Monday, March 6, 2017

பெட்ரோல்கடல்






மீன்கறிக்கு உமிழ்நீர் சுரக்கிறது குழந்தை 
வாங்கிட ஆளின்றி கொண்டு வந்த மீனைக்
கொண்டு போகிறான் வேலப்பன்
வறள் உப்பு வாசக் காற்று
பெட்ரோல் கவிச்சியை கொண்டு சேர்க்கிறது
மீன்சந்தை தோறும் கண்ணீர்கதையாடல் 


சேவையின் மீது நம்பிக்கை சேர்க்க உபகரணங்கள் எதுவுமின்றி
கடற்கறையில் கசிந்துருகிக் கிடக்கிறது வாலிபம்
விபத்தா சதியா மீவெளிப் பகிர்வுகள் பார்வைக்கு வருகின்றன
கப்பல் மீது குற்றப்பத்திரிகை உண்டா
எழுகின்றன கேள்விகள்
சுவாசச்சிக்கலால் இறந்து மிதக்கின்றன கடலினங்கள்
இருந்து தொலைக்கின்றன அரசுகள்

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத...








தந்தை பெரியார் திடலின்( தமிழ்நாடு-சென்னை) பிரம்மாண்ட எம்.ஆர்.ராதா அரங்கினுள் நுழைந்த பொழுதே பூக்களால் ஆன மணமேடை மனதை வசீகரித்தது.அருகில் போய் பூக்களைத் தொட்டுப் பார்த்து அதன் அழகில் வண்ணத்தில் பூரித்தேன்.மணமேடையின் வலதுப்பக்கத்தில் இருந்த மஞ்சள் பூசப்பட்ட மண்பானை அடுக்குகள் பார்த்து, சரேலென நினைவு ஈராயிரம் ஆண்டுகளுக்கு பின் போனது.தமிழ்க்குலம் தழைத்து நடந்து வந்த பண்பாட்டுப் பாதையை நினைவுகளில் ஓட்டி கண்ணீர் கசிய நின்று கொண்டிருந்தேன்.

திருமண நாளன்று ( 2017 மார்ச் 02 ) காலை எட்டரை மணி நெருங்க உற்றாரும் சுற்றமும் வரத் தொடங்கி இருந்தார்கள்.மணமக்களின் பெற்றோர் இவர் இவர் எனக் காட்ட கவிஞர் ச.விசயலட்சுமி-சு.பழனிக்குமார் / அனந்தநாயகி-மனோகரன் கழுத்தில் அழகிய மாலைகள் சூட்டி அருகருகில் நின்று கொண்டிருந்தார்கள். மாப்பிள்ளை கோபிநாத் அழகிய பட்டு வேட்டிக் கட்டி தோளில் துண்டு அணிந்து கொண்டு மணமேடை வந்து அமர்ந்தார். அன்பின் தேவதை சு.ப .நிவேதிதா கட்டம் போட்ட கூரைப்புடவைக் கட்டி மேடைக்கு வந்தார். மணமக்களைச் சுற்றி வித விதங்களில் பட்டுப் புடவைகள் கட்டிக் கொண்ட பெண்கள் மகிழ்ந்தும் பேசிக் கொண்டும் மணமக்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அரங்கினுள் இருந்து ரசிக்கத் தக்க அளவில் நாயனம் தவிலின் லயத்தோடு கூடிய இசையை தூவிக் கொண்டிருந்தன. மங்கலநாண் வைக்கப்பட்ட பூக்கள் தேங்காய் வாழ்த்தரிசித் தட்டு வாழ்த்துப் பெற சுற்றுக்குத் தரப்பட்டன.அவரவர்கள் வாழ்த்த வாழ்த்தரிசி, பூக்களை எடுத்துக் கொண்டு மங்கல்நாண் தட்டை வாழ்த்தி மேடைக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். தட்டு மண மேடைக்கு வந்தது. நாயனத்திலிருந்து "பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி " என்று அமரத்துவம் கொண்ட கவியரசு கண்ணதாசனின் பாடல் உதிர்ந்து கொண்டு வந்தன.

கண்களில் ததும்பி நின்று, தொண்டையில் இறங்கிய கண்ணீர் , தொடர்ந்து சுரந்து மகிழ்வின் அதிர்வைத் தந்து கொண்டிருந்தது. மேடையில் நின்ற பார்த்திபனின் அம்மா நாயனத்தை நோக்கி தன் கையசைப்பில் கெட்டி மேளத்திற்கான சமிக்ஞை தந்து கொண்டிருந்தார். கெட்டிமேளம் ஒலிக்க அன்பின் தேவதை சு.ப.நிவேதிதா கழுத்தில் காலை 10.35 மணிக்கு மங்கலநாணைக் கட்டிக் கொண்டிருந்தார் கோபிநாத் . 

மனதில் வந்து நின்றது ஆண்டாளின்
இந்தப் பாடல்:
“ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துணன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்

Sunday, March 5, 2017

திரைக்காதலன் பாலுமகேந்திரா







இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் உதவியாளர் ரோஸ்லின் பிப்ரவரி 9 ஆம் தேதி காலையில் போன் செய்து, 13 ஆம் தேதி நம்ம சாரோட மூணாவது நினைவுநாள். வரணும் என்றார்.அவசியம் வருவேன் என்று பிப்ரவரி 13 காலை 11 மணிக்கு சென்னை ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டர் 1  சென்றேன். போகும் பொழுது இயக்குநர் பாலுமகேந்திரா  குறித்த டாக்குமெண்ட்ரி( இயக்கம் வசந்த்) ஓடிக் கொண்டிருந்தது.ஒன்றரை மணிநேரம் ஓடியது டாக்குமெண்ட்ரி.அருமையான முயற்சி.

பின்னர் பாலுமகேந்திரா குறித்த ஞாபகப்பதிவு. இதில் பாலுமகேந்திரா மகன் சங்கிபாலுமகேந்திரா,இயக்குநர் சீனுராமசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நடிகர் அர்ச்சனா, ஓவியர் வீரசந்தனம், ஒளிப்பதிவாளர் மூர்த்தி, ஜூனியர் பாலையா, இயக்குநர் மீரா கதிரவன், நிழல் திருநாவுக்கரசு, இரா.தெ.முத்து,ரோஸ்லின் என் பங்கேற்றுப் பேசினோம்.

சங்கி தனக்கு  ”தன் அப்பா  நண்பர் ”   என்றார். சீனுராமசாமி ” தன் உதவியாளர்களை மிகுந்த தோழமையோடு நடத்தியவர் சார்’  என்று நெகிழ்ந்தார். ”தன் ஞானத்தகப்பன் பாலு சார்” என்று குறிப்பிட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்.நடிகை அர்ச்சனா பேசும் பொழுது “ சினிமாவில் பலரால் மறுக்கப்பட்ட சுதா என்கிற என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி எனக்கு வாழ்வும் முகமும் தந்தவர் சார் ” என்றார்.

  “பாலுவை மகத்தானக் கலைஞன் என்று கொண்டால் அவரின் பிறகுணங்கள் காணாமல் போகும் “ என்று விமர்சனங்களுக்கு பதில் தந்தார் வீர சந்தானம்.  ” பொருத்தமான பாத்திரங்களில் தன்னை நடிக்க வைத்தவர் பாலுமகேந்திரா” என்றார் ஜூனியர் பாலையா. “நானும் சாரின் மாணவர் “ என்று மகிழ்ந்தார் மீரா கதிரவன்.

 “பாலுமகேந்திராவிற்கும் எங்கள் தமுஎகச அமைப்பிற்கும் எனக்கும் முப்பதாண்டு நட்பு என்றும், எதையும் வெளிப்படையாக எங்களோடு விவாதித்து, உடன் நின்று செயற்படும் நல்ல நண்பர்; ஆசிரியர் என்றும், அவர் நடத்திய சினிமாப் பட்டறை கட்டிடத்தில் அவருக்கான படைப்புகளை அவர் புழங்கிய நூல்களைக் கொண்ட காப்பகம் ஒன்றை அமைக்க ஷங்கி உள்ளிட்டு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும், அவர் காலத்திலேயே அழிந்து போன அவரின் சினிமாக்களை போல் அல்லாமல் , தமிழின் மிச்சமுள்ள சினிமா படைப்புகளை திரை ஆவணக் காப்பகம் உருவாக்கி அதில் வைத்து தமிழ்நாட்டு அரசாங்கம் பராமரிக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் “ என்றும் நான் ( இரா.தெ.முத்து ) பேசினேன்