்கொள்ள வேண்டுமென நான் விரும்பவில்லை. (1958 சரஸ்வதி இதழ் )

வாழ்வின் மன அலைகளை எண்ண ஓட்டங்களை காலத்தின் அனுபவம் சார்ந்து பதிவு செய்தவைகள் வல்லிக்கண்ணன் கதைகள் நாவல்கள் . இப்படைப்புகள் காலத்தின் அழியாத ஆவணமாக வாசகர் முன் இருக்கின்றன. இவைகளை மீளுருவாக்கம் செய்து பரவலான வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டும். பாரதி, புதுமைப்பித்தன் மீதான ஈர்ப்பின் காரணமாக எளிய மொழிநடையை தன் படைப்புமுறைமையாக மாற்றிக் கொண்டார்.

காலவேகத்தில் கவிதையில் இயல்பாக ஏற்பட்ட ஒரு பரிணாமம் புதுக்கவிதை இயக்கம் . அது குறித்த வரலாற்றை தீபம் இதழில் 1972 நவம்பர் முதல் 1975 மே வரை எழுதினார். பாரதிக்குப் பிறகு கொஞ்சகாலம் தேக்கமுற்றிருந்த புதுக்கவிதை 1940 ல் கலாமோகினி இதழ் 1950 களில் எழுத்து இதழ் , உள்ளடக்கம் சார்ந்து வானம்பாடி இதழ் இயக்கம் வழியாக புதுக்கவிதை இயக்கம் நிகழ்ந்த வரலாற்றுக் காலத்தை எழுதியிருக்கிறார்.

புதுக்கவிதை இயக்கத்தில் வல்லிக்கண்ணன் முக்கிய கண்ணியாக இயங்கியமையை இந்த நூலின் வழியாக நாம் உணர்ந்து கொள்ளலாம். மகத்தான
புதுக்கவிதை இயக்க வரலாற்றை எழுதிய பங்களிப்பிற்காக புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் நூல் 1978 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதமி விருது பெற்றது.

நவசக்தியிலும் ஜனசக்தியிலும் இணையாசிரியராகப் பணியாற்றிய எழுத்தாளர் தோழர் கே. ராமநாதன் வழியாக சோவியத் இலக்கியங்கள் மீது ஆர்வம்  கொண்டு வாசித்தார்;மொழிபெயர்த்தார் வல்லிக்கண்ணன்.

நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டு சுவாசிக்க இயலாமல் சாப்பிட இயலாமல்  2006 நவம்பர் 9 இரவு ஒன்பதரை மணிக்கு இயற்கை அடைந்தார் வல்லிக்கண்ணன்.

அடுத்த சில நாட்களில் கவிஞர் இளையபாரதி உதவியில் தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத்தோடு இணைந்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வல்லிகண்ணனுக்கு அஞ்சலிக் கூட்டம் ஏற்பாடு செய்தது. அதில் பேசிய சிகரம் ச. செந்தில்நாதன் ,
ச.தமிழ்செல்வன், சின்னக்குத்தூசி, கவிஞர் இன்குலாப், பாலம் கல்யாணசுந்தரம் பேராசிரியர் வி. அரசு, இரா. தெ. முத்து போன்ற      படைப்பாளிகள் பலரும் வல்லிக்கண்ணன் படைப்புகளை நாட்டுடமையாக்கி ,வல்லிகண்ணனை ஆதரித்த மறைந்த அவர் அண்ணன் கோமதி நாயகம் வாரிசுகளை பாதுகாக்க வேண்டும் என பேசினார்கள்.

படைப்பாளர்கள் குரல் முதல்வர் கலைஞர் காதுகளுக்குக் கேட்டது. 2008 மார்ச் மாதம் சு. சமுத்திரம் ,விந்தன் ,வல்லிக்கண்ணன் உள்ளிட்ட பதினெட்டு படைப்பாளர்கள் படைப்புகளை நாட்டுடமையாக்கினார் முதல்வர் கலைஞர் .வல்லிக்கண்ணன் குடும்பத்திற்கு 5 லட்சம் பரிவுத் தொகை கிடைத்தது.

வல்லிக்கண்ணன் அவர்களுக்கு நேரடி வாரிசு இல்லை என்பதால் பரிவுத்தொகையை அவர் அண்ணன் வாரிசுகளுக்கு தருவதற்கான வாரிசுரிமை சான்றிதழ் பெறுவதற்கு தமுஎசவின் தென்சென்னை மாவட்ட திருவல்லிக்கேணி கிளை நிர்வாகிகள் பிரின்ஸ்கஜேந்திரபாபு, வீரபெருமாள், பழனி போன்றோர்   
ச.செந்தில்நாதனிற்கு உதவினார்கள்.  

இருபதாம் நூற்றாண்டிற்கும் இருபத்தோராம் நூற்றாண்டிற்குமான
தமிழ் இலக்கிய வரலாற்று தொடர்ச்சியாக பாலமாக வல்லிக்கண்ணனின் படைப்புகள் இருக்கின்றன. புதுமைப்பித்தனின் யதார்த்தவாதப்பார்வை கொண்ட , சோசலிச முற்போக்குப் பார்வையை புரிந்து கொண்டு அதனோடு இயைந்து பணியாற்றிய வல்லிக்கண்ணனின் படைப்புகளை பரவலான வாசிப்பிற்கும் புரிதலிற்கும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு முற்போக்கு இலக்கிய அரசியல் இயக்கத்திற்கு உண்டு.    

கட்டுரையாளர் : ஒருங்கிணைப்பாளர் ; எழுத்தாளர் வல்லிக்கண்ணன் விழாக்குழு .
 தொடர்பிற்கு  era.the.muthu@gmail.com

Sunday, September 20, 2020

புலம்பெயர் தொழிலாளிகளும் தொழிற்பேட்டைகளும்

 



அடுத்த கதை- ஆதவன் தீட்சண்யா

தொகுப்பில் உள்ள ஒன்பது கதைகளை ஸ்கேன் வாசிப்பில் வாசித்த பொழுது எட்டாவது கதையான இந்தக் கதை தரவு ஒன்றிற்காக அவசியமாக இருந்தது.

மீதிக் கதைகளை அடுத்தடுத்து எழுதுவோம்.     

தொழிற்பேட்டையின் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு பணிக்கு ஆட்களை தரும் மேன்பவர் சப்ளை ஏஜென்சிகள் வழி தொழிற்நுட்பம் ஏதும் தெரியாத ஜக்லால் எனும் வடமாநில புலம்பெயர் தொழிலாளி வேலைக்கு வந்த சிலநாட்களில் தொழிற்சாலையின் எந்திர  விபத்தில் சிக்கி உடல் வேறு கால்  வேறு என அறுபட்டு இறந்து போகிறான்.

தொழிலாளியின் இறப்பை மறைக்கும் கூட்டுச்சதியை மருத்துவரும் மருத்துவமனை ஊழியரும்  அறிகிறார்கள் .

இறந்து  போன ஜக்லாலின் ஐடி கார்டை வைத்துக் கொண்டு , ஜக்லாலை அறிய வருகிறார் மருத்துவ ஊழியர் .

அப்படி ஒரு நபரே தங்களிடம் வேலை பார்க்கவில்லை என தொழிற்சாலை நிர்வாகிகளும்  மேன்பவர் சப்ளை ஏஜென்சிகளும் சொல்கின்றனர்.

ஜக்லாலின் படம் போட்ட ஐடி கார்டை காட்டி இதற்கு பதிலென்ன என கேட்கிறார் மருத்துவ ஊழியர்.

ஒருவரின் படத்திற்கு பல்வேறு பெயரிலான ஐடி கார்ட்கள் இருப்பதை காட்டி,மேன்பவர் சப்ளை நிறுவனங்களில் இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதான் என்று சொல்லி விட்டு, கடந்து போவதை கேட்டு  பதை பதைக்கிறார் மருத்துவ  ஊழியர் . 

ஓர் எழுத்தாளராக மருத்துவ ஊழியர் இருப்பதால் முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டல் வடிவத்தை அறிந்து அதிர்கிறார்.

ஆற்றாமையை இயலாமையை கதையில் சொல்வதன் வழி ஆறுதல் தேட முயல்வதோடு கதை முடிகிறது.

புலம்பெயர் மக்கள் இவ்வாறான கடுமையான சுரண்டலிற்கு ஆளாவதை   பொது சமூகம் அறியாமல் இருக்கிறது.

சுரண்டலையும் அறியாமையையும் பொது சமூகப் பார்வைக்கு வைப்பது எழுத்தின் கடமை என்பதை இக்கதை உணர்த்துகிறது. வாழ்த்துக்கள் ஆதவன் தீட்சண்யா . 

அற்புதமான வடிவில் கருப்பு பிரதி  112 பக்கத்தில் 100 விலையில்  தொகுப்பை இந்த சனவரியில் வெளியிட்டுள்ளது . 

Tuesday, April 7, 2020

மீன்குகைவாசிகள் : தமிழ்இஸ்லாமியர் வாழ்வியல் சித்திரம்

கீரனூர் ஜாகிர்ராஜாவின்  5 ஆவது நாவலான மீன்குகைவாசிகள் நாவலை ஏற்கனவே 28.3.2011 ல் வாசித்திருக்கிறேன்.இந்த கொரானா ஊரடங்கு காலத்தின் கடந்த நான்கு நாட்களாக வீட்டு வேலைகள் போக, 13 ஆவது நாளான  நேற்று  06. 4.2020  பிற்பகல் 2.45 மணிக்கு இரண்டாவது முறையாக நாவலை வாசித்து முடித்தேன்.இந்தப் பத்தாண்டு காலத்தில் சாருநிவேதிதாவின் ஜீரோடிகிரி பதிப்பகம் உள்ளிட்டு  வெவ்வேறு பதிப்பகங்கள் சார்பாக இந்த நாவல் நான்கு பதிப்புகள்  கண்டுள்ளன  .

திண்டுக்கல் மாவட்டத்தின் பழனி தாராபுரம் சாலையின் இடையே இருக்கும் ஊர் கீரனூர்.சண்முகநதி  இந்த ஊரின் வழியாக அமராவதி ஆற்றில் போய் கலக்கும் முனை கீரனூர்.  ஆலங்குளம் எனும் மீன்பிடிக்குளம்  குளத்தம்மாவாக வாழ்வளிக்கும் இந்த ஊரின் வாழ்வியல் சித்திரம்தான் மீன்குகைவாசிகள் நாவல். 1975 களின் வாழ்வு நாவலின் காலமாக உணரமுடிகின்றது.

உடல்  எரிக்கும் வெயிலும் , வியர்வைக் கரிப்பும் ,காற்றும் ,குளமும் ,குளத்தின் மீன்களும் ,மீன்கவுச்சியும், அழுகையும் ,கோபமும் ,சாபமும் ,மகிழ்வும் ,பாலியல் உரையாடல்களும் , காதலும், மதம் மாறுதலும் ,மதம் மாறினாலும் தொடரும் சாதிய இழிவுகளும் ,  பங்களாத்தெருவின் புலம்பெயர் தொழிலும் அதன் ஒளிவு மறைவுகளும் , முதலாளிமார்களின் பாலியல் வேட்டையும், பள்ளிவாசல் தர்கா சார்ந்த  முரண்பாடுகளும்,ஆணவக்  கொலையும் நாவலின் அத்தியாயங்களாக நம் வாசிப்பிற்கு வருகின்றன.

மார்க்கம் ஒன்றானாலும் வடக்குத்திசை மீன்காரத் தெருவின் எளிய மக்களை ஏற்றுக் கொள்ளாத பள்ளிவாசலில் ஆதிக்கம் செலுத்தும் தெற்குதிசை பங்களா தெருவின் பொருளாதாரமும்  அதிகாரமும் காட்சி சித்திரங்களாகின்றன. குளத்தை அம்மாவாக ஆமீனா விளிப்பதன் வழி இஸ்லாமாக மாறினாலும் மாறாத தங்களின் பூர்வீக நினைவுகளுமாக நாவல் பயணிக்கிறது.

மீன்காரத்தெரு ,பங்களாத்தெரு,செக்காட்டும் செக்காதெரு,பறத்தெரு என ஒவ்வோர் தெருவின் தன்மை ,வாழும் மனிதர்களின் இயல்பு என யாவற்றையும் காட்சிப்படுத்துகிறார் கீரனூர் ஜாகிர்ராஜா.
  ஆமீனா. நசீர் ,ஷேக்கா, சுபைதா,கணீர்காசிம்,ரஜியா,நைனார்முகமது,சண்முகம் ,நர்கீஸ் ,குப்பி,கூனன் லியாத்,நாச்சம்மை,மருதவீரன் போன்ற பாத்திரங்களின் வழியாக அவர்களின் உரையாடல் வழியாக ஊரின் சமூகத்தின் தோற்றத்தை அறிய முடிகின்றது.

கணீர் காசிம் ,ரஜியா,ஷேக்கா,நாவிதன்சண்முகம்,போன்ற பாத்திரங்கள் வாழ்வை சமூகத்தை வெல்ல முடியாத அதன் கைதிகளாக மாறி அவதிப்படுவதை வாசிக்க வாசிக்க அவர்கள் பின்னாலே மனம் சென்று  உழன்றாடுகிறது.

வட்டாரமொழி வழக்கில் நாவல் எழுதப்பட்டாலும் நாவலைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏதும் இல்லை. லே/ஏட்டி/பூட்டி/ஏனம்/ஆணம் போன்ற சொல்லில் கிளைக்கும் மொழி நடைகள் குமரி மாவட்ட வட்டார மொழிநடையோடு ஒட்டிப்  போகிறது . ஜாகிரோடு இதுபற்றி பேசிய  பொழுது ஏதோ ஒரு  காலத்தில் நெல்லை குமரி மாவட்ட எல்லை பக்கமாக இருந்து திண்டுக்கல் கீரனூர் வந்தவர்களாக மீன்காரத்தெருமக்கள்  இருப்பார்கள் தோழர் என்றார்.

வட்டார மொழிநடையோடு படைப்பாளியின் மொழிநடையும் இணைந்து நாவலை ஒரு நவீனப் பிரதியாக மாற்றி விடுகிறது
சுபஹ் ,இஷா ,ஜக்காத்,மினார்,பாங்கு ,ஜனாப்,ஜனாபா ,ஒலு,தீதார் ,
முத்தவல்லி,சால் போன்று நூற்று இருபது இஸ்லாம் வாழ்வியல் சார்ந்த சொற்களுக்கு பொருள் சொல்லும் பின்னிணைப்பு இஸ்லாம்   
வாழ்வியல் சொல்லாடலைப்  புரிந்து கொள்ள உதவுகிறது.

 'ஈருசுருக்காரி தர்காவை கெவர்மெண்ட் ஆர்டரோடு வந்து   இடிக்கிறாங்க' என்று மோதி நூர்தின் சொல்லி நாவல் முடியும் இடத்திலிருந்து ,அடுத்த நாவலிற்கான களத்தை துலக்கப்படுத்தி இருக்கிறார் ஜாகிர்ராஜா.இதன் தொடர்ச்சியை எழுதுவீர்களா ஜாகிர்?

வெளியீடு ஆழி பப்ளிஷர்ஸ் /2010 பதிப்பு விலை 140.00
             



Sunday, February 9, 2020

புரட்சியைக் கொண்டாடும் நாடோடிகள் 2

நாடோடிகள் 2 ன் சுவரொட்டியைப் சென்னையில் பார்த்தப் பொழுதே பரவசம் தொற்றிக் கொண்டது.சசிகுமார்,அஞ்சலி,பரணியின் நிறைந்த சிரிப்பு மனதில் பரவசத்தை உருவாக்கியது.கதை-திரைக்கதை-வசனம்-இயக்கம் என்று பி.சமுத்திரக்கனி இணைந்த, நாடோடிகள் 2 எதிர்பார்ப்பை எகிறவிட்டது.

பரவசமும் சிரிப்பும் கோபமும் வெடிப்பும் ஆவேசமும் கொண்டு மனதை வழி நடத்துகிறது நாடோடிகள் 2 .சாதிக்கு எதிராக , ஆணவக் கொலைக்கு எதிராக நாமாவோம் என்ற முழக்கம் உணர்வில் கலந்து பெரும் கொந்தளிப்பை  ஏற்றி விட்டிருக்கிறது.

 சம்போ சிவசிவ சம்போ / உறங்கும் மிருகம் எழுந்து கிடக்கும்/தொடங்கும் கலகம் துணிந்து கிடக்கும்/துடிக்கும் இதயம் கொழுந்து விடட்டும் என்ற நாடோடிகள் படத்தின் யுகபாரதியின் தீம் பாடல் நாடோடிகள் 2 லும் இடம் பெற்று , சாதியில் உறைந்து கிடக்கும் பகைமை அழிக்க பெரும் ஆவேசத்தை கிளறி விட்டிருக்கிறது.

புரட்சியை புரட்சியால் கொண்டாடுவோம் ,காட்சி முழுவதும் பரவி நிற்கிறது. சாதி அரசியலுக்கு எதிரான தொழிலாளிவர்க்கப் பார்வையை படம் கொண்டாடுகிறது.  இனம்,சுயசாதி அபிமானத்திற்கு எதிராக வசனங்களால் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி. தோழர்-ஜீவா-செங்கொடி-சிவப்பு வண்ணம்-சிவப்பு எண்ணம்-தமிழ் உணர்வு படத்தின் பாத்திரங்களாக கலையின் அரசியலாக வெளிப்பட்டிருக்கிறது.

 வாழும் காலத்தின் இழிவுகளை , முதலாளித்துவ அரசியல் சீர்கேடுகளை அச்சமின்றி விமர்சிக்கும் மெகா போன் புரட்சியாளர் பாத்திரம் (மூர்த்தி) காவியப்பாத்திரமாக மிளிர்கிறது.

சமயோசித அறிவு , போராட்டக்குணம்,கலைப்பார்வை கொண்ட ஆளுமையாக அங்காடித்தெரு அஞ்சலி மனம் கவர்கிறார். துள்ளல், துடிப்பு ஆவேசம் , புரட்சியின் புத்துயிர்ப்பாக சசிகுமார் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்.ரெட் சல்யூட் தோழர் சசிகுமார்.

செங்கொடியின் குடும்பம் அன்பால் வனையப்பட்ட , புரட்சி புரிந்துணர்வுள்ள குடும்பமாக அழகியலோடு காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. சுயசாதி தீக்குள் சிக்கிக் கொண்ட ஜீவாவை பாதுகாக்க,  கம்பு சுற்றி களமாடும் செங்கொடிவ்யின் அப்பா (ரவிச்சந்திரன்) அம்மா ஸ்ரீரஞ்சனி பாத்திரம் கச்சிதம்.

சசிகுமாரின் தாய்மாமா ஞானசம்பந்தன்,அம்மா துளசி, சுபாஷினி கண்ணன் அவரவர் இயல்பான நடிப்பில் ஒளிர்கிறார்கள்.
 சின்னச் சின்ன சொல் எடுத்து புரட்சிக்கு கட்டியம் கூறி இருக்கிறது யுகபாரதியின் தீம் பாடல் வரிகள்.வாழ்த்துகள் தோழா.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு, ஏ.எல்.ரமேஷின் எடிட்டிங் படத்திற்கு துணை நிற்கிறது.
தயாரிப்பாளர் நந்தகோபால் மிகுந்த வணக்கத்திற்குரியவர்.செவ்வணக்கம் இயக்குநர் பி.சமுத்திரக்கனி.

தமிழ்நாட்டின் இடதுசாரி கட்சிகள்- முற்போக்கு இயக்கங்கள்,தொழிற்சங்கங்கள்,இளைஞர்,பெண்ணிய அமைப்புகள்,தமிழ் உணர்வாளர்கள் நாடோடிகள் 2 திரைப்படத்தை கொண்டாட வேண்டும்.திரையரங்கில் படத்தை சில வாரங்கள் ஒட வைக்க வேண்டும்.குற்றம் குறை பார்க்காமல் படத்தின் கலைக்காக அரசியலிற்காக, தமிழகத்தின் இடதுசாரி இயக்கங்களின் வளர்ச்சிக்காக இந்தப் பொறுப்பை ஏற்றாக வேண்டும்.

செய் புரட்சி செய்/துணிந்து செய்/விரைந்து செய்