Tuesday, November 15, 2022

சிகரம் 80: செயற்பாடுகளின் கண்ணி அறுந்து போகாத ஆளுமை

தோழர் சிகரம் ச.செந்தில்நாதன் அவர்களின் 80 ஆவது வயதை ஓட்டி , அரியலூர் மாவட்ட செந்துறை தமிழ்ச்சங்க செயலாளர் வே.குமரவேல் முன்னெடுப்பில் ,சந்தியா பதிப்பகம்{சென்னை} சார்பில் வெளிவந்திருக்கும் சிகரம் செந்தில்நாதன் : பாதை பயணம் படைப்புலகம் எனும் தொகுப்பு நூலிற்கு நான் எழுதிய கட்டுரை இங்கு வெளியாகியிருக்கிறது.-இரா.தெ.முத்து சிகரம் ச..செந்தில்நாதன் எனில் நேர்மறைசக்தி எனப் பொருள் கொள்ளலாம்.சரியானது என அவர் கருதினால் அந்த சரியான முயற்சிகளின் ஊக்கசக்தியாக அவர் இருப்பார். சரியான முயற்சிகளுக்கு செயற்திட்டம் முதல் அமைப்பு வரை முன்னெடுக்க அவர் அறிவும் அனுபவமும் துணை நிற்கும்.  இவ்வாறான நேர்மறை பகிர்வின் வழியே உருவானது கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு. 2013 ஆம் ஆண்டின் ஒரு நாள் சிகரத்திற்கு போன்  செய்து 'தோழர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னை வந்து பார்த்த செ.து.சஞ்சீவி தனக்கு வயதாகி விட்டது என்றும் இனிமேல் கவிஞர் தமிழ்ஒளி குறித்த நிகழ்வுகள் நடத்த இயலாது என்றும் சொல்கிறார். இது குறித்து பொருத்தமாக யோசியுங்கள் என்று சொன்ன தகவலைப் பகிர்ந்தேன். தகவலைக் கேட்டுக் கொண்ட சிகரம் செந்தில்நாதன் ஒன்று செய்வோம் என்றார். பிரின்ஸ் கசேந்திரபாபுவிடம் தான் பேசிவிடுவதாகவும் என்னையும் பிரின்சிடம் பேசி அவர் நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் கூட்டம் ஒன்றை கூட்டுங்கள் என்று ஆலோசனை தந்தார். யார் யாரை தொடக்க கூட்டத்திற்கு அழைக்கலாம் என்று சிகரம் செந்தில்நாதன்,இரா.தெ.முத்து ,பிரின்ஸ் கஜேந்திரபாபு மூவரும் சில முறைகள் போனில் கலந்து பேசி , 2013 ஜூலை 29 ஆம் திகதி பிரின்சின் பள்ளியான நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் கவிஞர் தமிழ்ஒளி 90 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தோம். ஆலோசனைக் கூட்டத்திற்கு யார் யாரை அழைப்பது என சிகரம் அவர்கள் வழிகாட்டினார்கள்.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் சார்ந்த படைப்பாளர்கள் தோழர்கள்,கவிஞர் ஈரோடு தமிழன்பன்,சே.து.சஞ்சீவி,புதுச்சேரி சார்பாக படைப்பாளர்கள், முகம் மாமணி , பேராசிரியர் இராமகுருநாதன் ,சந்தியா நடராசன்,உதயை வீரையன், முனைவர் பி.இரத்தினசபாபதி,விழிகள் நடராசன் எனப் பட்டியல் தயாரித்தோம். இவ்வாறுத் தொடங்குகிற ஆலோசனைக்கூட்டம் விரிவான அளவில் மாற வேண்டும் என்றும் தன் அவாவை முதல் கூட்டத்திலேயே சிகரம் செந்தில்நாதன் பகிர்ந்து கொண்டார்கள். அவ்வாறே நூற்றாண்டு விழாக்குழுவினை தொடர்ந்து இரண்டாம் முறையாக விரிவாக்கும் திட்டத்தை வைத்திருக்கிறோம். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு ஒவ்வொர் தேவைக்கும் குழு உறுப்பினர்களை கொடையாளர்களை சார்ந்து செயல்படுகிறது. நவபாரத் பதின்நிலைப் பள்ளியில் நடத்தப்படும் குழுக் கூட்டத்திற்கு சிற்றுண்டி தேநீர் வழங்குவதை பிரின்ஸ் கசேந்திரபாபு வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்றால் , தொடர்ந்து வரும் விழா நிகழ்வுகளில் செலவுகள் பெரியதாகப் போகும் எனில் முதலில் ஒரு தொகையை அளித்து , நிகழ்வுகள் உற்சாகத்தோடு நடப்பதற்கான மனநிலையை உருவாக்கி விடுவார் சிகரம் செந்தில்நாதன் அவர்கள். நிகழ்வுப் போக்கினை உடனிருந்து கவனித்து சொல்லப்படும் கருத்துகளை உள்வாங்கி நிதி என்பது ஒரு சுமையாக மாறி விடாதபடி முதன் முதலில் விழாக்குழு தலைவர் என்ற முறையில் சிகரம் நல்கும் நன்கொடை, ஏனைய குழு நண்பர்களிடம் செலவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற உறுதியை உருவாக்கி விடும். கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு பல சமூகப் பின்புலத்தைக் கொண்டவர்களால் இயக்கப்படும் குழு என்பதால் , குழு உறுப்பினர்கள் முன் வைக்கும் கருத்துகள் நீர் போல மென்மையாகவும் இருக்கும். மலையருவி போல தடாலடியாகவும் வந்து மோதும். இம்மாதிரியான சூழலில் தலைவர் என்ற முறையில் சிகரம் அவர்கள் கூட்டத்தில் குறுக்கீடு செய்து , சொல்லப்படும் உறுப்பினரின் கருத்தை மட்டும் எடுத்து அதை பொதுக்கருத்தாக மாற்ற முயல்வதோடு ,கருத்தை சொன்னவரை அமைதி செய்து தொடர்ந்து கூட்டம் சுமுகமாக நடைபெறும் சூழலை தக்க வைத்துக் கொள்வார். தனக்கு வயது 80 ஆகி விட்டது என்ற உணர்வை செயல்படுவதற்கான தடையாக மூப்பாக சிகரம் கருதுவதில்லை. கூட்டங்கள் சென்னையில் சென்னைக்கு வெளியே எங்கு நடைபெற்றாலும் குறித்த் நேரத்திற்கு சென்று கலந்து கொள்வதை காலப் பண்பாடாக கடைபிடித்து வருகிறார். கொரொனா பெருந்தொற்று காலத்திலும் பல குழுக்கூட்டக்களை தன் இல்லத்தில் நடத்தி செயல்பாடுகளின் கண்ணி அறுந்து போகாமலும் தோழமையின் தொடர்பை நெருக்கமாவும் இயக்கிக் கொண்டு , ஏனைய தோழர்களுக்கான செய்தியாகவும் இந்தப் இயங்குச் செயற்பாட்டினை உனர்த்தி வருகிறார். ( இரா.தெ.முத்து, தமுஎகச தலைவர்களுள் ஒருவர் செயலாளர்;கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக்குழு)

Sunday, May 1, 2022

புதுமைப்பித்தனை வாசித்த முதல் அனுபவத்தை முன் வைத்து...

  


புதுமைப்பித்தன் பிறந்து 116 ஆண்டுகள் ஆகி விட்டன.

முதன் முதலாக புதுமைப்பித்தனை எப்போது வாசித்தேன்?

1982 கன்னியாகுமரியில் எனது உறவினர் சங்கம் லாட்ஜ் உரிமையாளர் அவர்களின் வீட்டிற்கு சென்ற உறவினரோடு நானும் சென்றிருந்தேன்.

அவரின் இளைய மகள் பிளஸ் டூ மாணவி. அவருடைய பிளஸ் டூ தமிழ் புத்தகம் வீட்டின் மேசையில் இருந்தது.எடுத்துப் புரட்டிப் பார்த்து வாசித்து பார்க்கிறேன்.

அதில் "ஒரு நாள் கழிந்தது" என்கிற கதை பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதை எழுதியவர் புதுமைப்பித்தன் என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 

தமிழ்நாடு பாடப்புத்தக பாடத்திட்டத்தின் வழியாக புதுமைப்பித்தனின் ஒரு நாள் கழிந்தது கதை வழியாக நான் புதுமைப்பித்தன் எனும்  பெயரை முதன்முதலாக அறிந்து கொள்கிறேன்.

பிளஸ் டூ மாணவி உயர்படிப்பு படித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த பேராசிரியர் ராமச்சந்திரன் அவர்களை மணமுடித்ததை பின்னர் அறிந்து கொண்டேன் என்பது தனி.

ஒரு நாள் கழிந்தது கதை 1937 ல் எழுதப்பட்டது. மீண்டும் "ஒரு நாள் கழிந்தது" கதையை வாசிக்கிற பொழுது காலங்கள் ,ஆட்சிகள் மாறின; காட்சிகள் மாறினவா? என்பதற்கான ஓர் ஆவணமாக அந்தக் கதை இன்றும் இருக்கிறது.

அன்றாடம் காய்ச்சிகளின், ஒட்டுக் குடித்தன வாசிகளின், எழுத்து வாழ்வை இலக்கியவாழ்வை முழுவாழ்வாக வரித்துக்கொண்ட இலக்கியவாதிகளின் வாழ்க்கைப் பாடுகளை இந்த வாழ்வின் வரவிற்கும் செலவிற்கும்  பொருந்தி வராத சம்பளக் காசுகளை,  கதை மீண்டும் மீண்டும் அன்றாட வாழ்வின் துயரங்களை ஞாபகங்களை  நினைவுபடுத்தி 21 ஆம் நூற்றாண்டின் வாழ்வு 20 ஆம் நூற்றண்டின் வாழ்விலிருந்து அப்படி ஒன்றும் தலைகீழாக மாறிவிடவில்லை என்பதை துலக்கப்படுத்துகிறது ஒரு நாள் கழிந்தது.

 குழந்தை அலமுவின் வார்த்தைகளும் செயல்களும் கதையின் இன்னுமொரு அடுக்காக நின்று எழுத்தாளர் முருகதாசர் -கமலா இணையரின் வாழ்வின் துயரத்தை பேசாமல் உணர்த்துகின்றன. முருகதாசர் கொடுக்க தாமதிக்கும்  11 ரூபாய் நிலுவைக்காக அந்தியில் விளக்குப் பொறுத்த தீப்பெட்டியைக் கூட தர மறுக்கும் கடைக்காரரின் செயல் பெரிய பாரத்தை வாசகர் மீது வைத்து விடுகின்றன. 

நேர்கோட்டு linear கதையாக இல்லாமல் non linear கதையாக உத்தி கொண்டு அரசியல் பொருளாதார பண்பாட்டு விடயங்களை புதுமைப்பித்தனின் இந்தக் கதை உள்வாங்கி இருக்கிறது.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்கள்-  இந்தியச் சந்தைக்கு வந்து குவியும் சோயாபீன்ஸ் முதல் மெழுகுவர்த்தி வரையான இறக்குமதிப் பொருட்களுக்கு எழுத்தாளர் முருகதாசர் ,அட்வர்டைசிங் கம்பெனியின் பொருட்கள் விளம்பரத்திற்காக சாகா வரம் பெற்ற எழுத்தோவியங்கள் எழுதுவதை விட்டு விட்டு, சந்தைப்படுத்தப்படுத்தப்படும் பொருட்களின் மீதான மகாத்மியங்களை காவியங்களை இயற்றிக் கொண்டிருக்கிறார் எனும் புபி யின் எழுத்தில் தொனிக்கும் நையாண்டி, வந்து இறங்கும் வெளிநாட்டுப் பொருட்களையும்  நையாண்டி வழி அவர் சமூகத்தின் விசாரணைக்கு உட்படுத்துகிறார் என நாம் உள் வாங்கிக் கொள்ள வேண்டும்.

மளிகைக்கடை பாக்கியில் ஒரு முன்று ரூபாய் கொடுத்து விட்டால் கொஞ்ச நாள் மளிகைக்கடைக்காரரின் அர்ச்சனைக்கு ஆட்படாமல் இருக்கலாம் என்பதற்காக சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுக்க நினைத்தாலும் ஒட்டிக் கொள்கிற சுந்தரம்பிள்ளை, பக்கத்து வீட்டு நெக்டை சுப்ரமணியபிள்ளை விளக்குப் பொறுத்தும் நேரத்தில் அந்திக் காப்பி குடிக்கும் நேரத்தில் வீட்டிற்கு வந்துவிட அலமுவை வைத்துக் கொண்டு மூணு கப் காப்பிப் போட கமலாவிற்கு குரல் கொடுக்கிறார் முருகதாசர்.

அப்பா எனக்கில்லையா? மாமா எனக்கில்லையா? எனக் கேட்கும் அலமுவை விட்டு விட்டு வந்தவரோடு காப்பி சாப்பிடுகிறார் புனைப்பெயர் சூடிக் கொண்ட பிரபல எழுத்தாளர் முருகதாசர்.

சுந்தரம் காப்பி குடித்து விட்டு கிளம்பி விட்டார்.தொண்டையைக் கணைத்துக் கொண்ட நம் எழுத்தாளர் சுப்ரமணியம்பிள்ளையிடம் "சேஞ்ச் இருக்கிறதா? ஒரு மூன்று ரூபாய் வேண்டும்" என கேட்கிறார். "சம்பளம் போடலே; அவசியமாக இருக்கிறது" என்கிறார். அதனாலென்ன என்ற டாம்பீகத்தோடு பர்ஸ் திறந்து எட்டணாவை (50 பைசா) "இப்போதைக்கு இதுதான் இருக்கிறது" என தூக்கித் தருகிறார் சுப்ரமணியம்பிள்ளை.

எட்டணாவை வைத்துக் கொண்டு என்ன செய்ய என நினைக்கும் முருகதாசரிடம் மளிகைகடைக்கான மூன்று ரூபாயை திங்கள் கிழமை பார்ப்போம்; இப்போதைக்கு இதை கொடுத்து காப்பிப்பொடி வாங்கியாருங்கோ என கணவரை கடைக்கு விரட்டுகிறார் கமலா

பதினோரு ருபாய் கடனைத் தாள இயலாத மளிகைக்கடைக்காரர் ,ஒரு மூன்று ரூபாய் புரட்டுவதற்கு சிரமப்படும் ஓர் எழுத்தாளர்; காப்பிப் பொடிக்கும் வழி இல்லாத சென்னை ஒட்டுக்குடித்தன வாழ்வு, நண்பர்கள் எனும் பேரில் அந்திக்காப்பி குடிக்க வரும் வாழ்வில் சிரமப்படும் இன்னும் இருவர்; சப்ரிஜிஸ்தர் மகள் ரிக்‌ஷாவில் போவது போல,தானும் ஏன் போகக்கூடாது என ரிக்‌ஷாகாரரிடம் சண்டை இடும் ஐந்து வயது அலமு என ஒரு தினசரி வாழ்வை கழிக்க சிரமங்களை எதிர்கொள்ளும் மனிதர்கள் என 1937 ல் ஒரு நாள் வாழ்வு என்பது 85 ஆண்டுகள் கழிந்தும் மாறிவிடாமல், மனிதர்களின் ஒரு நாள் வாழ்வை கடத்துவதே பெரும் போராட்டமாக இருக்கிறது என்பதை காட்சிப்படுத்துகிறது.

உற்பத்தி பெருகி இருக்கிறது; டிஜிட்டல் இந்தியா பிறந்து பத்தாண்டுகள் ஆகிறது;ரிக்‌ஷாவிற்குப் பதில் ஆட்டோ ரிக்‌ஷாக்கள் வந்து விட்டன. இன்றும் கமலாக்கள் முருகதாசர்கள் சுப்பிரமணிய பிள்ளைகள் வாழ்வில் வறுமை இல்லாத வாழ்வு வந்து விட்டனவா? காப்பி பொடிக்கும் பாலுக்கும் மல்லுக்கட்டும் எத்தனையாயிரம் குடும்பங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.இந்தநிலை மாறுவது எப்போது? என கதையில் இல்லாத பல கேள்விகளை ஒரு நாள் கழிந்தது வழி புதுமைப்பித்தன் எழுப்புகிறார்.