Wednesday, November 9, 2016

தேசாந்திரியின் கதை



தேசாந்திரியாக இவர் ஊர் ஊராகச் சுற்றியப் பொழுதில் சென்னையின் ஒரு மாலை நேரத்தில் கற்பகாம்பாள் அவின்யூவில் 2000 ஆவது ஆண்டில் சந்தித்தேன். சில வார்த்தைகள் பேசினோம். என்ன பேசினோம் என்று எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த காலத்தின் வெம்மை , வாழ்வின் அலைச்சல் , ஏமாற்றம் அவ்வாறு பேச வைத்திருக்கும்.அன்றிலிருந்து இன்று வரை அவர் மீதான அன்போடும் அவரின் எழுத்துகளோடும் எம் பயணம் தொடர்கிறது.
உயரத்திற்கு வந்த பின்பும் அவரிடம் தொடர்ந்து வெளிப்படும் தோழமை ; செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கை ; எழுத்துகளை வாசித்து நம் கருத்துகளைச் சொல்லும் பொழுதில் அவர் முகத்தில் வெளிப்படும் புன்னகை ; வெளிப்படைத்தன்மை இவரை நம் எழுத்தாளர் என்று உறவுக் கொண்டாடச் சொல்லும். வாசிப்பின் எழுத்தின் மீதான அவரின் ஆளுமை, சுயமரியாதை அவரின் உயரத்தை அதிகரிக்கவே செய்யும்.
சோவியத் படைப்புகளின் மீது அவருக்கான ஈடுபாடு, அதற்காக ரஷ்ய மொழியைக் கற்றது, வீடு தேடிப் போவோரை வறவேற்று மணிக்கணக்கில் பேசும் உற்சாகம், அழுத்தம் திருத்தமாக சொற்களைப் பயன்படுத்துவது என்று அவரின் இருப்பு நம்மை வசீகரிக்கும்.
நேர் உரையாடலில் அவரோடு பேசும் பொழுது “என்..ன தோழர் “என்று குழந்தமையோடு கேட்கும் அந்த அணுகுமுறை மேலும் மேலும் அவரோடு நம்மை அய்க்கியமாக்குகிறது. ஒரு பொழுதும் தன்னை மற்றவர்கள் மீது நிறுவிக் கொள்ள மாட்டார். மாறாக இயல்பான அணுகுமுறையில் வசிகரித்துக் கொள்வார்.
அவர் மீது நம் கூடுதல் பிரியத்தின் காரணம் , இவர் நம் காலத்தின் புதுமைப்பித்தன் ; நம் காலத்தின் ஜெயகாந்தன். உழைப்பாளி மக்கள் மீது அக்கறையும் நேசமும் கொண்டவர் என்பதால் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் மீது பொங்குமாங்கடலென நம் நேசம் ததும்பி நிற்கிறது.
( சென்னை காமராசர் அரங்கில் நவம்பர் 07 அன்று நடைபெற்ற சோவியத் புரட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழாவில் பங்கேற்க வந்த எஸ்.ரா,உடன் டி.லட்சுமணன் & நாம் )

Saturday, October 29, 2016

தீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை





தீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடும் நாளாக இருந்து வந்தது. நராகசுரனை வதம் செய்த,  வெற்றியைக் கொண்டாடும் நாள் தீபாவளி என்கிற இந்துமதச்சாயம் பூசிய வரலாறு விஜயநகரப் பேரரசின் காலத்திலிருந்து (கி.பி 1500) நடைமுறைக்கு வந்தது.

 வடிவம் மாறாமல் இருக்கிறது. உள்ளடக்கத்தை மறைத்து விட்டு, தமக்கு தேவையான சரக்கை ஏற்றி வைத்து விட்டது இந்துமதம்.  இன்றளவும் தீபாவளி  நீடிப்பதற்கு காரணம், காலம்தோறுமான பொருள் உற்பத்தி சந்தையோடும் ,  உற்பத்தியாளர்களின் நலனோடும் இணைத்து, பொருளாதார மேம்பாட்டுச் சந்தைக்கும் உதவும்படி அமைத்தது ஆகும் .

இந்துமதம் என்கிற சொல்லாடல் கிபி 800 அளவில்தான் புழக்கத்திற்கு ஆதிசங்கரன் வழியாக வருகிறது. கிபி 800 முதல்  கிபி 1900 தொடக்க காலம் வரை, சமணம்,பவுத்தம், மீமாம்சம் போன்ற இந்திய தத்துவ இயலிற்கு முற்போக்கு பாத்திரம் வகித்த மரபுகளை அழிப்பதற்கான பெரும் போர் நடைபெற்றது.

களப்பிரர் காலம் தவிர ஏனைய சோழ, பல்லவ, விஜயநகரஅரசுகள், மக்கள் நலனை முன் வைத்து இயங்கிய,  மககள் மத்தியில் பெரும் வீச்சோடு விளங்கிய , முற்போக்கு மரபுகளை ஒழிக்க , கடும் அடக்குமுறைகளை அனல் புனல் வாதங்களை சிரச்சேதங்களை நடத்தியது.

வாழ்வில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கொள்கை சார்ந்த பார்வையே நிர்வாணம் என்றும், மோட்சம் என்பது இந்தப் புரிதலே தவிர , வாழ்வை வெறுக்கின்ற பிற்போக்கு சார்ந்த பார்வை மோட்சம் அல்ல என்றும் பார்வையை மக்கள் மத்தியில் விதைத்து சமணர்கள் வளர்ந்தனர்.

 உழவிற்கான கால்நடைகளை கொல்லக்கூடாது என்றும், சொத்தின் மீதான ஆசை தவிர்க்க வேண்டும் என்றும் எதையும் பகுத்து அறிய வேண்டும் என்று , சொத்துடைமைக்கு எதிரான கருத்தாடலாகஇயல்பில்  பவுத்தம்,சமணம், மீமாம்சம் இருந்ததால் அதை சகிக்க இயலாமல் ஒழிக்க ஆளும் சக்திகள் முனைந்தனர்.

மகாவீரரின் ஆளுமை இமயம் முதல் குமரி வரை பெரும் வீச்சோடு இருந்தது.அவர் நிர்வாணம் எனும் மகாஞானம் பெற்ற நாளை தீபங்கள் ஏற்றி கொண்டாடிய மரபு தேசம் எங்கும் இருந்தது.

 இந்துமதச்சாயம் பூசப்பட்ட இந்தத் தீபாவளிக்கு வயது 500  ஆகும்.
முற்போக்கு மரபுகளின் மீது நம்பிக்கையும், பிறப்பில் உயர்வு தாழ்வை கற்பிக்கும் இந்துமதத்தின் மீது விமர்சனப் பார்வையும் கொண்டவர்கள், தீபாவளியின் உண்மை வரலாற்றைப் புரிந்து கொண்டு, விடுபட்டு போன பகுத்து அறியும் மகாவீர மரபை ஞாபகம் கொள்ளும் பொருட்டு, வரலாற்றின் மீது புதிய ஒளியை பாய்ச்ச வேண்டும்.

இந்தப் பார்வையிலான தீபாவளியைக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Friday, August 26, 2016

சமகாலத்தின் சாட்சியம்:




வாதை நிரம்பியதாய் இருக்கிறது 
வாழ்க்கை

எதையொன்றைப் பிடித்துக் கரைசேர 
ஏலுமோவென கானல் காட்டுகிறது

நித்தியக் கணங்களை நினைந்து 
உதிர்ந்து போகும் புன்னகைகள்


எங்கும் கையேந்தும் விண்ணப்பங்கள்
ரம்பம் கொண்டு அருக்கின்றன


குறுக்கும் நெடுக்குமாய் அலைவுறும் பாதங்கள் 

சமகாலத்தின் சாட்சியமாகிறது

கொண்டாட்டமும் ஆவேசமுமாய் குமிழிடும் 

வெர்ச்சுவல் உலகம்
இடுகுறிகளில் கிடக்க


இடுகாடுத் தேடிப் பிணம் சுமந்து
கண்ணீரைப் படர்த்துகிறார்கள் ஏதிலிகள்


வாதையை மேலும் மேலும் கையளிக்கும்
அரசியல் தட்பவெட்பங்கள் 


புள்ளி விலகாத மைய அச்சில் 

தொடர்ந்து சுழல்க 

குடிமைச் சமுகத்தின்
கூக்குரல் ஓர்மைகள்


நன்றி: ரோகிணி , ரேவதி குமார்

Saturday, August 20, 2016

காடெல்லாம் பிச்சிப்பூவு








  https://www.youtube.com/watch?v=yg1uGOPHW-s
காடெல்லாம் பிச்சிப்பூவு....
கரையெல்லாம் செண்பகப்பூ..
கரையெல்லாம் செண்பகப்பூ...

இந்த வரிகளை எங்குக் கேட்டாலும் அப்படியே சொக்கி நின்றுப் பாடலைக் கேட்பேன். அப்படி சொக்குவதற்கு இரண்டு காரணம் உண்டு.

ஒன்று இளையராஜாவின் இசையிலும் குரலிலும் கேட்பது. தெம்மாங்குப் பாடல் வடிவில் மிக எளிமையாக இனிமையாகப் பாடி இருப்பார் ராஜா. அப்படியே மனசைப் பிசையும் இசை அது.

இரண்டாவது பிச்சிப்பூக் காடுகளைக் கன்ணாரக் கண்டவன். அந்தக் காடுகளில் ஓடியாடி விளையாடியவன்.தலைக்கு மேல் வளர்ந்திருக்கும் பிச்சிப்பூச்  செடிகளை , எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் தோவாளை,ஆரல்வாய்மொழி,வெள்ளமடம் போன்ற ஊர்களின் புன்செய் காடுகளில் , 75 க்குப் பிற்பாடு முதல் இன்று வரை பிச்சிப்பூ பயிர் செய்தல் நடந்து வருகின்றது.

வானம் பார்த்தப் பூமி என்பதால், முன்னர் சோளம்,கம்பு,வரகு, நிலக்கடலை,பருத்தி என பயிர் செய்த காலம் போய், பக்கத்து எல்லையான கேரளாவில் பூவிற்கு நல்ல கிராக்கி என்பதால், வயிற்றுப் பிழைப்பிற்கு என்று, முன் சொன்ன பயிர்கள் பயிரிடுதல் யாவும் பின்னுக்குப் போய், எங்கள் ஊரெங்கும் பிச்சிபூ காடு வளர்ந்து இன்று  பசியை ஓரளவுப் போக்கிக் கொண்டிருக்கிறது.

பிச்சிப்பூக் காடுகளில் தினசரி பூக்களை கொய்ய பெண்களும் சிறுவர்களும் போவார்கள்.அமுல் பால்பவுடர் டப்பா அளவிற்கு பூக்களைக் கொய்து தந்தால், 50 பைசா தருவார்கள். மாதம் குறைந்தது 15 ரூபாய் கிடைக்கும். காலையில் சூரியன் உதிக்கும் சற்று முன் காடுகளில் புகுந்து, காலை 7 வரை பூக்களை கொய்யலாம். அன்று வெளிச்சந்தையில் அரிசி கிலோ 2 ரூபாய் .இந்தக் காசில் 7 கிலோ அரிசி வாங்கலாம். சினிமா டிக்கெட் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை இருந்தது. வாரம் தோறும் ஊர் , டூரிங் டாக்கிசில் சினிமா பார்க்கலாம்.ரொம்ப ஆசை எனில் திருவனந்தபுரம் போய் செம்மீன்,சகாவு, மீனமாசத்தில் சூரியன் என்று பார்த்து வந்த நாட்களும் உண்டு.

அவன்தான் மனிதன், சில நேரங்களில் சில மனிதர்கள், புதிய அடிமைகள், கண் சிவந்தால் மண் ,சிவக்கும்,உதிரிப்பூக்கள், புதிய வார்ப்புகள், நினைத்தாலே இனிக்கும் ,அன்னக்கிளி, பூட்டாதப் பூட்டுகள்,கரையெல்லாம் செண்பகப்பூ, என்று இந்தக் காசில் தேடித் தேடி படம் பார்த்தது உண்டு.
இந்த பால்ய நினைவுகள் யாவையும் இந்தக் காடெல்லாம் பிச்சிப் பூவு, கரையெல்லாம் செண்பகப்பூ கிளர்த்தி விடும்.

எங்கள் நாஞ்சில் நாட்டின் ஆற்றுபாசனம் கொண்ட சென்பகராமன்புதூர், தாழக்குடி,தேரேகால்புதூர், வீரநாராயணமங்கலம்,அழகியபாண்டிபுரம்,பூதப்பாண்டி,ஒளவையார்மடம் போன்ற நீரோடும் கரைகளில், அல்லிகள் சிரிப்பதை,  சிவப்பும் வெண்மையும் பச்சையுமாக தாமரைகள் பூத்துக் கிடப்பதை, தாழம்பூ கரையெல்லாம் தனித்த மணம் வீசுவதை ,ஆங்காங்கு செண்பகப் பூக்கள் தாழை போலுமான வேறொரு மணம் பரப்புவதை யாவும் இந்தப் பாடல் வரிகள் கிளர்த்தி,உடல் எந்த ஊரில் எங்கிருந்தாலும் ,  பதின்பருவ மனம் அப்படியே காற்றில் ஏறி ,  நாஞ்சில் மண் போய் விடும்.

எங்கள் பகுதிகளில் தென்னை, கமுகு, வாழை, நெல் என செழித்துக் கிடப்பதை இந்தப் பாடல் , ஓர்மையில் கொண்டு வந்து நிறுத்தி, மயக்கம் தரும்.

  காடெல்லாம் பிச்சிப்பூவு..
.கரையெல்லாம் செண்பகப்பூ
சாய்ந்தாடும் நெற்கதிரே
சதிராடும் வாழைகளே
தேனாட்டம் வெள்ளம் ஒட
ஓடுதடி என் மனசு

என்று கேட்கும் இந்தப் பாடல், இளையராஜாவின் இந்தப் பாடல், ஜி.என்.ரங்கராஜனின் இயக்கத்தில், கரையெல்லாம் செண்பகப்பூ படத்தில் ,  1981 களில் கேட்ட இந்தப் பாடல் , என்றும் உடன் வந்து இழைந்து , மானுட சமுகத்தின் அன்பை நேசத்தை காதலை வாழ்த்தை சாரல் போலும் , தூவியபடி சொல்லிக் கொண்டே ஒலிக்கின்றது.

காடெல்லாம் பிச்சிப்பூவு
கரையெல்லாம் செண்பகப்பூ

Tuesday, August 16, 2016

நா.முத்துக்குமார் : ஞாபகத்தில் எழும் புன்னகை







நா.முத்துக்குமார் என்ற இளைஞனை நான் 1998 ல் அறிந்தேன். அந்த இளைஞன்  அன்று , சு.ப.வீரபாண்டியன் அவர்களை ஆசிரியராகவும்    நா.அருணாசலம் அவர்களை பதிப்பாளராகவும் கொண்ட  , நந்தன் மாத இதழில்  செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்

98 செப்டம்பர்.11 பாரதி நினைவு நாளில் , சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் , வடசென்னை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் , நாள் முழுவதும் கவிதைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்து, கவிதைத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு வேளையில் அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் அடியாட்கள், பாரதி இல்லத்தில் நுழைந்து , இங்கு உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டுக்,   கவிஞர்களை தாக்கி ரவுடித்தனம் செய்த, அந்தச் சம்பவம் வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது.

 பாரதி இல்லத்தில் நடந்தது  அனைத்தையும் உடனிருந்து பார்த்து,  நந்தன் இதழிற்கு முத்துக்குமார்  கட்டுரை எழுதினார்.  வண்ணதாசன், பா.ஜெயப்பிரகாசம், கந்தர்வன், சிகரம் செந்தில்நாதன், இரா.தெ.முத்து என இவ்ர்களின் கருத்துகளையும் தொகுத்து, 98 அக்டோபர் நந்தன் இதழில் மூன்று பக்கம் எழுதி இருந்தார். இது நா.முத்துக்குமாருனூடான முதல் சந்திப்பு. அன்றிலிருந்து தொடர்ந்து அவரோடு பழகி வந்திருக்கிறேன். பார்த்த இடங்களில் எல்லாம் புன்னகையுடன் அவர் பேசிய காட்சி ஞாபகத்தில் எழுகிறது.

பாலுமகேந்திரா சார் அலுவலகத்தில் , பின்னர் அவரின் சொந்த அலுவலகத்தில் என்று பார்த்து பழகி இருக்கிறோம். நா.முத்துக்குமாருடன் பேசும் பொழுதெல்லாம்  , தான் எழுதி வெளி வந்தப் படங்களின் பாடல்கள் அல்லது அவர் எழுதிய பத்திரிகைத் தொடர்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்பார். சில முறை அதற்கு என்னால பதில் சொல்ல இயலாது போனதும் உண்டு.  2009 ல்  அவரைக் காண , சாலிகிராம் கருணாநிதி சாலையில் இருந்த அவரின் அலுவலகம் போயிருந்தேன்.

மனம் விட்டுப் பேசினார் அன்று. தனக்கு வரும் பட வாய்ப்புகள் பற்றிப் பேசினார். பாடல்களின் வெற்றி , வருமானம் , செலவு என ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து கொண்டார். தனக்கு தன் குடும்பத்திற்கு உணவு, வாடகை, மருத்துவம் உதவி என  மாதம்  ஒன்றரை லட்சம்  தேவைப்படுகிறது. வருவதெல்லாம் செலவாகிறது தோழர் என்று எந்தக் கிரீடமும் சுமக்காமல் இயல்பாகப் பேசினார் நா.மு.  பையன் ஆதவன் ; ஒரு வயதாச்சு என்று  போட்டோவைக் காட்டினார். தொடர்ந்து தேவை ஒட்டி மொபல் வழி பேசுவோம்.

கடந்த 2016 பிப்ரவரி 14 அன்று பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் , ரோஸ்லின் ஒருங்கிணைத்த , பாலுமகேந்திராவின் இரண்டாமாண்டு நினைவு நாளில் நடிகை அர்ச்சனா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பாமரன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ,நா.முத்துக்குமார் உடன் நானும் பங்கேற்றேன்.முதல் வரிசையில் நான், முத்துக்குமார், பாலுமகேந்திரா மனைவி அகிலா என அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

என் அருகில் முத்துகுமார் இருந்தார். தமுஎகச பற்றி ச.தமிழ்ச்செல்வன்,சு.வெங்கடேசன் பற்றி கேட்டார். புதிதாய் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். அந்த நிகழ்வில் பாலுமகேந்திரா குறித்து வெகு அற்புதமாகப் பேசினார்.

தலைமுறைகள் சினிமாவில் தனக்கு மகனாக நடிக்க தன்னை பாலுமகேந்திரா  கேட்டார் என்றார்.தலைமுறைகள் சாரின் வாழ்க்கை தான் என்று பேசினார். பாலுமகேந்திராவின் நினைவை அடுத்த ஆண்டு முதல் பெரிய விழாவாய் நடத்தப் போவதாகச் சொன்னார். பேசி மீண்டும் வந்து அருகில் அமர்ந்தார்.கிளம்புறேன் தோழர்; அலுவலகம் வாங்க பேசுவோம் என்று சொல்லிப் போனார் நா.முத்துக்குமார்.

சினிமாவில் பலரைத் தொடர்ந்து பார்க்கிறோம்.பேசுகிறோம்.பழகுகிறோம். ஆனாலும் நா.மு  நா.மு தான். மனிதர்களை மதிக்கத் தெரிந்த கவிஞன்.
இனி முத்துக்குமாரை பார்க்க இயலாதோ....
( நா.முத்துக்குமாருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு சார்பான அஞ்சலி செலுத்துதல்.
2016 ஆகஸ்ட் 14 மாலை 4.30 மணி
படம்: ராமச்சந்தின் / தீக்கதிர் )

Thursday, August 11, 2016

விந்தன் : முற்போக்குச் சிந்தனை மரபு


விந்தன்,தமிழ்ஒளி என்கிற பெயர்களை நான் ஜெயகாந்தனின் ஓர் இலக்கியவதியின் கலையுலக அனுபவங்கள் நூலின் வழியாக தொடக்கத்தில் அறிந்து கொண்டேன்.விந்தன் பற்றிய வாசிப்பில்,வடசென்னையின் சூளை பட்டாளத்தை சார்ந்தவர் என்கிற ஈர்ப்பும் அடுத்து வந்திருந்தது.
தமிழ்ச் சமுகத்தில் விந்தனின் ஆளுமை என்கிற கட்டுரையில் பேராசிரியர் வீ.அரசு சொன்னது போல `நடைமுறை சமுக அனுபவங்களை தனக்கான அரசியல் புரிதலோடு எழுத்தில் பதிவு செய்தவர் விந்தன்.

அந்த அரசியல் என்ன?
தொடர்ந்து நாற்பது ஆண்டு காலம் எழுத்தில் இயங்கியவர் விந்தன்.அமைப்பு சாராத ஆனால் கம்யூனிஸ்டுகள் மீது முற்போக்காளர்கள் மீது மரியாதை கொண்ட படைப்பாளி விந்தன் என்பதை அவரின் எழுத்தின் வழி அறிந்து கொள்ளலாம்.
1947 ல் விந்தன் எழுதிய வேலைநிறுத்தம் ஏன்? என்கிற நூலின் முன்னுரையில் தான் யார் என்பதை, தனது பார்வை எது என்பதை சொல்லியிருக்கிறார்.

`என்னை எழுத்தாளன் என்று சொல்வதை விட,தொழிலாளி என்று சொல்லிக் கொள்வதில் எப்பொழுதுமே பெருமையடைபவன்.என்றைக்காவது ஒரு நாள் இந்த நாட்டு அரசியல்,ஏன் உலக அரசியலே கூட தொழிலாளர்களின் கைக்குத்தான் வந்து சேரப் போகிறது என்பதில் எனக்குச் சந்தேகம் கிடையாது என்று தன்னைப் பற்றிய முன்னுரையை நூலின் முன்னுரையில் சொல்லியிருக்கிறார்.
பாலும் பாவையும் நாவலில் இடம் பெற்ற சகோதரி சரளாவிற்கு என்கிற கடித வடிவ முன்னுரையில் இப்படிக் காணக் கிடைக்கிறது:
`அகல்யாவிடம் எவ்வித வெறுப்பும் எனக்கு இல்லை.அவள் பணக்கார வர்க்கத்தைச் சார்ந்தவள் என்று குறிப்பிடும்பொழுது மட்டும்,எனக்கு அந்த இனத்தின்மேல் இயற்கையாக உள்ள வெறுப்பை ஓரளவு காட்டிருக்கிறேன்

விந்தன் கதைகள் தொகுப்பில் ரிக்‌ஷாவாலா என்றொரு கதை.
காலச்சுழற்சியில் ரிக்‌ஷா இழுத்த காளிமுத்து, தன்மகன் கைலாசநாதர் கோவிலின் தர்மகர்த்தாவாகி காரிலிருந்து இறங்கி வருவதை,கோவிலின் பண்டாரத்தின் வழியாக அறிகிறான்.மனைவியைப் பிரசவத்தில் பலி கொடுத்து,சிறைவாசமிருந்து மீண்டு கோவில் தோட்டக்காரனாக ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கும் காளிமுத்து,தன் மகன் கோவில் தர்மகர்த்தா என்று அறிந்து மகிழ்ச்சி கொள்ளாமல்,அவனோடு தன் வாழ்க்கையை கழித்துக் கொள்ளலாம் என்று நினையாமல் அதிர்ச்சியில் பட்டென்று இறந்து விடுகிறான்.

உயிர்விடுதல் என்கிற உத்தியின் வழியாக மகனே ஆனாலும் பணக்காரவர்க்கம் என்றதனால், அதனோடு இணைந்து வாழ்வதை விடவும் உயிர் நீப்பதே மேல் என்று காளிமுத்துவிற்கு சஞ்சலச் சாவை கொடுத்து விட்டு தன் பணக்காரவர்க்க எதிர்ப்பை கதையில் பதிவு செய்திருக்கிறார் விந்தன்.

மனிதன் இதழில் 1954 ல் விந்தன் எழுதிய காந்தியவாதி கதை,காந்தியம் பேசிக் கொண்டே அதற்கு முரணாக ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கும் தோல்மண்டி துளசிங்கராயரைப் பற்றியது. தீபாவளிக்கு தீபாவளி ஊர்ப்பிள்ளைக்ளுக்கு பட்டாசு வாங்கிக் கொடுத்து, தயாளக்குணம் கொண்டவராக காட்டிக் கொண்ட துளசிங்கராயரின் உண்மைமுகம் இந்த தீபாவளியில் அம்பலமாகி விடுகிறது.தனது அன்பாட்டிகளுக்கு பிறந்த பிள்ளைகளை ஊர்பிள்ளைகளாக பாவித்து,வழக்கமாக அணியும் மேல்துண்டு கீழ்துண்டு கூட இல்லாமல்,அன்பாட்டிகள் மத்தியில் எளிமையின் உச்சிக்கே சென்று அம்மணமாகி நின்று வாய்மையும் தூய்மையும் வளர்த்தார் என்று காந்தியத்தையும் அது பேசி ஏய்த்த மனிதர்களையும் பகடி செய்திருக்கிறார் விந்தன்.

விந்தனின் தடங்கள்
பாலும் பாவையும் நாவலில் விந்தனின் மனவோட்டத்தை சிந்தனையைச் சொல்லும் சில இடங்களை பார்க்கும் பொழுது,தன்னை சுற்றி நிகழும் அரசியல்,சமுக,பண்பாட்டு நிகழ்வினூடாக விந்தன் பாத்திரங்களை அமைத்துக் கொள்வதிலும் அவர்களின் மொழியினூடாக தன் கருத்தை துலக்கப்படுத்தவும் செய்திருக்கிறார்.

கனகலிங்கம் அகல்யாவிடம் இந்திரன் போன்ற ஆட்களின் சுயநலம் குறித்துப்  பேசும் பொழுது `பிறர் தனக்கு உபயோகமாக மட்டும் இருக்க வேண்டுமென்று விரும்புகிறவனே இந்த காலத்தில் புத்திசாலிகளாகவும் அறிவாளிகளாகவும் அறியப்படுகிறார்கள்என்று சொல்லுமிடத்தில் அறிவு, பொதுநலம் இல்லாது காசு பணம் தேடி அலையும் சுயநலமாக மாறி நிற்கிறது என்ற விமர்சனத்தையும் விந்தன் பதிகிறார்.

அகல்யா மீதான காதலை வெறும் பண உறவாக மாற்றி அகல்யாவை கை விடும் பொழுது `உன்னை கடவுள் காப்பாற்றட்டும் என்று சொல்லிவிட்டு ஓடிய இந்திரனை விமர்சிக்கும் கனகலிங்கம்`அனேகமாக கடவுளை துணைக்கு அழைப்பவர்கள் அல்லது கடவுளுக்கு பயன்படுபவர்கள் பலரும் உண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்பவர்கள்,கன்னக்கோல் திருடர்கள்,தூங்கும் பொழுது கழுத்தை அறுப்பவர்கள் என்ற உரையாடலின் வழியாக கடவுளின் இடம் எது? கடவுளை யார் ஏமாற்றுகிறார்கள்?கடவுள் உண்டா என்கிற கேள்வியையும் பாத்திரங்களினூடாக பதிந்து விடுகிறார்.

பாலும் பாவையும் நாவலின் 4 ஆவது அத்தியாயத்தின் தொடக்கத்தை வாசிப்பவர்கள், மகாகவி பாரதி மீதான விந்தனின் மரியாதையைப் புரிந்து கொள்ள முடியும்.தமிழை சொந்த சரக்காக மாற்றி அதன் வளர்ச்சியை முற்போக்கு வழியில் செலுத்த விரும்பாத இலக்கிய சனாதனிகள் மீதான கண்டனத்தையும் விந்தன் இந்த அத்தியாயத்தில் பதிந்திருப்பார்.
 தொழில் நிமித்தம் புத்தகக் கட்டுகளை தோளில் வைத்து சுமந்து வரும் கனகலிங்கத்திடம் அகல்யா`ஒரு கூலியாள் வைத்து கட்டுகளை கொண்டு வரலாமே;உங்களுக்கென்று ஒரு கெளரவம் உண்டுதானே என்று கேட்குமிடத்தில்  `அவரவர்க்கான சொந்தத் தகுதி பார்த்து வரும் கெளரவம் மட்டுமே மேலானது; கெளரவத்தை தேடிப் போகக்கூடாது;அது தானாய் வரவேண்டும் என்று தகுதி சார்ந்த கெளரவம் பற்றி கனகலிங்கம் வழியாக விந்தன் சொல்லுமிடம் அறிவுபூர்வமானது.

இந்தத் தரவுகளிலிருந்து விந்தனின் அரசியல் நோக்கு எது என்பதை  உணர்ந்து கொள்ளலாம்.அது முற்போக்குச் சிந்தனை சார்ந்ததாக இருக்கிறது.சமுகத்தின் முரண்பாடு குறித்ததாக இருக்கிறது.ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் பற்றியதாக இருக்கிறது.தொழிலாளி எதிர் முதலாளி  என்று இருக்கிறது.ஆளும் வர்க்க சித்தாந்த நோக்கை பகடி செய்வதாக இருக்கிறது.

வாழ்வின் மீது பின்னபட்ட படித்தவர்களின் சூதுவலைகள்;அவர்களின் பொதுநல தேட்டமில்லாத தன்னை மட்டுமே முன் வைக்கும் சுயநலம்;கடவுளின் வேர்;கடவுள் எவரின் கைக்கருவி; தமிழின் வளர்ச்சி மீது அக்கறை செலுத்தாத இலக்கிய செக்குதன்மை கொண்ட பழமைவாதிகள்;சொந்தத் திறமைகளினூடாக கிளைக்கும் தனிமனிதர்கள் மீதான மரியாதையை ஏற்பு செய்வதற்கு மாறாக மரியாதையின் அளவுகோலாக பணத்தை முன் வைக்கும் அபத்தம் என்று தனியுடைமை சமுகத்தின் கீழ் கிளைத்து பெருகும் நலிவுப் போக்குகள்;இதன் மீதான மாற்றுப் பார்வையுடன் கூடிய விமர்சனம் என்பதான தன்மையில் கருக்கொள்கிறது விந்தனின் முற்போக்கு சிந்தனை.

உண்மை துலங்கும் இடங்கள்
விந்தன் எழுத்து மீது ஒரு கேள்வி வந்து விழுந்தது.காதலைப் பற்றி விந்தன் எழுதுவது ஏன்?என்பதுதான் கேள்வி.விந்தன் சொன்னார்:`காதல் வெற்றி தோல்வி ஆவதும் கூட,பொருளாதாரம்தான் தீர்மானிக்கிறது.தீர்மானிக்கிற பொருளாதாரத்தைதான் என் கதைகள் பேசுகின்றன.

காதல்,அன்பு,பரிவு உள்ளிட்ட உணர்வுகளை வெறும் காசு பண பட்டுவாடா உறவாக்கி மனிதர்களை தன்னலத்தில் ஆழ்த்தும்  பொருளாதாரத்தின் குணத்தைப் பற்றியப் புரிதலை, எளிய மனிதர்கள் மீதான படர்த்தும் பேரன்பை,தனியுடைமை சமுகத்தை பகடி செய்யும் படைப்பாளுமையை எதன் வழியாக விந்தன் பெற்றிருக்க இயலும்? முற்போக்கு,இடதுசாரி நூல்களை பரிச்சயம் செய்ததிலிருந்தும் தான் வாழ்ந்த சுற்றுசூழலின் தாக்கங்களிலிருந்தும் அல்லாமல் வேறு எதிலிருந்து கற்றிருக்க இயலும்?

வறிய வர்க்கத்தில் பிறப்பதனாலேயே ஒருவரின் மனம் பகுத்தறிவையோ அறிவியல் பாங்கையோ பெற்று விடுவதில்லை.உலகம்-நாடு-மாநிலம் இதை ஒட்டிய கேள்விகள் முரண்பாடுகள் மட்டுமே உடனடியாக ஒருவரின் மனதை திருப்பி வைக்க இயலாது.வட்டாரம்-ஊர்-பகுதி சார்ந்த ஒருவரின் வாழ்நிலை அனுபவங்கள் பெறுமானங்கள்;இயக்கங்கள் மனிதர்கள் அவர்களில் வெளிப்படும் எச்சங்களை சொந்த பெறுமானங்களிலிருந்து ஒப்பீடு செய்கிற பொழுது உரசிப் பார்க்கிற பொழுது மனம் உண்மையைத் தேடுகிறது.பொய்யை வெறுக்கிறது.உண்மை துலங்கும் இடங்களை மனிதர்களை எழுத்துகளை கண்டடைகிறது.

அன்றைய சென்னையின் இன்றைய வடசென்னையின் சூளை பட்டாளம் விந்தன் வாழ்ந்த ஊர்.இந்தப் பகுதி மாநில அரசியலின் மையமான பகுதி;போராட்டங்களின் மையமான பகுதியுமாக இருந்தது.பக்கிங்காம் கர்னாடிக் மில்,ட்ராம்வே கம்பெனி,ரயில்பெட்டி தொழிற்சாலை,பேசின் பிரிட்ஜ் அனல்மின்நிலையம்,புளியந்தோப்பு ஆயுதக் கிடங்கு,சென்னை நகராட்சி மாளிகை,நவீன அச்சுக்கூடங்கள் என்று சூளையைச் சுற்றி  ஜவுளித் தொழில்,மின்சாரம்,அச்சகம்,ஆயுதம்,போக்குவரத்து சார்ந்த சாலைகள் இருந்தன.திரளான உதிரித் தொழிலாளர்களும்  தம் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருந்தனர்.

திரு.வி.க, வி.சர்க்கரை செட்டியார்,செல்வதி செட்டியார்,கஸ்தூரிரங்க அய்யங்கார்,பி.பி.வாடியா,வ.உ.சி, ப.ஜீவானந்தம்,பி.ராமமூர்த்தி,கே.முருகேசன்,கே.மாணிக்கம் போன்ற தொழிலாளர் தலைவர்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக உடன் நின்று போராடி கனன்றிருந்த ஊரில்தான் விந்தன் குடியிருந்தார்.
இந்தப் போராட்டங்கள்  அனைத்தும் விந்தனின் அரசியல்,சமுக,பண்பாட்டு சிந்தனையை வளர்க்க பயன்பட்டிருக்கின்றன.இந்தப் பகுதி மக்களின் மூச்சும் பேச்சுமாய் இருந்த கருத்துகள் விந்தனின் ஆளுமையை செதுக்கியிருக்கின்றன.இதற்கு அவரின் வேலைநிறுத்தம் ஏன் என்கிற நூல் மிக முக்கிய ஆவணமாகும். இது 1946 ல் நடைபெற்ற எழுச்சிகள், போராட்டங்கள்,தேசத்தை உலுக்கிய சம்பவங்கள்,பொருளாதார சீர்குலைவு,சமுக முரண்பாடுகளை அலசும் அரசியல் கட்டுரை நூல்.
 
கள ஆவணம்
இதன் முதல் கட்டுரை போலீசார் உள்ளிட்டவர்களின் வேலைநிறுத்தம் குறித்தது.அதன் தொடக்கம் இப்படி இருக்கிறது:
இன்று எங்கு நோக்கினும் வேலைநிறுத்தம்.
பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.பஸ் தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.ரயில்வே தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.டிராம்வே தொழிலாளிகள் வேலைநிறுத்தம் செய்கிறார்கள்.
இன்னும் சர்க்கார் சிப்பந்திகள்,தபால் இலாக்கா ஊழியர்கள்,ஹோட்டல் பாட்டாளிகள்,,நகரச்சுத்தி தொழிலாளிகள்,துறைமுகத்தை சேர்ந்த கூலிகள்,எதிலும் சேராத ரிக்‌ஷாவாலாக்கள் இவர்களோடு சேர்ந்து எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்னும் முதுமொழிக்கு பாத்திரமான உபாத்தியாயர்களும்கூட வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.
அந்த பொல்லாத போலீசார் இருக்கிறார்களே அவர்களுக்கும் கூடவா கடமையும் பொறுப்பும் இல்லாது போய்விட்டன.

ஆனாலும் என்ன அந்த எதிர்பாராத அதிசயம் ஒரு நாள் நடந்துவிட்டது
அன்று போலீசார் வேலைநிறுத்தம் செய்ததோடு இல்லாமல் தாங்கள் அத்தனை நாளும் பெற்று வந்த அதி மர்மமான சம்பள விகிதத்தையும் அம்பலப்படுத்தி,சர்க்காரின் மானத்தை வாங்கி விட்டார்கள்.
இவற்றுக்கெல்லாம் காரணம் என்ன?
சில சுயநலவாதிகள் சொல்வது போல தொழிலாளிகளின் அவசரப் புத்திதான் இவற்றுக்கெல்லாம் காரணம் என்று சொல்லிவிட முடியுமா?முடியாது! பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சதியும்,முதலாளி வர்க்கத்தின் பேராசையும்தான் மேற்கூறிய வேலைநிறுத்தங்களுக்கு காரணம் என்று சொல்ல வேண்டும்.

நாடு சுதந்திரம் பெறுவதற்கு ஓராண்டிற்கு முன் விடுதலைக்கான மிக முக்கியமான எழுச்சியைப் பற்றி விந்தன் எழுதியிருக்கிறார்.இந்தப் போராட்டங்கள் அனைத்தும் 1946 காலக்கட்டத்தில் நடந்தது.இந்த ஆண்டில் பம்பாய் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த தல்வார் என்ற போர்கப்பலின் சிப்பாயிகள் வேலைநிறுத்தம் செய்தார்கள்.பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை கீழே போட்டு விட்டு,காங்கிரசின் மூவர்ணக் கொடி,முஸ்லிம் லீக்கின் பிறைக்கொடி,கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியை கைகளில் ஏந்தியவாறு வீரசுதந்திரம் வேண்டி வேலைநிறுத்தம் செய்தார்கள்.

இந்த கிளர்ச்சியை காங்கிரஸூம் லீகும் ஆதரிக்கவில்லை.கம்யூனிஸ்ட் கட்சி மட்டும்,இவர்களின் வேலைநிறுத்தத்தை ஆதரித்து,நாடு தழுவிய முறையில் வேலைநிறுத்தங்கள்,ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.இந்தியாவின் தட்பவெட்பம் மாறிவிட்டது;ராணுவம்,போலீஸ் கிளர்ச்சி செய்வதால் இனி இந்தியாவை ஆள இயலாது;அதிகாரத்தை இந்திய முதலாளி வர்க்கத்தின் பிரதிநிதிகளான காங்கிரஸ்,முஸ்லீம் லீகிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேறுவது சரி என்று பிரிட்டிஷ் நாடாளுமன்றம் முடிவெடுத்து,பின் வெளியேறியது.

பிரிட்டிஷ் அரசு இந்த முடிவை எடுப்பதற்கு முக்கிய நிகழ்வாக இருந்தது,இந்த கப்பற்படை எழுச்சி இவர்களை ஆதரித்து நாடு தழுவிய முறையில் நடைபெற்ற வேலைநிறுத்தங்கள்.சென்னையிலும் மிக வலுவாக இந்த போராட்டக்கள் நிகழ்ந்தது.இதைத்தான் விந்தன் முதல் கட்டுரையில் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
போராட்டங்களை ஆதரித்து அதன் நியாயப்பாடுகளை ஆதரித்து பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆளும் வர்க்கத்தின் போக்குகளை அம்பலப்படுத்தி நூல் முழுவதும் பேசியிருப்பார்.இந்த கள அனுபவம் வாழ்வு அனுபவம் விந்தனின் எழுத்துகளில் முற்போக்கை, எந்தப் பக்கத்தில் நிற்பது என்கிற தெளிவை தந்திருக்கிறது.

தொடர்ந்து இந்த பாதையில் முன்னேறிச் செல்வதில் அவருக்கு நிகழ்ந்த பலவீனம் பொருளாதார ரீதியிலான சரிவில் தொடங்கியது என்றாலும்,இயக்கம் சாராத படைப்பாளியாக கலாநிதி சிவத்தம்பி சொல்வது போல`சுயேட்சையான போக்கு கொண்டவராக விந்தன் இருந்ததனால்அடுத்தக் கட்ட நகர்தலிற்கான தடுமாற்றம் இருந்தது.படைப்பின் நோக்கத்தை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான, இயக்கத்தின் தத்துவ வெளிச்சத்தோடு கூடிய சுயேட்சை அணுகுமுறையை விந்தன் கைக் கொள்ள விரும்பவில்லை.
எனினும் த.ஜெயகாந்தன் சொல்வது போல `தொழிலாளி வர்க்க எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டும் தான்என்கிற தொடக்ககால கம்பீர அடையாளம் விந்தனுக்கு இருந்து கொண்டே இருக்கும்.
ஆதார நூல்கள்:
1)தோழர் விந்தன்:தமிழ்ச்சமுக இயக்கத்தில் விந்தனின் ஆளுமை-பேராசிரியர் வீ.அரசு
2)விந்தன் கதைகள்:தொகுப்பு-மு.பரமசிவம்
3)பாலும் பாவையும்-விந்தன்
4)மனிதன் இதழ் தொகுப்பு-மு.பரமசிவம்
5)கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை-மார்கஸ்,ஏங்கெல்ஸ்
6)வேலைநிறுத்தம் ஏன்?-விந்தன்
7)தமிழ்நாட்டுத் தொழிற்சங்க இயக்கம்-என் நினைவுகள்-பி.ராமமூர்த்தி
8)விந்தன் இலக்கியத் தடம்-மு.பரமசிவம்
9)ஒர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்-ஜெயகாந்தன்
சாகித்ய அகாதமி-சென்னைப் பல்கலைக்கழகம்

(2014 ஜூன் 26 அன்று, சாகித்ய அகாதமி-சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத் துறையும் இணைந்து எடுத்தக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)

Wednesday, June 22, 2016

அணுமூலப்பொருள் விநியோகக் குழுமமும் அமெரிக்காவின் தந்திரமும்



நம் ஊடகங்கள் சீனாவிற்கு எதிரான செய்தியை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. இப்பொழுது அணுமூலப்பொருள் விநியோகக் குழுமத்தில் இந்தியாவை சேர்க்கக் கோரி அமெரிக்கா ஆதரவு தருகிறது என்றும், இதை சீனா எதிர்ப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

உண்மை எது? சீனா என்ன சொல்கிறது? அமெரிக்காவின் நோக்கம் என்ன? இதை அறிய நமக்கு அவகாசம் இல்லாமல், கபாலி கபாலி என்றும் , மு.க வை எதிர்த்து ஜெ என்ன சொன்னார் ? ஜெவை எதிர்த்து மு.க என்ன சொன்னார் என்றே வெற்றாகப் பேசி நேரத்தை போக்கிக் கொண்டிருக்கிறோம்
.
அணுமூலப்பொருள் விநியோகக் குழுமத்தில் இந்தியா சேர்வதற்கு என்ன தேவை வந்தது ? தேவை இருக்கிறது என்றால், வளர்ந்த நாடுகள், சோசலிசச் சார்பு நாடுகளுக்கு எதிரான முடிவெடுக்கும்  , இம்மாதிரி குழுக்களில் இந்தியா உண்மையை உரக்கப் பேசுமா? அல்லது சமீப காலங்களில் இந்தியா அவ்வாறு பேசி இருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

அணு உலைகளுக்குத் தேவையான யுரேனியம் , தோரியம் போன்ற தாதுப் பொருட்கள் தமிழ்நாட்டின் குமரி மாவட்டம் , ஆந்திரக் கடற்கறைகளில் இருப்பதை நாம் அறிந்தோமோ இல்லையோ அமெரிக்காவும் பிரிட்டனும் அறிந்திருக்கிறது. இதனைக் கைப்பற்றத் துடிக்கும் அமெரிக்கா  இந்தியாவைக் கிள்ளிவிட்டு, தொட்டிலை ஆட்டும் சாக்கில், சீனாவிற்கு எதிராக தொடர்ந்து இந்தியாவை நிறுத்தி, தனது ராணுவ அணிசேர்க்கையை , ஆசிய வட்டாரத்தில் வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மோடியின்  சமீபத்திய அமெரிக்க சுற்றுப்பயணத்தில் கையொப்பமிட்ட உடன்படிக்கைகள் வழியாகவும் ,  அமெரிக்காவின்  வெஸ்டிங் அவுஸ் என்ற அணுசக்தி நிறுவனத்திற்கு இப்பொழுது , ஆந்திர கடற்கறையைத் திறந்து விட்டதன் வழியாகவும், இந்தியாவை அமெரிக்காவிற்கு சரண் அடையச் செய்த செயல்கள் வழியாகவும் , உலக அரங்கில் தன் தனித்த கூட்டுச்சேராக் கொள்கை அடையாளத்தை, இந்தியா இழந்து விட்டது.

வளரும் எளிய  நாடுகளுக்கு ஆதரவாக  , சுயேச்சையான முறையில் குரல் கொடுக்கத் தவறிய இந்தியா, nuclear suppliers group ( NSG ) என்ற அணுமூலப்பொருள் குழுமத்தில் இணைந்து எதைச் சாதிக்கப் போகிறது ?

Nuclear  non proliferation treaty ( NPT) என்ற அணுஆயுதப் பரவலிற்கு எதிரான தடைச் சட்டத்தில் கையொப்பம் இடாத இந்தியா உட்பட  , எந்த நாடுகளையும் , அணுமூலப்பொருள் விநியோகக் குழுமத்தில் சேர்க்கக் கூடாது என்ற அமெரிக்கா , இன்று தன் நிலைபாட்டை ஏன் மாற்றுகிறது ? என்றே சீனா கேள்வி எழுப்புகிறது.

அமெரிக்காவின் நோக்கம் இந்தியா உட்பட உலகம் அறிந்ததுதான். சீனாவை அதன் அறிவை அதன் அசுர வளர்ச்சியை அதன் பலத்தை மட்டம் தட்ட வேண்டும் என்கிற, அமெரிக்காவின் சோசலிச எதிர்ப்பு எண்ணமே, ஏகாதிபத்திய அரசியலே காரணம்  ஆகும்.

இந்தியா , அமெரிக்காவின் ராணுவ விளையாட்டிற்கு துணை போகாமல் சீனா
,பாகிஸ்தான்,இலங்கை போன்ற அண்டை நாடுகளுடன், தன் நட்பை

வலுப்படுத்த வேண்டும். நட்பையும் நல்லிணக்கத்தையுமே இந்தியமக்கள்
என்றும் விரும்புகிறார்கள்

நன்றி :https://thetimestamil.com/
23.06.2016














Monday, June 6, 2016

நீர்கொத்தி மனிதர்கள் நாவல் குறித்து


அபிமானியின் நாவல் இது.
1967-1971 காலவாக்கில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய பல கிராமங்களில்  ஒன்றில் நிலவிய கோடைவறட்சி,  குடிநீருக்கான பஞ்சம் , இந்தத் தடத்தில் செல்லும் நாவல், சாதி,சாதிதுவேசம் என்று  ஒதுக்கபட்ட மக்களிடம் வெளிப்படும் சாதிய முரண்பாட்டின் மீதான விமர்சனத்தை எழுப்பிப் பேசுகிறது.

வர்க்கம் சாதி என்ற பிரிவுகளில் கடைநிலையாய் இருக்கும் மக்கள் மத்தியில் வெளிப்படும் முரண்பாட்டில் அரசு தப்பித்துக் கொண்டு , நம்மை அதிகாரம் செய்யும் ,அதிகாரப்பரப்பு குறித்து கேள்வி எழுப்புகிறது நீர்கொத்தி மனிதர்கள்.

சாதிப்படிநிலையில் கீழ்நிலையில் அலைவுறும் மக்கள் மத்தியில், தனக்குக் கீழேயும் அதிகாரம் செலுத்த வேண்டிய,  மனிதர்கள் இருக்கிறார்கள் என்று கருதும் எளிய மக்கள் குறித்து, நமக்கு பெரும் விசனத்தை அபிமானி  உருவாக்குகிறார்.

நாவலின் ஒவ்வொருக் காட்சியும் வலி மிகுந்த துயர் சித்திரமாகப் படிந்து, நம்மை அலைக்கழிக்கிறது.


வாழ்ந்த வாழ்வை ஞாபகம் செய்யும் எழுத்தாக  , அசலான வாழ்வின் மீதான குறுக்குவெட்டுப் பார்வையாக நாவல் அழுத்தமாக விழுந்திருக்கிறது.
நீர்கொத்தி மனிதர்கள் / தடாகம் வெளியீடு / விலை ரூபாய் 220/
போன் : 9791020127 

Monday, May 30, 2016

புலரியின் முத்தங்கள்

 சென்னையில் நடைபெற்ற மனுஷ்யபுத்திரனின் புலரியின் முத்தங்கள் கவிதைநூல் வெளியீட்டு நிகழ்விற்கு  ( 2016 மே 29 )போனேன். கவிதை குறித்தும் அதை யாத்த கவிஞரின் பார்வைகள் நுட்பங்கள் சார்ந்து உரைகள் கேட்க அத்தனை சுவையாய் இருந்தது. தமிழின் நவீன கவிதை சார்பான ஒரு படைப்பாளியின் புதிய தொகுப்பை முன் வைத்து வெவ்வேறு பார்வையில் உரையாடல்கள் நிகழ்ந்தது பாராட்டுக்குரியது. நிகழ்வின் முடிவில் நிறைவுரை ஏற்புரை என ஏதும் இல்லாமல் இருந்ததும் சிறப்பு. ஒவ்வொரு உரை முடிந்த பின்பு நிகழ்வின் தொகுபாளர், உரையில் தெறித்த வரிகள் பார்வைகள் ஊடாக, கேள்வியைத் தொடுத்து, அதன் ஒவ்வொன்றிற்கும் மனுஷ்யபுத்திரனிடம் பதில்கள் கேட்டு சொல்ல வைத்தது புதியதாயும் ஒரு கவிஞரின் பல்வேறு பரிமாணங்களை அவதானிக்கவும் உதவியது. அரசியல் சார்பு தேவையா என தொடுக்கப்பட்ட கேள்விக்கு மனுஷ் மிக அழகாக பதில் சொன்னார். “

 எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது.நாம் உணர்ந்த அரசியலை விடவும் உணராத அரசியலின் அடர்த்தி இங்கு அதிகம் . எவர் ஒருவருக்கும் அரசியல் சார்பு தேவையானதே. அது கூட குறைய இருக்கலாம்.எனினும் அரசியல் அவசியம் என்று பேசி, இதற்கு அப்பால் தான் அரசியல் அழுக்கு படாத சுயம்பு என்று பேசுவதெல்லாம் சரியல்ல  “ என்று கச்சிதமாகப் பேசினார். இரவு பத்து மணி வரையிலும் கவிதை சார்பான நிகழ்வு நடப்பதும் அமர்ந்து கேட்பதும் தமிழின் கவிதைக்கு நல்ல காலம் இதுவென்றே சொல்லலாம்.
” என் கவிதைக்குள் நீ உள்ளே வரும் பொழுது
நீ என்னை நோக்கி வரக்கூடிய
எல்லாக் கதவுகளையும்
நான் கருணையற்று அடைத்து விடுகிறேன்.”
-மனுஷ்யபுத்திரன்

Sunday, March 27, 2016

நாடகமும் நானும்

நான் ஒன்பதாம் வகுப்பு ( 1975)படிக்கும் பொழுது தாயின் மடியில் என்றொரு நாடக ஸ்கிரிப்ட்  எழுதினேன். இன்று யோசித்துப் பார்க்கும் பொழுது அதனினும் பல ஆண்டுகள் முன்பு( 1968) ,எங்கள் ஊர் ஆரல்வாய்மொழியில் வசன மட கோவில் அருகே நடைபெறும் கட்சிப் பொதுக்கூட்டங்களில் இடம் பெறும் , நாடகம்,பாடல் நிகழ்வு போன்றவ்ற்றைப் பார்த்ததன்  பாதிப்பாக கூட இருக்கலாம்; நான் என் பதினான்காம் வயதில் நாடகம் ஒன்று எழுதியது.

பின் பத்தாம் வகுப்பு( 1976) படிக்கையில் ஆண்டு இறுதிப் பள்ளிப் போட்டியில்  பிச்சைக்காரன் வேடம் போட்டு,நானே ஒப்பனை செய்து கொண்டு,மேடையில் தோன்றி நடித்தேன். என் இருபத்தோராம் வயதில்( 1982) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிமுகம் ஏற்பட்டு, அதன் சார்பான அமரர் ஜி.எஸ் மணி கலைக்குழு என்ற கன்னியாகுமரி மாவட்ட  குழுவில் நான் இணைந்து கொண்டு, மாவட்ட்ம் முழுவதும் வீதி நாடத்தை நடத்தி நடித்துக் கொண்டிருந்தேன்.

பின் சென்னை வந்து, 1989 ஆம் ஆண்டு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய மாநாடு ஒட்டிய பிரச்சாரத்திற்கான கலைக்குழுவிற்கான தேடலில் சென்னையில் இருக்கும் நாடக குழுவிற்கான நாடக அரங்கேற்றம் நடந்தது. நான் வடசென்னை நாடகக்குழுவினை உருவாக்கிப் பொறுப்பேற்று அந்த அரங்கேற்றத்தில் குழுவுடன் பங்கேற்றேன்.

பின் அமைப்பு சார்ந்த களப்பணியில் தீவிரமாக இயங்கியதால் நடிப்பதில் இருந்து விலகினேன். ஆனாலும் இன்று வரை வடசென்னையில் நிகழும் நாடக பட்டரைகளில் பங்கு பெற்று, பொறுப்பு வகித்து, பரப்புரைக்கான குழுவிற்கு பயிற்சி அளிப்பதில் உதவி செய்து வருகிறேன்.வரும் ஏப்ரல் 1,2,3 தேதிகளில் ஐந்து குழுவிற்கான பயிற்சி அளிக்கும் பணியில் ஆயத்தப் பணிகளை செய்து வருகின்றோம்.

இது  என் நாடக அனுபவத்தை எழுதிப் பார்ப்பதற்கான ஒரு சிறு குறிப்புகள்தான்.பல சுவையான அனுபவங்கள் ,
திடுக்கிடும் நிகழ்வுகள் எல்லாம் உண்டு.பின் விரிவாக எழுதிப் பார்க்கலாம்.
-மார்ச் 27 உலக நாடக தினத்தை ஒட்டி எழுதியது.

Wednesday, February 3, 2016

13 ஆவது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா

              விக்டோரியா முன் வைக்கும                      ஜெர்மனி
இந்தோ சினி அப்ரிசியேசன் பவுண்டேசன் தமிழக அரசின் உதவியோடு 13 ஆவது சர்வதேச திரைப்படவிழாவை சென்னையில் நடத்தி முடித்திருக்கிறது. ஜனவரி 6 தொடங்கி 13 வரை ஏழு திரையரங்குகளில் 146 படங்கள் திரையிடப்பட்டிருக்கின்றன. தமிழில் கிருமி,மாயா.பிசாசு,ஆரஞ்சு மிட்டாய்,36 வயதினிலே,ரேடியோ பெட்டி, ஓட்டத்தூதுவன்,தனி ஒருவன் என திரைக்கு வந்ததும் வராததுமான பனிரெண்டு படங்கள் தமிழ்ப் போட்டிப் பிரிவில் திரையிடப்பட்டன. 

கிருமியும் ரேடியோ பெட்டியும் முதல் இரண்டு இடங்களைப் பெற்று பரிசுகளைப் பெற்றுள்ளன. சினிமா குறித்த விவாத அரங்குகளும் நடைபெற்றன. மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர், நடிகை மனோரமாவின் சில படங்களும் அஞ்சலி என்கிற முறையில் திரையிடப்பட்டன.

எட்டு நாட்கள் நடைபெற்ற திரையிடலில் சுமார் மூன்று லட்சம் ரசிகர்கள் பங்கேற்றிருப்பார்கள். கண்ட்ரி ஃபோகஸ் என்ற வகையில் சீனா,வெனிசுலா படங்கள் திரையிடப்பட்டன. தொடக்கப் படமாக ஜெர்மெனியின் விக்டோரியா திரையிடப்பட்டது.இந்தப்படம் மிகச்சிறந்த கதைப்படமாக பெர்லின் படவிழாவில் வெள்ளிக்கரடியை வென்றிருக்கிறது.சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதையும் பெற்றிருக்கிறது. சிங்கிள் ஷாட் என்கிற நுட்பத்தைக் கொண்டு இரண்டேகால் மணிநேர படமும் ஒளிப்பதிவு செய்தமைக்கு பெர்லின் படவிழாவில் விருது பெற்றிருக்கிறது.

விக்டோரியா
நான்கு இளைஞர்கள் ஒரு யுவதியைச் சுற்றி பெர்லின் நகரின் ஒரு நாள் பொழுதின் , கொண்டாட்டம் ,அன்பு, கொடூரத்தை , மறைவுலகத்தை சித்திரித்த படம் இது. ஸ்பானிய யுவதி பெர்லினிற்கு வேலை தேடி இடம் பெயர்ந்து வந்து மூன்று மாதம் ஆகிறது.பெர்லினின் ஒர் உணவு மதுபானக் கடை ஒன்றில் பணி முடிந்து , அதிகாலை நான்கு மனிக்கு தான் தங்கும் இடத்திற்குப் போகிறாள். போகும் வழியில் இரவுக் கடையில் மது குடித்த இளைஞர்கள் நால்வர் அவளைப் பகிடி செய்கின்றனர்.தம்மோடு பெர்லினை சுற்றிப் பார்க்க அழைக்க அவளும் உடன் செல்கிறாள். போகும் வழியில் பகிடி மதுவருந்துதல் என்று இருக்கின்றனர்.

இந்த நால்வரில் ஒருவன் பாக்ஸர் . பெர்லினின் மறைவுலகத்தோடு தொடர்பு கொண்டவன். சொன்னே என்கிறவன் யுவதியைப் புரிந்து கொள்ள முயல்கிறான்.அது காதலாய் அரும்புகிறது. இந்தப் புரிதல் அரும்பும் இடம் அற்புதமானது. யுவதியின் கடைக்குப் போகும் சொன்னே , அவளின் அறைக்குப் போக, அங்கிருக்கும் பியானோவில் தனக்கு வாசிக்கத் தெரியும் என்பது போல சொன்னே பாவிக்க, ஒரு புன்முறுவலோடு யுவதி பியானோவில், மெபிஸ்டோ வால்ட்செஸின் இசைக்கோர்வை ஒன்றை வாசித்து தன் உணர்வை வெளிப்படுத்த, இசையில் வெளிபட்ட உணர்வைப் புரிந்து கொள்ளும் சொன்னே , அவளை விட வயது அதிகமானவன் ; எனினும் அன்பிற்கு இது தடையில்லை என்றே காட்சி உணர்த்துகிறது.

யுவதி கள்ளம் கபடம் இல்லாமல் இளைஞர்களோடு நட்புணர்வில் பழகுகிறாள். பாக்ஸர் வங்கி ஒன்றை கொள்ளையிடப் போக,அவன் காரோட்டி போதையில் சரிந்து விழுகிறான். கார் ஓட்ட சொன்னேவை அழைக்க அவன் தயங்க, அவர்களோடு இந்த ஒரு தடவை மட்டும் , கார் ஓட்டி வங்கி கொள்ளைக்கு சொன்னேவின் நண்பியும் போகிறாள். அடிக்கும் கொள்ளையில் பத்தாயிரம் யூரோவை இவர்களுக்குள் பகிர்ந்து கொண்டு,மீதியை மறைவுலக நபரிடம் தந்து விட வேண்டும் என்பது பாக்ஸருக்கு சொல்லப்பட்டுள்ளது.

கொள்ளைக்கான ஒத்திகை கட்டளை பிறப்பித்தல் காட்சியில் வெளிப்படும் டெரரிலிருந்து படம் எகிறிப் போகிறது. வங்கி கொள்ளையிடப் படுகிறது. அவ்வாறே பத்தாயிரம் யூரோவை தம் பங்காக எடுத்துக் கொண்டு,மதுபானக் கடைக்குப் போகும் வழியில் போலிஸ் இவர்களை மோப்பம் பிடித்து சுற்றி வளைக்க பாக்ஸர் பிடிபடுகிறான்.காரோட்டி போலிஸ் துப்பக்கிச் சூட்டில் இறக்கிறான்.பிடிபடும் முன் பங்குத் தொகை பத்தாயிரம் யூரோவை , சொன்னேவிடம் தந்து போகிறான் பாக்ஸர். சொன்னேவும் துப்பாக்கிச் சூட்டில் பலத்தக் காயம் படுகிறான்.அவனைக் காப்பாற்றும் பொருட்டு அவனோடு தப்புகிறாள் யுவதி.  

சொன்னேவை காப்பாற்ற , துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த அடுக்ககத்திலிருந்து போலீசை ஏமாற்றி ஓட்டலிற்கு வந்து சேர்வது வரை படம் படு வேகம். ஓட்டலிற்கு வந்து சேரும் சொன்னேவிற்கு வயிற்றில் பலத்தக் காயம் ரத்தப் போக்கு தான் பிழைக்க மாட்டேன் என்பதை உணர்ந்த சொன்னே, அவளை பத்தாயிரம் யூரோவோடு தப்பிப் போகச் சொல்கிறான்.அவள் மறுக்கிறாள்.நீங்கிப் போக இயலாது என கண்ணீர் சிந்துகிறாள்.வாய்ப்பில்லை கிளம்பிப் போ என்கிறான்;மறுக்கிறாள். இறந்து விடுகிறான் சொன்னே. சொன்னேவின் முன் யுவதி வாயில் எச்சில் ஒழுக அழும் இடம் , பிரிவின் வலியை உணர்த்தும் இடமாக இருந்து அனைவரையும் கசியச் செய்கிறது.

வேறு வழியில்லை. தப்பிச் செல்ல வேண்டும். தப்பிச் செல்கிறாள் ; அதிகாலை அதே நான்கு மணி அளவில். பெர்லின் கூட்டத்தில் கரைந்து போகிறாள்.அவள் தப்ப வேண்டும் என்று உட்லண்ட்சில் படம் பார்த்த எண்ணூறு பேரும்,ஆவலில் இருக்க , அவள் பிடிபடாமல் தப்பியதும் பலத்த கிளாப்ஸ் தியேட்டரில் எழுந்தது.

யுவதியாய் வந்து நட்புணர்வோடும் பாலின நிகர்நிலையில் இளைஞர்கள் நால்வரோடும் அவள் அடிக்கும் லூட்டி பேச்சுகள் , லயா கோஸ்டாவை படு யூத் என்று காட்டுகிறது. சொன்னேவிற்கு அவள் மெபிஸ்டோ இசைக் கோர்வையை வாசித்து விம்மும் பொழுது, தாங்க முடியாத சோகத்தை அடக்கி வெளிப்படுத்த முயலும் இடத்தில் , அன்பிற்கு ஏங்கும் பெண்ணாக மனதோடு கரைந்து விடுகிறார் லயா கோஸ்டா.

ஐரோப்பிய யூனியனில் செழிப்பான வளர்ந்த நாடு என்கிற ஜெர்மனியின்
உண்மை முகத்தை குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் முன் வைக்கிறது செபாஸ்டியன் ஷிப்பர் இயக்கிய விக்டோரியா.சிங்கிள் ஷாட்டில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஸ்ட்டுல்லா ஃபாரந்த் குரோவ்லன்.

நன்றி: தீக்கதிர்-இலக்கியச்சோலை/2016 பிப்ரவரி 01