Sunday, June 30, 2013

சமணர்கள் யார்?










இவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது.

சமணம் என்றால் உருவ வழிபாடற்ற சமயம் என்று பொருள்.
ஆன்மாவில் நம்பிக்கை இல்லாத ,இயங்கு பொருள்(matter) சார்ந்த செயற்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.
இந்தப் பார்வை வைதீக மதமான பிராமணியத்திற்கு ,பிற்காலத்தைய இந்து மதத்திற்குக் கிடையாது.

அன்றைய இனக்குழு,அதன் பின்னான தொடக்க வேளான் சமுகப் பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய ஆடு,மாடுகளை அழிப்பதிலிருந்து காக்க வேண்டி,கொல்லாமை,புலால் உண்ணாமையை கடைபிடிக்க வழி காட்டியவர்கள்.

இந்தியாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற வைதீக மதம்,இவர்களிடமிருந்தே புலால் புசிப்பதை விடுத்து,புலால் மறுப்பை கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்து,மாறிய சமுகத்தின்  பொருள் சார்ந்த அதீத நாட்டத்திற்கு,சமணத்தின் முப்புரக் கொள்கையான காமம்,வெகுளி,மயக்கத்தை அழித்தல் என்ற செயற்பாடு, ஆசை,அனுபவித்தல் போன்ற தன்னோக்குப் பார்வைக்கு உதவியாக இல்லாததால்,கி.பி 16 க்கு பின் பின்னடைவை  சந்தித்தது.

என்றாலும் முற்றாய் அழிந்துவிடவில்லை.காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.
சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிப்பது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

Sunday, June 16, 2013

மணிவண்ணனின் அகாலம்








இயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும் பொருட்டு போய் சந்தித்தேன்;உடன் கலை இரவை நடத்தும் ஊரின் தோழர்கள் வந்திருந்தனர்.உள்ளே அவரை நான் தேட அவரோ,`தோழர் இந்தப் பக்கம் வாங்க’ என்று மரம் ஒன்றின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து எங்களைப் பார்த்து புன்முருவல் பூத்துக் கொண்டிருந்தார்.எங்களுக்கான இருக்கை எடுத்து வரச் சொல்லி,என்ன சாப்பிடுறீங்க என விசாரித்து, விவரத்தைக் கேட்டுக் கொண்டார்.சொன்னோம்.சரி வருகிறேன் என்று ஒத்துக் கொண்டு வந்தார்.

அன்றிலிருந்து தொடங்கிய எம் நட்பு அவரின் இறுதி வரைத் தொடர்ந்தது.நேரம் கிடைக்கும் பொழுது அவரைப் பார்க்க அவரின் திநகர் அலுவலகம்,வீடு என போயிருக்கிறோம். போகும் பொழுதெல்லாம் புதிய நூல்கள் குறித்த விசாரிப்பு,அரசியல்,சினிமா என பேசுவோம். தமுஎசவின் பல கலை இரவில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.2008 ல் அவர் விபத்து ஒன்றில் சிக்கி வீட்டு ஓய்வில் இருந்த பொழுது,தமுஎசவின் 11 ஆவது மாநில மாநாடு சென்னையில் நடக்க இருந்தது.அது பற்றி பேசினோம்.தான் மாநாட்டிற்கு வர இயலாது என்றார்.ஆனாலும் நிதி சேகரிப்பில் அவர் சொல்லி கதாநாயக நடிகர் ஒரு தொகை தந்து உதவினார்.

2004 ல் தமிழ்திரை உலக கலைமலர் ஒன்றை நாங்கள் கொண்டு வந்த பொழுதில் பல ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு ஆலோசனை தந்து உதவினார்.அவர் மகள் திருமணத்திற்கு அவர் அனுப்பிய அழைப்பு தாமதமாக கிடைத்ததால்,நேரில் சென்று வாழ்த்த இயலாததை சொன்ன பொழுது என்ன சம்பிரதாயம் தோழர்?விடுங்க; அடுத்தப் பணியைப் பார்ப்போம் என்று இயல்பாக பேசினார்.

இறுதி சில ஆண்டுகளில் முன் போல் பார்க்கவில்லை என்றாலும் தொலைபேசியில் பேசுவோம்;விசாரித்துக் கொள்வோம்.மணிவண்ணன் ஆரம்பத்தில்(1980) கோவையில் சோசலிஸ்ட் வாலிபர் முன்ணணியில் இருந்தார்.மார்க்சிஸ்ட் இயக்கத்தின் தொடர்பில் இருந்தார்.சினிமாவில் அவர் வளர்ந்த பொழுதும்,வேறு இயக்கத்தின் செல்வாக்கில் அவர் போன பொழுதும் தான் எங்கிருந்து புறப்பட்டோம் என்ற ஓர்மையை விட்டதில்லை.

அவருக்கு அஞ்சலி செலுத்த இன்று மாலை 4 மனிக்கு,கே.கே நகர் ஜெய்பாலாஜி நகர் வீட்டிற்கு சென்றிருந்தோம்.எளிய மக்கள் இரு பக்கமும் திரண்டு நின்றிருந்தனர்.சாரை சாரையாக அவர்கள் அஞ்சலி செய்து கொண்டிருந்தனர்.மணிவண்ணனோடு பழகிய பல கலைஞர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். உடல் அருகே சீமான்,சத்யராஜ்,மனோபாலா அமர்ந்திருந்தனர். உடல் மீது அவர் இறுதியாக இருந்த நாம் தமிழர் அமைப்பின் புலிக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.

மதுரவாயல் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், நாம், சிகரம் செந்தில்நாதன்,தென்சென்னை தமுஎகச தலைவர்கள் அன்பரசன்,மயிலைபாலு வடசென்னை தமுஎகச செயலாளர் ஜேசுதாஸ் என நேரில் சென்று அஞசலி செய்தோம். நாம் போனதும் சீமான்,சத்யராஜ் கைக் கொடுக்க பற்றிக் கொண்டு நமது இரங்கலை இழப்பை புலப்படுத்தினோம்.அகால மரணம்.சினிமாவை செரிக்க வேண்டியவன் சினிமா சிக்கலில் மாட்டிக் கொண்டும்,நோய்மையில் சிக்கிக் கொண்டும் இறந்து போனது பேரிழப்பு..பேரிழப்பு..
படம்:தீக்கதிர் பிரகாஷ்

Sunday, June 9, 2013

காட்சி ஊடகம் :அகத்தை புறத்தை மாற்றும் தூண்டல்



இப்பொழுது படித்தவர்களும் விரும்பிப் பார்க்கப்படுகிற ஊடகமாக தொலைக்காட்சி மாறி இருக்கிறது.செய்திகள் மட்டுமே பார்த்த இப்பிரிவினர் பொழுது போக்குகளுக்கான செலவையும் நேரத்தையும் கணக்கில் கொண்டு தொலைக்காட்சி முன் தன்னை ஒப்புக் கொடுத்திருக்கின்றனர்.இவர்களை வசிகரிக்க வேண்டி புதிய புதிய நிகழ்வுகளை இவ்வூடகங்கள் முன் வைக்கின்றன.

திரைப்படங்கள்,நெடுந்தொடர்கள்  மட்டும் தொலைக்காட்சிகளுக்கு போதுமானதாக இல்லை.பார்வையாளர்களின் பல அடுக்குகளை கைப்பற்ற வேண்டி டாக் ஷோ எனப்படுகிற கலந்துரையாடல்,விவாதமேடை,உரத்த சிந்தனை  நடத்தப்படுகின்றன.

எத்தனைக் கோணம் எத்தனைப் பார்வை,உண்மையைச் சொல்கிறேன்,நாடும் நாமும் போன்ற தலைப்புகளில் முன்னுக்கு வருகின்ற பொதுவான பிரச்சினைகளின் அடிப்படையில் செய்தி அலசல்கள்,விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.உழைக்கும் மக்கள்,நடுத்தர மக்கள் படும் அல்லல்கள்,சந்திக்கும் தாக்குதல்கள்  இந்த அலசல்கள்,விவாதங்களில் காண முடிவதில்லை.

இந்த நிகழ்வுகளில் நமது படைப்பாளிகளான அ.குமரேசன்,ச.செந்தில்நாதன்,அருணன்,தமிழ்ச்செல்வன்,களப்பிரன்,பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்றவர்களை  அவ்வப்பொழுது பார்க்க முடிகிறது.நந்தலாலா கேப்டன் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலையில் பல்சுவைத் தகவல்களை பேசி வருகிறார். கிடைக்கும் வாய்ப்புகளை நமது பார்வையிலான செய்திகளை சொல்லவும் பகிரவும் நம்மவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இது மாதிரியான பார்வைகள் தொலைக்காட்சியின் பரவலிற்கும் அவசியப்படுகிறது.தொலைக்காட்சியின் எல்லை வரம்பை நமது உரையாடல் மீறும் பொழுது தணிக்கை செய்யப்படுவதையும் காண முடிகிறது.

விஜயகாந்த் அவரின் தொலைகாட்சியில் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார்.

 தந்தி தொலைக்காட்சியில் சீமான் மக்கள் முன்னால் என்கிற விவாத அரங்கை ஞாயிறு தோறும் நடத்தி வருகிறார்.இந்நிகழ்ச்சிகளில் தம் நிலை சார்ந்து மத்திய அரசை,மாநில அரசை விமர்சிக்கவும் சில உள்நாட்டு நிறுவனங்களை விமர்சிக்கவும் பயன்படுத்துவதன் வழியாக மாநில முதலாளிகளின் தொழில் நிறுவனங்களின் ஆதரவை ஊடக ஆதரவை பெற முயற்சிக்கின்றனர்.

நாதஸ்வரம்,வாணி ராணி,உதிரிப்பூக்கள் போன்ற நெடுந்தொடர்கள் வீட்டுப் பெண்களை வசீகரித்திருக்கின்றன.வீட்டுப் பெண்களின்  தனிமை, பணி,பொழுதுபோக்கு, நுகர்வுச் சந்தை போன்றவைகளை மையப்படுத்தி இத்தொடர்கள் தயாரிக்கப்படுகின்றன.சிரமங்களுக்கு பெண்கள் முகம் கொடுப்பது, குடும்பத்திற்காக பெண்கள் சவால்களை ஏற்பது ,அதில் பெண்கள் வெற்றி பெற முயல்வது போன்ற உளவியல் கூறுகளால் இத்தொடர்கள் வெற்றிகரமாக பெண்களிடம் உலா வருகின்றன.

சமூகப் பொறுப்புள்ள,சக மனிதர்கள் மீது அன்பும் கடப்பாடும் உடைய ஆட்டோ ஓட்டுநராக நடிகர் சேட்டன், சிவநேசன் என்கிற  பாத்திரத்தில் உதிரிப்பூக்கள் தொடரில் நடித்து வருவது தொலைக்காட்சியின் இன்னொரு முகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் , இம்மாதிரியான காட்சிப்படுத்தலிற்கு தொழிலாளர் இயக்கத்தின் அன்றாட போராட்டப் பங்களிப்பும் காரணமாக இருக்கின்றது.

 மகாபாரதம் தமிழில் தமிழ்க் கலைஞர்களால் நடிக்கப்பட்டு திராவிட அரசியல் குடும்ப   சன் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பப்படுகிறது.இதே குடும்பத்தை சார்ந்த சுட்டி தொலைக்காட்சியில் பக்தி சார்ந்த அனிமேஷன் சித்திரக் கதைகள், தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன.கிருஷ்ணன்,முருகன்,சிவன் தொடர்களை தயாரிப்பவர்களுக்கு குழந்தைகளிடம் சமுக மறுமலர்ச்சிக்கு உழைத்த திருவள்ளுவர்,பெரியார்,அம்பேத்கர்,திரு.வி.க,அண்ணா என்றாவது கொண்டு செல்லத் தோன்றவில்லை. 

மூன்,லோட்டஸ் என புதிய தொலைக்காட்சிகள் வந்திருக்கின்றன.முன்னர் என்.டி.டி.வி-ஹிந்து தொலைக்காட்சியாக இருந்தது இப்பொழுது தந்தி டிவியாக வந்து கொண்டிருக்கிறது.உள்ளூர் அளவில்  சிறு வணிகம்,தொழில் சார்ந்து நிறைய  தண்டுவட தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன.உள்ளூர் தொலைக்காட்சி சார்ந்த  நிகழ்வுகள் வடிவமைப்பு,ஆலோசனை சொல்வது என்ற முறையில் இவர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு நமது கருத்து பரவலிற்கு முயலலாம்.

முன்னர் சில தொலைக்காட்சிகளில் குறும்படம்,ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை இப்பொழுது காண இயலவில்லை.கலைஞர் தொலைக்காட்சியில் சினிமாவில் நுழையும் ஆர்வத்திலுள்ள புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நாளைய இயக்குநர்  நிகழ்வில் சினிமாவின் சிறிய வடிவமான குறும் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

தொடர்ந்து கவிதைகள்,கவின்கலைகள்,நிகழ்த்துக் கலைகள்,தமிழிசை போன்றவைகளுக்கு பெரிய தொலைக்காட்சிகளில் இடமில்லை என்கிற யதார்த்தம் நம்மை ஏதோ செய்கிறது;ஏதோ செய்யத் தூண்டுகிறது.இந்தத் தூண்டல் நம் அகத்தையும் புறத்தையும் மாற்றும்படி தொடரட்டும்.

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் (2013 ஜூன் 08,09)வைக்கப்பட்ட அறிக்கை)