Saturday, June 14, 2014

முதலாம் பராந்தக சோழன் காலத்து அபூர்வ சிற்பம்

நாம் காண்கிற இந்த சிற்பங்கள் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தின் திருக்கடையூர் தாண்டி இருக்கின்ற புஞ்சை என சொல்லப்படுகின்ற பொன்செய்வயல் என்ற கிராமத்தின், சிவன் கோவிலின் மூலட்டான சுற்று சுவரில் காணப்படுகின்றவையாகும்.

சோழ மன்னன் முதலாம் பராந்தகனின், இராஜ இராஜ சோழனின் தாத்தா காலத்தியது ஆகும்.கி.பி 9 ஆம் நூற்றாண்டு காலத்தின் சிற்பங்கள் இவைகள். பல்லவர் காலத்தின் சிற்ப முறைமையை பின்பற்றினாலும்,அதிலிருந்து தனித்த அடையாளத்தையும் கொண்டது.பல்லவர்களின்  5 ஆம் நூற்றாண்டு காலத்தின் மாமல்லபுர சிற்பங்கள்,ஒரே பாறையின் முகப்பை தட்டையாக செதுக்கி வடிவமைத்துக் கொண்டு,பின் அதிலிருந்து புடைப்பு முறையில் குடைந்து செய்யும் பாணியாகும்.இதில் பல்வேறு புராண கதைகளை வடிவமைத்துக் கொண்டார்கள.இந்தப் பாறையின் உயரம் 30 மீட்டர் இருக்கும் அகலம் 60 மீட்டா ஆகும்.

பொன்செய்வயலின் சிற்பங்களும் பல்வேறு கதைகளை சொல்லும் நடனம்,இசை மரபை சொல்லும் சிற்பங்கள் தான்.,மகாபாரதம்,இராமாயாணம்,சொல்லும் பல கதைகள் சிற்பங்களாக்கப்பட்டுள்ளன.ஆனால் 30 செண்டி மீட்டர் அகலமுள்ள கற்கள்  ஒவ்வொன்றிலும் பல கதைகள் அவ்வளவு தீர்க்கமாக செதுக்கப்பட்டுள்ளன என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

பிரமாண்ட பாறையில் செதுக்கப்பட்ட பல்லவர் காலத்து ஓவிய முறையிலிருந்து மாறுபட்டு,அதே பாணியை  30 செண்டிமீட்டரில் குறுக்கி குடையப்பட்ட சிற்பங்கள் நம்மோடு சோழர்களின் கலை வரலாற்றை பேசிக் கொண்டிருக்கிறது.இந்தக் கோவிலின் சிற்பத்தை எனக்கும் கவிஞர் ச.விசயலட்சுமிக்கும் சொல்லி ஆற்றுபடுத்தியவர் தமிழ்நாட்டின் மக்கள் ஓவிய ஆளுமை சந்ரு ஆகும்.

இதற்கு முன் பின் இந்தியாவில் எங்குமே இந்த பல்லவ,சோழ சிற்ப மரபை பார்க்க இயலவில்லை என்கிறார் சந்ரு.அரிய சிற்ப மரபை எமக்கு அறிமுகம் செய்த சந்ரு அவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

Friday, June 13, 2014

உண்மையாய் நிற்கிறது உண்மை

-இரா.தெ.முத்து

தம்பட்டம் போட்டுக் கொண்டு விளம்பரப்படுத்திக் கொள்ளாத உண்மை

இருப்பிலேயே தான் புரிந்து கொள்ளப்பட வேண்டுமென்று கோரி நிற்கிறது

 தான் உண்மையாக இருக்கிறேனென்று உண்மை எப்படி சொல்ல இயலும்?

 உணரப்பட வேண்டும் உள் வாங்கப்பட வேண்டும் என்றே விரும்புகிறது உண்மை

பொய்மைகள் உழலும் கிரகத்தில் உண்மையின் வெளிச்சம் கண்டுக் கொள்ளப்படாது
போவதென்பது பெருஞ் சோகந்தானெனினும்

 நிரந்தரமில்லை என்பதை
புரிந்து  கொண்டிருக்கிறது உண்மை

பொய் புனைசுருட்டு பம்மாத்து பணங்களில் சாய்ந்தது பொதுமனம் 
என்று மொட்டையாக கருத்து சொல்ல விரும்பாத உண்மை

உண்மையின் உண்மையை பொதுமனதோடு கொண்டு சேர்க்க
தொடர்ந்த உரையாடலையும் களமாடுதலையும் முன் மொழிகிறதெனினும்

எக்காலத்திற்கும் பொய்மை தன்னை பாதுகாத்திட இயலாதென்ற
வரலாற்றுக் கணக்கையும் வரித்துக் கொண்ட உண்மை

வீடு வீடாக வாழ்க்கையின் உண்மையை 
சலுகை உரிமை நியாயங்களின்  உண்மையை
கொண்டு சேர்க்க 

உண்மையின் முகத்தோடு உண்மையாய்   நிற்கிறது காலஉண்மை

நன்றி:வீதி இதழ்/2014 ஜூன்