Wednesday, October 18, 2017

பண்டிகைகளும் கொண்டாட்ட மனநிலையும்

 


தீபாவளியின் கொண்டாட்ட மனநிலைக்கு  , பொருள் உற்பத்தி சார்ந்த சந்தை மனோபாவம் காரணம். சமுகத்தின் வாழ்வாதார இயங்குதலிற்கு, அரசுகளின் நிலைத்தன்மைக்கு சந்தை அவசியமானது.

தீபாவளி சார்ந்த  காலத்தில், உற்பத்திப் பொருட்களின் வணிக விநியோகச்சந்தை சார்ந்த பணப்புழக்கம் , தொழிலாளர்கள் தொட்டு முதலீட்டாளர்கள் வரை அவசியமானது.

ஆண்டுதோறும் வரும் , இருபதிற்கும் மேற்பட்ட மதங்கள் சார்ந்த சாராத பண்டிகைகள், மாதம் தோறுமான திருமணங்கள் , இதனை ஒட்டிய உற்பத்திகள், பணப்புழக்கம், பொருள் உற்பத்திக்கும் அதன் விற்பனைக்கும், அதை ஒட்டி வாழ்வு நடத்துவோருக்கான , வாழ்வாதார தேவைகளுக்கு அவசியமானது.அதற்கு கொண்டாட்ட மனநிலை உருவாக்கம் அவசியம்.

கொண்டாட்டமும் சந்தையுமாக பண்டிகைகள் மக்கள் முன் வருகிற பொழுது, அன்றாடங்களிலிருந்து விடுபட்டு மனம் மகிழ,  மக்களுக்கும்  பண்டிகைகள் அவசியம். இந்த புள்ளிகளிலிருந்துதான் கொண்டாட்டங்கள் உருவாக்கப்படுகின்றன.

இதனை முறைபடுத்துவதும் உதவி செய்வதும் அரசுகளின் பொறுப்பாக இருக்க வேண்டும். சமயம் சார்ந்த பண்டிகை எனில், அதில் சமயத்தின் இடம் , அரசியல் சாசனத்திற்குட்பட்ட முறைகளில் இருந்து இயங்கிட சட்ட சமுகம் மற்றும் அறிவு சமுகம் வழி காட்ட வேண்டும்.

கொண்டாட்டமே கூடாது என்பதும், யாவுமே மதம் சார்ந்தது என, அறிவு சமுகம் கொண்டாட்டங்களிலிருந்து தள்ளி நிற்பதும் , கொண்டாட்டங்களை சனநாயகப்படுத்த உதவாது.

Monday, July 17, 2017

மல்லிகைப் பூவே ..... மல்லிகைப் பூவே

                                                              மல்லிகைப் பூவே
                                                                மல்லிகைப் பூவே
                                                                பார்த்தாயா?
                                                                 பொன்மாலை
                                                                எங்கள் தோட்டத்தைப்
                                                                பார்க்கப் பூத்தாயா?
                                                                ஆயிரம் கோடிகள் செல்வம்
                                                                அது
                                                                யாருக்கு இங்கு வேண்டும்
                                                                 அரை நொடி என்றால் கூட
                                                                  இந்த
                                                                ஆனந்தம் ஒன்றே போதும்
                                                                 பூவே
                                                                எங்கள் தோட்டத்தைப்
                                                                 பார்க்கப் பூத்தாயா

இது கவிஞர் தாமரை எழுதிய பாடல். இசை எஸ்.ஏ. ராஜ்குமார்.இயக்குநர் விக்ரமன் இயக்கிய உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் இடம் பெற்றப் பாடல்.அஜித்தும் ரோஜாவும் ஆர்ப்பாட்டம் இல்லாத நளினமான நடனத்தில் ஆடிப் பாடி நடித்தப் ரசிகர்களை மகிழ்வித்தப் படம். 1999 ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம். யார் பாடியது என்று நான் பார்த்த யூ டியூப் பதிவில் செய்தி இல்லை.

தாமரையை தமிழ்நாடெங்கும் , யார் இந்த தாமரை என விசாரிக்க வைத்தப் பாடல்.இது.  தாமரை எழுதிய இரண்டாவது பாடல்.   மல்லிகைப் பூவை முன் வைத்து, அதனிடம் ஒரு பெண் தன் மனதை பார்வையை பகிர்ந்து கொள்வதான தொனியில் பாடல் காட்சிபடுத்தப் பட்டிருக்கும். பெண் குரலோடு ஆண் குரலொன்றும் டூயட் பாடியிருக்கும்.


பாடலே கவிதையாகவும் வண்ணம் கூட்டி நிற்கும் பாடல்.

ஆயிரம் கோடிகள் செல்வம்
அது
யாருக்கு இங்கு வேண்டும்
அரை நொடி என்றால் கூட
இந்த
ஆனந்தம் ஒன்றே போதும்

பாடலின் பல்லவியில் வரும் இந்த வரிகளால்தான் என்னளவில் கவிஞர் தாமரை அவர்கள் குறித்த கவனமும் மதிப்பும் உருவாகியது. பணம் மட்டுமே மனிதர்களின் ஏற்பை மறுப்பை நிகழ்த்த வல்லது என்கிற தனியுடைமை சார்ந்த கருத்துருவாக்கம் , சமுகத்தின் செல்நெறியாக இருக்கிறது ; தொடர்ந்து கொண்டிருக்கிறது..இதன் பின்னணியில் எழுதப்பட்ட இந்தப் பாடல், பணத்தை செல்வத்தை அதன் மதிப்பை மறுத்து, அந்த இடத்தில் அன்பை பரிவை கூட்டுறவை அதனூடாக உருவாகும் ஆனந்தத்தை முன்மொழிந்து பாடுகிறது
.
நட்பில் காதலில்  குடும்பத்தில் சமுகத்தில் ஆயிரம் கோடி செல்வத்தை துச்சமாக மதித்து , பணத்திற்கு அப்பாற்பட்ட மனிதர்கள் மீதான நேசத்தை பாடல் எழுதிச் செல்வது என்பது, அன்பை பரிவை பொதுவுடைமையை நோக்கிய மாறுதலை நோக்கிய , அதனை முன்னெடுத்துப் போராடுகிற அன்பு சக்திகளுக்கு இந்தப் பாடல் மிகுந்த உற்சாகத்தை தந்து கொண்டே இருக்கும்.

 வடசென்னை திருவொற்றியூர் தேரடியில் நிகழ்ந்த , தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின், கலை இரவு மேடையில் கவிஞர் தாமரை 1999 ஆண்டில்  , இந்தப் பாடலிற்காக அழைத்துப் பாராட்டப்பட்டர் . எனது கேள்விகளுக்கு கவிஞர் தாமரை பதில் சொல்லும் நேர்காணலாக நிகழ்ச்சி வ்டிவமைக்கப்படிருந்தது.

Thursday, June 1, 2017

தமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் வேள்பாரி




வீரயுகநாயகன் வேள்பாரி எனும் தொடரை சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில்  முப்பதியிரண்டு வாரங்களாக , எட்டு மாதங்களாக எழுதி வருகிறார். அவ்வப்பொழுது வாசித்து வருகிறேன். பரபரப்பான இயக்கம் சார் பணிகளில் இருக்கும் எனக்கு, இந்தத் தொடரை , தொடர்ந்து வாசிக்கப்  பயம் தொடர்ந்து கொண்டே வந்தது.

தமிழ் அடையாளம் சார்ந்து திணை , பொழுது சார்ந்து எழுதப்படும் புனைவு , வாசிக்கப் போய், அப்படியே கட்டிப் பிடித்து உள்ளிழுத்துக் கொள்ளும் சதுப்புநிலச் சரிவு புதைகுழி போன்ற ,வாசிப்பு அனுபவம் கிடைப்பதால் தோய்ந்து போய் பொழுதுகள் போகுமோ என்கிற் அச்சத்தில் தொடர்ந்து வாசிப்பதை தவிர்த்து வந்தேன்.

இயலவில்லை. சில வாரங்களாக தொடர்ந்து வாசிக்கிறேன். செந்தாது ஒட்டிக் கொண்ட சூழலை வள்ளி சொல்லும் பொழுது அப்படியே மனம் பரவசமாகி, அந்தக் காட்டிடை வள்ளியின் அருகன் , முருகன் போல நாமும் அவளோடு உடன் செல்கிறோம்.

அன்னமழகியரிசியின் கதிரைக் கசக்கி உண்ட வள்ளிக்கு விக்கலெடுக்க , அவளுக்கு நீர் தேடி, ஓடும் முருகன் , கானவெள்ளெருக்கு விளைந்திருக்கும் நிலம் பர்ர்த்து ஓடி , மண்ணைத் தோண்டி நீரைக் கண்டடையும் பொழுதில் அங்கு முருகன் இல்லை  ; நாம் தான் இருக்க உணர்கிறோம்..

”  நீர் இருக்கும் இடத்தில் தழைக்கும் வேர் அல்ல; வேர் இருக்கும் இடத்தில் சுரக்கும் நீர் “  என்று காதலிற்கு முருகன் சொல்லும் விளக்கம் உண்மை.
தோள் சாயும் காதலைத் ஏந்திப் பிடித்து நிலைக்கச் செய்யும் ஆறுதல் காதல் என்று , அன்பைத் தவிர பிரிதொன்றை தேடாதது காதல் என்று முருகனின் விளக்கத்தில் தொடரோடு நாம் நெருக்கமாகிறோம்.

 குறிஞ்சி, முல்லை, நிலம் சார்ந்த எனக்கு , மழைக் குறித்தப் பகிர்வு,   பதின் பருவ மழை வாசனையைத் மீட்டுத் தருகிறது. தூசி,தும்மல்,கூடல்,முதுநிலை என்ற நாம் அயித்துப் போன விடயத்தை , நம் இலக்கியங்களில் பதிந்து கிடப்பதை, புனைவுச் சித்திரமாக்குகிற பொழுது , அதன் ஈர்ப்பு பெருமகிழ்ச்சித் தருகிறது.

இயற்கையிலிருந்து விலகிப் போன கற்றல்முறை குறித்து கபிலர் விசனப்படும் இடமும் , பாரி கேட்ட கேள்விக்கு , பொருளோடு மொழியைப் பொருத்திய ஆதிகாலம் குறித்ததாக, கார்த்திகை விண்மீன்கூட்டம் குறித்ததாக, பாரியின் கேள்வியை கபிலர் எதிர் கொள்ளும் , மற்றொரு இடமும் , இருபெரும் ஆளுமைகளால் நாம்  வியக்கின்ற இடங்களாகும்.

உதிரன்,நீலன் திசைவேழர் என்று பாத்திரங்களுக்கானப் பெயர்கள் , நம் ஆதி தமிழ் அடையாளத்தை தடப்படுத்தும் , வந்த இடத்தை ருசுப்படுத்தும் சித்திரப்பாடுகள்.

மணியன் செல்வன் கோட்டோவியம் குறிஞ்சி நிலத்தை அதன் மனிதர்களை அற்புதமாக காட்சிபடுத்தித் தருகின்றன.

ஒரு வாரம் முன்பு வாங்கிய விகடனில் இந்த அத்தியாயத்தை ருசித்து, உணர்ந்து முகர்ந்து அனுபவித்து வாசிப்ப்பதற்குள்  , 33 ஆம் அத்தியாயத்தின் விகடன் வந்து விட்டது.
வாழ்த்துகள் சு.வெ !


Thursday, May 25, 2017

கூடற்றக் குயில் : நா.காமராசன்


இருபத்து மூன்று வயதில் ,  இரண்டாயிரம் ஆண்டு (இலக்கிய ஆதாரம் கிடைத்தபடி)  வரலாற்றுப் பெருமை உடைய தமிழ்க்கவிதையை , மரபை யாப்பை அறிந்து , அதன் கதி மாற்றி , போக்கு மாற்றி , பொருள் மாற்றி , திசை மாற்றி விட்ட , பாரதிக்குப் பிறகான முதல் விதை , புதுக்கவிதையின் அரசன் நா.காமராசன்.

   வயலார் ராமவர்மா, கலாநிதி கைலாசபதி,காண்டேகர் போன்ற மானுடநேயம் கொண்ட இடதுசிந்தனை கொண்ட படைப்பாளிகளின் படைப்பில் உதவேகம் பெற்று, தமிழண்ணல்  வழிகாட்டலில் படிமமொழி பழமொழி கற்று, இருபதாம் நூற்றாண்டின் புதுக்கவிதைக்கு புதுப்பாதை அமைத்தவர் காமராசன்.

 இளவயதில் தமிழ்க்கவிதைப் போக்கை மாற்றி அமைக்க வேண்டுமானால், தமிழின் கடந்த கால கவிதையை , அதன் வரலாற்றை , ஆழங்கால் கண்டு மொழியில் கவிதையில் தோய்ந்து போய் , சமுகத்தை உற்றுப் பார்த்து , புதுச்சூரியனாக பிறப்பதன் வழியாகவே  சாத்தியமாகி இருக்க வேண்டும்.

 சாத்தியமாக்கி இருக்கிறார்.

சாத்தியத்தை  தொடர்ந்து வடிவிலும் பொருளிலும் முன் செலுத்துவதற்கு மாறாக வடிவில் படிமத்தில் அழகியலில் மட்டுமே பயணம் என்று குறுக்கி தொடர்ந்ததன் விளைவு , வானம்பாடிகளின் வானத்திலிருந்து விலகிப் போய், மு.கருணாநிதி, எம்.ஜி.இராமச்சந்திரன் புகழ் பாடி, கூடற்ற குயிலாகிப் போனார் நா.கா
(தொடரும் )

Tuesday, May 2, 2017

தமிழ்த் தேசிய சலனப்படம் 100 ஆண்டு


இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் தலைமையிலான உலகாயுதா அமைப்பு, சர்வதேச தொழிலாளர் தினமான மே1 அன்று , சென்னை காமராசர் அரங்கில், தமிழ்த் திரைப்பட நூற்றாண்டு விழாவை, தமிழ்த் தேசிய சலனப்படம் 100 ஆண்டு என கொண்டாடியது.

தமிழ்சினிமாவின்  மூத்தத் தொழிலாளர்கள்  நூறு பேருக்கு அவர்களின் திரைத்துறைப் பங்களிப்பை பாராட்டும் விதமாக, ஒவ்வொருவருக்கும்  ஒரு சவரன் தங்க நாணயம் வழங்கும் விழாவாக நடைபெற்றது. விழா தொடக்கத்தில் FEFSI ஐ நிறுவிய முன்னோடிகள் நிமாய்கோஷ், எம்.பி.சீனிவாசன் படங்களை இயக்குநர் முக்தா சீனுவாசன், எடிட்டர் மோகன் திறந்து வைத்துப் பேசினார்கள்.

நடிகர் விஜய் சேதுபதி வழங்கிய தங்க நாணயங்களை அவரின் அம்மா சரஸ்வதி காளிமுத்து, விஜய் சேதுபதியை அறிமுகம் செய்த, இயக்குநர் சீனுராமசாமிக்கு வழங்கி , இந்த நிகழ்வை தொடங்கி வைக்க், பின் நூறுபேருக்கும் திரைத்துறை ஆளுமைகள் ரோஹிணி,எடிட்டர் லெனின், எடிட்டர் மோகன்,இயக்குநர் சேரன்,இயக்குநர் அமீர், இயக்குநர் ஸ்டான்லி,இயக்குநர் செல்வமணி என தொடர்ந்து தங்க நாணயங்களை வழங்கிப் பாராட்டினார்கள்.

கவிஞர் பரிணாமன் எங்களைத் தெரியலையா பாடலைப் பாடி அனைவருக்கும் மே நாள் வாழ்த்துகள் சொன்னார்.

விஜய்சேதுபதி பேசும் பொழுது,  “ எனக்கு எல்லாமே தமிழ் சினிமாதான். எனக்கான அடையாளம் சினிமாதான்.இயக்குநர் ஜனநாதன் இந்த விழாவின் தேவையை சொன்ன பொழுது, நூறு தங்க நாணயங்களை வழங்கி,எனக்கு அடையாளம் தந்த தமிழ் சினிமாவிற்கு , என் நன்றிக் கடனை செய்திருக்கிறேன் “ என்றார்.

விழாவிற்கு இயக்குநர் அமீர் தலைமையேற்க , இயக்குநர் கரு.பழனியப்பன் நிகழ்வை தொகுத்து வழங்கினார்.

என்னை விழாவில் பங்கேற்க இயக்குநர் ஜனநாதன் அழைத்திருந்தபடியால், நானும் பங்கேற்று ,ஜனநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள் சொன்னேன். தமுஎகச சார்பில் கி.அன்பரசன், பேராசிரியர் அண்ணதுரை போன்றோரும் நிகழ்வில் பங்கேற்றனர்

Monday, March 6, 2017

பெட்ரோல்கடல்






மீன்கறிக்கு உமிழ்நீர் சுரக்கிறது குழந்தை 
வாங்கிட ஆளின்றி கொண்டு வந்த மீனைக்
கொண்டு போகிறான் வேலப்பன்
வறள் உப்பு வாசக் காற்று
பெட்ரோல் கவிச்சியை கொண்டு சேர்க்கிறது
மீன்சந்தை தோறும் கண்ணீர்கதையாடல் 


சேவையின் மீது நம்பிக்கை சேர்க்க உபகரணங்கள் எதுவுமின்றி
கடற்கறையில் கசிந்துருகிக் கிடக்கிறது வாலிபம்
விபத்தா சதியா மீவெளிப் பகிர்வுகள் பார்வைக்கு வருகின்றன
கப்பல் மீது குற்றப்பத்திரிகை உண்டா
எழுகின்றன கேள்விகள்
சுவாசச்சிக்கலால் இறந்து மிதக்கின்றன கடலினங்கள்
இருந்து தொலைக்கின்றன அரசுகள்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...








தந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அருகில் போய் பூக்களைத் தொட்டுப் பார்த்து அதன் அழகில் வண்ணத்தில் பூரித்தேன்.மணமேடையின் வலதுப்பக்கத்தில் இருந்த மஞ்சள் பூசப்பட்ட மண்பானை அடுக்குகள் பார்த்து, சரேலென நினைவு ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின் போனது.தமிழ்க்குலம் தழைத்து நடந்து வந்த பண்பாட்டுப் பாதையை நினைவுகளில் ஓட்டி கண்ணீர் கசிய நின்று கொண்டிருந்தேன்.

திருமண நாளன்று ( 2017 மார்ச் 02 ) காலை எட்டரை மணி நெருங்க உற்றாரும் சுற்றமும் வரத் தொடங்கி இருந்தார்கள்.மணமக்களின் பெற்றோர் இவர் இவர் எனக் காட்ட கவிஞர் ச.விசயலட்சுமி-சு.பழனிக்குமார் / அனந்தநாயகி-மனோகரன் கழுத்தில் அழகிய மாலைகள் சூட்டி அருகருகில் நின்று கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை கோபிநாத் அழகிய பட்டு வேட்டிக் கட்டி தோளில் துண்டு அணிந்து கொண்டு மணமேடை வந்து அமர்ந்தார். அன்பின் தேவதை சு.ப .நிவேதிதா கட்டம் போட்ட கூரைப்புடவைக் கட்டி மேடைக்கு வந்தார். மணமக்களைச் சுற்றி வித விதங்களில் பட்டுப் புடவைகள் கட்டிக் கொண்ட பெண்கள் மகிழ்ந்தும் பேசிக் கொண்டும் மணமக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரங்கினுள் இருந்து ரசிக்கத் தக்க அளவில் நாயனம் தவிலின் லயத்தோடு கூடிய இசையை தூவிக் கொண்டிருந்தன. மங்கலநாண் வைக்கப்பட்ட பூக்கள் தேங்காய் வாழ்த்தரிசித் தட்டு வாழ்த்துப் பெற சுற்றுக்குத் தரப்பட்டன.அவரவர்கள் வாழ்த்த வாழ்த்தரிசி, பூக்களை எடுத்துக் கொண்டு மங்கல்நாண் தட்டை வாழ்த்தி மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். தட்டு மண மேடைக்கு வந்தது. நாயனத்திலிருந்து "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி " என்று அமரத்துவம் கொண்ட கவியரசு கண்ணதாசனின் பாடல் உதிர்ந்து கொண்டு வந்தன.

கண்களில் ததும்பி நின்று, தொண்டையில் இறங்கிய கண்ணீர் , தொடர்ந்து சுரந்து மகிழ்வின் அதிர்வைத் தந்து கொண்டிருந்தது. மேடையில் நின்ற பார்த்திபனின் அம்மா நாயனத்தை நோக்கி தன் கையசைப்பில் கெட்டி மேளத்திற்கான சமிக்ஞை தந்து கொண்டிருந்தார். கெட்டிமேளம் ஒலிக்க அன்பின் தேவதை சு.ப.நிவேதிதா கழுத்தில் காலை 10.35 மணிக்கு மங்கலநாணைக் கட்டிக் கொண்டிருந்தார் கோபிநாத் . 

மனதில் வந்து நின்றது ஆண்டாளின்
இந்தப் பாடல்:
“ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

Sunday, March 5, 2017

திரைக்காதலன் பாலுமகேந்திரா







இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் உதவியாளர் ரோஸ்லின் பிப்ரவரி 9 ஆம் தேதி காலையில் போன் செய்து, 13 ஆம் தேதி நம்ம சாரோட மூணாவது நினைவுநாள். வரணும் என்றார்.அவசியம் வருவேன் என்று பிப்ரவரி 13 காலை 11 மணிக்கு சென்னை ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டர் 1  சென்றேன். போகும் பொழுது இயக்குநர் பாலுமகேந்திரா  குறித்த டாக்குமெண்ட்ரி( இயக்கம் வசந்த்) ஓடிக் கொண்டிருந்தது.ஒன்றரை மணிநேரம் ஓடியது டாக்குமெண்ட்ரி.அருமையான முயற்சி.

பின்னர் பாலுமகேந்திரா குறித்த ஞாபகப்பதிவு. இதில் பாலுமகேந்திரா மகன் சங்கிபாலுமகேந்திரா,இயக்குநர் சீனுராமசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நடிகர் அர்ச்சனா, ஓவியர் வீரசந்தனம், ஒளிப்பதிவாளர் மூர்த்தி, ஜூனியர் பாலையா, இயக்குநர் மீரா கதிரவன், நிழல் திருநாவுக்கரசு, இரா.தெ.முத்து,ரோஸ்லின் என் பங்கேற்றுப் பேசினோம்.

சங்கி தனக்கு  ”தன் அப்பா  நண்பர் ”   என்றார். சீனுராமசாமி ” தன் உதவியாளர்களை மிகுந்த தோழமையோடு நடத்தியவர் சார்’  என்று நெகிழ்ந்தார். ”தன் ஞானத்தகப்பன் பாலு சார்” என்று குறிப்பிட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்.நடிகை அர்ச்சனா பேசும் பொழுது “ சினிமாவில் பலரால் மறுக்கப்பட்ட சுதா என்கிற என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி எனக்கு வாழ்வும் முகமும் தந்தவர் சார் ” என்றார்.

  “பாலுவை மகத்தானக் கலைஞன் என்று கொண்டால் அவரின் பிறகுணங்கள் காணாமல் போகும் “ என்று விமர்சனங்களுக்கு பதில் தந்தார் வீர சந்தானம்.  ” பொருத்தமான பாத்திரங்களில் தன்னை நடிக்க வைத்தவர் பாலுமகேந்திரா” என்றார் ஜூனியர் பாலையா. “நானும் சாரின் மாணவர் “ என்று மகிழ்ந்தார் மீரா கதிரவன்.

 “பாலுமகேந்திராவிற்கும் எங்கள் தமுஎகச அமைப்பிற்கும் எனக்கும் முப்பதாண்டு நட்பு என்றும், எதையும் வெளிப்படையாக எங்களோடு விவாதித்து, உடன் நின்று செயற்படும் நல்ல நண்பர்; ஆசிரியர் என்றும், அவர் நடத்திய சினிமாப் பட்டறை கட்டிடத்தில் அவருக்கான படைப்புகளை அவர் புழங்கிய நூல்களைக் கொண்ட காப்பகம் ஒன்றை அமைக்க ஷங்கி உள்ளிட்டு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும், அவர் காலத்திலேயே அழிந்து போன அவரின் சினிமாக்களை போல் அல்லாமல் , தமிழின் மிச்சமுள்ள சினிமா படைப்புகளை திரை ஆவணக் காப்பகம் உருவாக்கி அதில் வைத்து தமிழ்நாட்டு அரசாங்கம் பராமரிக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் “ என்றும் நான் ( இரா.தெ.முத்து ) பேசினேன்

Monday, February 6, 2017

பேராலம்


காலம் சும்மா 
கடந்து போக 
அனுமதியேன்
பக்கம் பரபக்கம்  
கூராய்வித்தே
அனுப்புவேன்
அடி மேல் அடி
கண்ணீராற் நிரம்பிய
பெருந்துயர்
தழைப்பதற்கான
துளிர்விட்டே
சரிகிறது பேராலம்


மோடி வைக்கும் ஆப்பு



எங்கள் ஹோம்மினிஸ்டர் காலையில் பேப்பரைப் பார்த்து 
” என்னங்க மோடீ பட்ஜெட்டுல ஒரு கோடி பேருக்கு வீடு கட்ட 23000 கோடி ஒதுக்கீடு பண்ணியிருக்காராம. அதை வகுத்தா தலைக்கு எவ்வளவு வரும்னு சொல்லுங்க ” என்றார். 

கணக்குப் போட்டு “ 23000 ரூபாய் வருது ”என்றேன். ”23000 தில என்ன வீடு கட்ட முடியும்; இந்த ஆளு பன்றது ஒன்னும் சரியில்லையே. பாருங்க இந்தாளு 500 ஐயும் 1000ஐயும் ஒழிச்சாரு. நீங்க என்கிட்ட 3000 ரூபாய் கடன் வாங்கித் தராம இருக்கீங்க.” 

”இரண்டரை லட்சத்துக்கு மேல பேங்குல கல்யாணத்துக்கு காசு தர மாட்டாங்கிறான்னு பக்கத்தில சொன்னாங்க. அதுக்கு ஒவ்வோரு செலவுக்கும் வவுச்சர் வாங்கி பாங்குல தரணுமாம்.”

”நாம என்னா கல்யாணத்துல தங்கபாளமா ரெட்டிகாரு போல வாங்கி கொடுக்கப் போறோம். வர்ற ஆயிரம் பேருக்கு ஒரு வேள சோறு தரப் போறோம். அதுக்கும் ஆப்பு வைக்கிறானே இந்த மோடீ. ஒன்னும் சரியில்லங்க” என்று காலையில் பொரிந்து தள்ளிவிட்டுப் போனார்

முடிந்து போனதா காந்தி சகாப்தம்?






இது போன்றதொரு குளிர்காலம் அது. 1948 ஜனவரி 30 வெள்ளி மாலை 5 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகி விட்டதே என்ற பரிதவிப்பில் 79 வயதைக் கடந்த மகாத்மா காந்தி தன் பேத்திகளான அபா, மனு தோள்களில் மிதந்து வருகிறார்

.புல்வெளியின் குறுக்காக நடந்து மேடைக்கு வர நடக்கிறார். புஷ்கோட் அணிந்த உடல் பெருத்த அந்த நபர் நின்ற இடத்தில் ஒரு குழந்தை நின்றிருந்தால் கூட காந்தி மீதான குறி தப்பி இருக்காதுதான். காலை தொட்டு வணங்குவது போல வந்த நபர், தடுக்க வந்த அபாவை பெண்ணென்றும் பாராது தள்ளி சாய்த்து விட்டு, கால்சராயிலிருந்து பெனிட்டா ரக துப்பாக்கியை எடுத்து, மூன்று முறை காந்தியை நோக்கிச் சுட்டான். 

முதல் இரண்டு குண்டுகள் காந்தியின் வலதுமார்பை துளைத்தது. மூன்றாவது குண்டு காந்தியின் வலது பக்க வயிற்றை துளைத்தது. ஹே ராம் என்ற சொற்களை உச்சரித்தபடி புல்வெளியில் சாய்ந்து விழுந்தார் காந்தி. 

டெல்லி பிர்லா மந்திரின் மேல் ஒளிர்ந்த மாலை நேரச்சூரியன் யாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருந்தான். கண நேரத்தில் மகாத்மாவின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்டது என ஆர்.எஸ்.எஸ் சின் நாதுராம் கோட்சே நினைத்தான். 

எழுபது ஆண்டுகள், என்ன எண்ணாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அரசிலிருந்து மதத்தை பிரிக்க எண்ணியவனின், சிறுபான்மை மக்களின் கேடயமாக விளங்கியவனின் , சிறுபான்மையை மதிக்கும் பெரும்பான்மையின் செயலே சுதந்திரம் என்ற மகாத்மா காந்தியின் சகாப்தம் முடியாது தொடரும். லால் சலாம் மகாத்மாஜி

மெரினா எழுச்சி மீதான அரசவன்முறை




வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ :
கடந்த மூன்று நாட்களாக மனம் ஆலாய் அடித்துக் கொண்டிருகிறது. அரசுகள் பொய் பேசுகின்றன.அதிகாரிகள் பொய் பேசுகிறார்கள். ஊடகங்கள் பொய் பேசுகின்றன. மக்கள் உண்மையை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த உண்மைகள் அம்பலம் ஏறாமல் காற்றில் கரைந்து விடுகின்றன.கடலோடிகள், தலித்துகள் அரசாங்கத்திற்கு அஞ்சாமல் எங்கள் பிள்ளைகளுக்கு களத்தில் கடலில் அரணாக நின்றார்கள்.குடிக்க தண்ணீரும் சாப்பிட சாப்பாடும் தந்து , கடற்புரத்தில் 23 ஆம் தேதி முழுக்க உடனிருந்தார்கள். அந்த மக்கள் மனம் கேளாமல் அலறித் துடித்துக் கொண்டு , எங்கள் பிள்ளைகளொடு தாயாக சகோதரியாக உடன் பிறந்தவர்களாக அவர்கள் களத்தில் நின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் பற்றித் தெரியும்.ஆண்டைகள் பற்றித் தெரியும். இயற்கையின் பாதகங்கள் பற்றித் தெரியும். 

இன்று இரண்டு நாட்களாக அவர்கள் வீடுகள் அலைக்கழிக்கப்படுகின்றன. நள்ளிரவில் வீடு வீடாக சோதனைகள் நடக்கின்றன.அவர்களின் தொழிற்பொருட்கள் அழிக்கப்படுகின்றன.வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றன.அவர்கள் மொழியில் சொன்னால் ரவுடிப் போலீசுகள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி ரவுடித்தனம் செய்கின்றன.

தோழர்கள் களப்பணி செய்கிறார்கள். மனித உரிமைக் கமிசன் நடவடிக்கை கோரி மனு அனுப்பி இருக்கினறது. அந்த கடற்புரத்து மக்களின் ஓலம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டுக் கோரிய மாணவர் திரளோடு அந்த கடலோடி மக்கள் கலந்தது ஆதிக்க அரசிற்கு பிடிக்கவில்லை. அவர்களைத்தான் சமுக விரோதிகள் என்று தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் அடையாளப்படுத்தி, அரசுகளுக்கு பணிவிடை செய்து கொண்டு அறிவிக்கப்படாத தணிக்கையை செய்து கொண்டு இருக்கின்றன.

நேற்றும் இன்றும் இரவில் இந்தச் செய்திகள் யாவும் கேட்டு கேட்டு மனம் களைத்து சோர்வடைந்து போய் விட்ட உணர்வு ஓங்கி நின்றது.சேனல் மாற்றியப் பொழுது , மாடசாமி பாரதியிடம் அய்யா..அய்யா..நம்ம சிதம்பரம் அய்யா கோயம்புத்துர் ஜெயிலுல செக்கிழுக்கிறாகளாம்; சிவம் அய்யா சேலம் ஜெயிலுல கசையடி வாங்குகிறாளாம் என்பார். பாரதி பராசக்தியிடம் முறையிட்டு கண்ணீர் மல்கி வேண்டி பாடுவார் இந்தப் பாடலை : 

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீறாற் காத்தோம் கருகத் திருவுளமோ
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ


பாரதிக்குப் பிறகு வந்த 95 ஆண்டு காலத்தில் நிலைமையில் மாற்றம் இல்லை.ஆணவத்தில் அதிகாரத்தில் பொய் பேசுவதில் உண்மைகளை மறைப்பதில் பரங்கிகாரர்களுக்கும் பன்னீர் , கிரிஜா  ஜார்ஜ் ,  விஜயேந்திர பிதாரி, அமல்ராஜ் போன்றோருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வித்தியசம் உண்டு.  

அவர்கள் வெள்ளைக்கார கொள்ளையர்கள்; 
இவர்கள் உள்ளூர்க்கார கொள்ளையர்கள்

எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி...









அது 1982. நான் எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி, அரசியலை எதார்த்தத்துடன் உரசிப் பார்த்து இருந்த காலம். எட்டாவது படிக்கும் பொழுதே, திமுக கூட்டங்கள் கேட்கப் போவேன். திமுக என்றால் எனக்கு எம்.ஜி.ஆர் தான். பின் அவரைத் தொடர்ந்து அதிமுக போனேன்.எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அரசியல் உண்மையோடும் வாழ்வொடும் உரசிப் பார்த்து, இந்தாள் வேஸ்ட் என்று முடிவுக் கட்டி, தேடலுடன் தனித்து இருந்த காலம். ஊர் குடும்பம் யாவும் வாத்தியார் பின்னாடி.நான் மட்டும் தனி. 

அந்த காலத்தில் செங்கொடி மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டது. இன்றும் அந்த ஈர்ப்பு குறையவில்லை.வாழ்வின் ஈர்ப்பாக பேருரு கொண்ட அன்பின் ஈர்ப்பாக செங்கொடி இருந்து கொண்டிருக்கிறது. ஊரின் சிபிஐ எம் கட்சியில் ஆதரவாளனாக சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.. அப்பொழுதுதான் ஊரில் திமுக பிரமுகரும் , பின்னாளில் திமுகவின் சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த, திரு.சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் இருந்த , அறிஞர் அண்ணா கல்லூரியில் மூட்டா தொடங்கி இருந்த நேரம். சங்கரலிங்கம் திமுக என்றாலும், கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை ஏற்பதில் அவருக்கு பெரும் சங்கடம் இருந்தது. அதை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருந்தார்.

நான் சிபிஐ எம்கட்சியின் ஆதரவாளனாக இருந்தாலும், தமுஎசவில் தீவிரமாக இயங்கிய காலம். சங்கரலிங்கத்தின் எதிர்ப்பை சமாளிக்க நான் பேராசிரியர்களுக்கு ஊர்த் துணையாக இருந்த காலம். பேராசிரியர்கள் வெளியூர்காரர்கள். 

அந்த காலத்தில் சிற்பம் என்ற கையெழுத்து ஏடு நடத்திக் கொண்டிருந்தோம். நான் அதன் ஆசிரியர். ஆசிரியர் குழுவில், அறிஞர் அண்ணா கல்லூரி சாந்த சில பேராசிரியர்கள் குறிப்பாக ஜெயராமன் சார், அனந்தகிருஷ்ணன் சார் போன்றோரெல்லாம் இருந்தனர். அன்று 1982 ஜூலை சிற்பம் ஏட்டின் ஆசிரியர் குழுக் கூட்டம். எனக்கு மேற்சொன்ன சார்களைப் பற்றி தொடக்கத்தில் ஒன்றும் தெரியாது. கூட்டத் தொடக்கத்தில் நான் அவர்களைப் பார்த்து, உங்களை எப்படி அழைக்க என்று கேட்டேன்.தோழர் என்றார் ஜெயராமன் சார்.அதுவே தோழர் என நான் கேட்ட முதல் விளியும் என்றும் பரவசம் தரும் விளியும் ஆகும்.

நன்றி தோழர் பேராசிரியர் ஜெயராமன். நன்றி தோழர்அருணாசலம்

Tuesday, January 24, 2017

ஜல்லிக்கட்டுப் போரட்டத்தில் இந்து தமிழ் நாளிதழ்





90 களிலிருந்து நான்  THE  HINDU வாசகர்.  தி இந்து தமிழ் தொடங்கிய பின் , தமிழ் இந்துவை தொடர்ந்து  வாசித்து வருகிறேன். இதன் , சமஸ் கட்டுரைகள், இலக்கியம், சினிமா, பெண்கள் பகுதியை ரசித்து வருகிறேன். நடுப்பக்க கட்டுரைகளை அதன் தேவை அவசியம் என கருதினால் படித்து வருகிறேன். இன்றைய 24.01.2017 இந்து தமிழ் வாசித்தேன்; அதிர்ச்சி அடைந்தேன். ஜல்லிகட்டுக் கோரி கடந்த ஒருவாரமாக சென்னை மெரினா கடற்கரை தொடங்கி தமிழ்நாடெங்கும் நடந்த மாணவர்களின் அமைதியான போராட்டம், நேற்று தமிழ்நாட்டு போலிசால் சென்னை போலிசால் தமிழ்நாட்டு அரசால் , ரத்தச்சகதியில் வன்முறையில் முழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இதனை சன் டிவி, நியூஸ் 18 போன்ற தொலைக்காட்சிகள் ,  தீக்கதிர் நாளேடு விரிவாகக் காட்டி எழுதி இருக்கின்றன
https://theekkathir.in/2017/01/23/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF

 இன்றைய தமிழ் இந்துவில் வெளியாயிருக்கும் செய்திகள், படங்கள் அமைதியாகப் போராடிய மாணவர்களை சமுகவிரோதிகள்,கலவரக்காரர்கள் என்றே அழைக்கிறது. அது வெளியிட்டப் படங்களில் ஒரு பக்கம் மாணவர்கள் தாக்குகின்ற படங்களை வெளியிட்டிருக்கிறது. அடுத்தப் பக்கத்தில் போலிஸ் தாக்குகின்ற படங்களை வெளியிட்டிருக்கின்றது.அதன் கடைசிப்பக்கம் கட்டுரை ஆர்.சிவா என்பவரின் பெயரில் வெளிவந்திருக்கின்றது. அந்தக் கட்டுரை அப்பட்டமான போலிஸ் கொடுத்த செய்தியாக , போலிஸ் ரிப்போர்ட்டாக வந்திருக்கின்றது. சமுகவலைத்தளங்களில் பொதுமக்களின் சொத்திற்கு போலிஸ் செய்த நாசங்கள் , வைத்த தீ  , வீடியோவாக பகிரப்பட்டு வருகின்றன. இது எதுவும் இந்து தமிழில் இல்லை
https://www.youtube.com/watch?v=MD31jBup2Xc


கடைசிப்பக்க கட்டுரையில் போலிஸ் அப்பாவிகள் போலவும் மாணவர்களை கலவரக்காரர்கள் என்றும் சமுக விரோதிகள் என்றும் குறிப்பிட்டு சிவா பெயரில் போலிஸ் ஆதரவு செய்தி அரைப்பக்கம் வந்திருக்கின்றது.  தலையங்கமும் இவ்வாறே மொண்ணையாக எழுதப்பட்டுள்ளது. ரஜினி, கமல் அறிக்கைகளும் பொதுப்பார்வை பார்த்து, மாணவர்களின் பக்க நியாங்களை மறுக்கின்றன. 6 நாட்கள் அமைதியாக நடந்த மாணவர்கள் போராட்டத்தில், திடீரென்று எப்படி சமுக விரோதிகள் புக முடியும் ?. அவர்கள் எவ்வாறு கலவரக்காரர்களாக மாறினர்?

அரசின் அவசரச்சட்டத்தை அமைச்சர் வழியாக அல்லது நீதிமான்கள் அரிபரந்தாமன், சந்துரு போன்றவர்கள் வழியாக திரண்டிருந்த மாணவர்களுக்கு தந்து படிக்கச் செய்து, அவர்களின் கருத்துகளைக் கேட்டு அரசு, சட்டமன்றத்தில் அறிவித்திருந்தால் மாணவர்கள் அமைதியாக அரசின் வேண்டுகோளை ஏற்று, போராட்டக்களத்தை விட்டுச் சென்றிருப்பார்கள்.அரசு அவ்வாறு செய்யாமல் சட்ட ஒழுங்கு பிரச்சினையாக கருதி போலிஸ் அறிவிப்பு வண்டி வழியாக போலிஸ்காரர்கள் பேசினால், எப்படி மாணவர்கள் ஏற்றுக் கொள்வார்கள்?

17 ஆம் தேதி இருந்த உணர்வு அல்ல மாணவர்களின் 23 ஆம் தேதிய உணர்வு. அரசு போட்ட கணக்கென்ன? இது சில சினிமா ஆட்களால், சில ஆர் ஜேக்களால் என்.ஜி.ஓக்களால் திரட்டப்பட்டக் கூட்டம். அவர்கள் அரசின் சொல்லை கேட்டு போராட்டத்தை கைவிட்டதைப் போல மாணவர்கள்&இளைஞர்கள்&பெண்கள் போராட்டத்தை கைவிடுவார்கள் என்று  அரசு நினைத்திருக்கிறது..மேற்சொன்ன நபர்களால் முதல் நாள் திரண்டு வந்தாலும், வந்தவர்கள் முழு உணர்வு கொண்டு, ஜல்லிகட்டு தேவை என்றும், இதற்கான முழு அரசுச்சட்டம் தேவை என்றும் பீட்டா  PETA எதிர்ப்பு உணர்வோடும் வந்த தமிழ்க்கூட்டம். சொந்த செலவில் திரண்ட கூட்டம்.

களத்திற்கு வரச்சொன்னவர்கள் அரசின் கைக்கூலிகளாகப் போன பிறகு, தமிழ் உணர்வோடு திரண்ட கூட்டம் எவ்வாறு , தம் பண்பாட்டுக் கோரிக்கையை கைவிட்டு கலைந்து போகும்? இந்த உணர்வோடும் அரசு சட்டத்தின் மீதான சந்தேகத்தோடும் கலையாமல் இருந்த மாணவர்கள், இளைஞர்கள், பெண்களோடு  அரசு பேசாமல் , அரசின் கைக்கூலிகள் அழைத்தால் வரவேண்டும்; அவர்கள் கைவிட்டுப் போனால், மாணவர்களும் கைவிட்டுப் போகவேண்டும் என்று நினைப்பதற்கு இது ஒன்றும் ராகவா லாரன்ஸ், ஹிப் ஹாப் ஆதியின் சினிமா சூட்டிங் அல்ல.ஆர்.ஜே பாலாஜியின் மொக்கை காம்பியர் வேலை இல்லையே?

130 ஆண்டுகளுக்கு மேலான  பாரம்பரியம் கொண்ட இந்து குழுமம் அணுகி நுணுகிப் பார்த்து, மக்கள் தரப்பில், மாணவர்கள், இளைஞர்கள் தரப்பில் நியாயத் தரப்பில் நின்று செய்திகள் வெளியிட்டிருக்க வேண்டும்.இப்படி அரசின் போலிசின் தரப்பில் நின்று செய்தி வெளியிட்டிருக்கக் கூடாது.