Saturday, October 29, 2016

தீபாவளி : நிர்வாண வரலாற்றுப் பார்வை





தீபங்களின் வளி =வரிசை என்பது தீபாவளியாக வந்திருக்கிறது. தீபாவளி நமக்கு சமணகாலயுகத்தின் மகாவீரர் பிறந்தநாளை ஒட்டி தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடும் நாளாக இருந்து வந்தது. நராகசுரனை வதம் செய்த,  வெற்றியைக் கொண்டாடும் நாள் தீபாவளி என்கிற இந்துமதச்சாயம் பூசிய வரலாறு விஜயநகரப் பேரரசின் காலத்திலிருந்து (கி.பி 1500) நடைமுறைக்கு வந்தது.

 வடிவம் மாறாமல் இருக்கிறது. உள்ளடக்கத்தை மறைத்து விட்டு, தமக்கு தேவையான சரக்கை ஏற்றி வைத்து விட்டது இந்துமதம்.  இன்றளவும் தீபாவளி  நீடிப்பதற்கு காரணம், காலம்தோறுமான பொருள் உற்பத்தி சந்தையோடும் ,  உற்பத்தியாளர்களின் நலனோடும் இணைத்து, பொருளாதார மேம்பாட்டுச் சந்தைக்கும் உதவும்படி அமைத்தது ஆகும் .

இந்துமதம் என்கிற சொல்லாடல் கிபி 800 அளவில்தான் புழக்கத்திற்கு ஆதிசங்கரன் வழியாக வருகிறது. கிபி 800 முதல்  கிபி 1900 தொடக்க காலம் வரை, சமணம்,பவுத்தம், மீமாம்சம் போன்ற இந்திய தத்துவ இயலிற்கு முற்போக்கு பாத்திரம் வகித்த மரபுகளை அழிப்பதற்கான பெரும் போர் நடைபெற்றது.

களப்பிரர் காலம் தவிர ஏனைய சோழ, பல்லவ, விஜயநகரஅரசுகள், மக்கள் நலனை முன் வைத்து இயங்கிய,  மககள் மத்தியில் பெரும் வீச்சோடு விளங்கிய , முற்போக்கு மரபுகளை ஒழிக்க , கடும் அடக்குமுறைகளை அனல் புனல் வாதங்களை சிரச்சேதங்களை நடத்தியது.

வாழ்வில் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டிய கருத்துக் கொள்கை சார்ந்த பார்வையே நிர்வாணம் என்றும், மோட்சம் என்பது இந்தப் புரிதலே தவிர , வாழ்வை வெறுக்கின்ற பிற்போக்கு சார்ந்த பார்வை மோட்சம் அல்ல என்றும் பார்வையை மக்கள் மத்தியில் விதைத்து சமணர்கள் வளர்ந்தனர்.

 உழவிற்கான கால்நடைகளை கொல்லக்கூடாது என்றும், சொத்தின் மீதான ஆசை தவிர்க்க வேண்டும் என்றும் எதையும் பகுத்து அறிய வேண்டும் என்று , சொத்துடைமைக்கு எதிரான கருத்தாடலாகஇயல்பில்  பவுத்தம்,சமணம், மீமாம்சம் இருந்ததால் அதை சகிக்க இயலாமல் ஒழிக்க ஆளும் சக்திகள் முனைந்தனர்.

மகாவீரரின் ஆளுமை இமயம் முதல் குமரி வரை பெரும் வீச்சோடு இருந்தது.அவர் நிர்வாணம் எனும் மகாஞானம் பெற்ற நாளை தீபங்கள் ஏற்றி கொண்டாடிய மரபு தேசம் எங்கும் இருந்தது.

 இந்துமதச்சாயம் பூசப்பட்ட இந்தத் தீபாவளிக்கு வயது 500  ஆகும்.
முற்போக்கு மரபுகளின் மீது நம்பிக்கையும், பிறப்பில் உயர்வு தாழ்வை கற்பிக்கும் இந்துமதத்தின் மீது விமர்சனப் பார்வையும் கொண்டவர்கள், தீபாவளியின் உண்மை வரலாற்றைப் புரிந்து கொண்டு, விடுபட்டு போன பகுத்து அறியும் மகாவீர மரபை ஞாபகம் கொள்ளும் பொருட்டு, வரலாற்றின் மீது புதிய ஒளியை பாய்ச்ச வேண்டும்.

இந்தப் பார்வையிலான தீபாவளியைக் கொண்டாடுவோம்.
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.