Monday, February 6, 2017

மெரினா எழுச்சி மீதான அரசவன்முறை




வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ :
கடந்த மூன்று நாட்களாக மனம் ஆலாய் அடித்துக் கொண்டிருகிறது. அரசுகள் பொய் பேசுகின்றன.அதிகாரிகள் பொய் பேசுகிறார்கள். ஊடகங்கள் பொய் பேசுகின்றன. மக்கள் உண்மையை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த உண்மைகள் அம்பலம் ஏறாமல் காற்றில் கரைந்து விடுகின்றன.கடலோடிகள், தலித்துகள் அரசாங்கத்திற்கு அஞ்சாமல் எங்கள் பிள்ளைகளுக்கு களத்தில் கடலில் அரணாக நின்றார்கள்.குடிக்க தண்ணீரும் சாப்பிட சாப்பாடும் தந்து , கடற்புரத்தில் 23 ஆம் தேதி முழுக்க உடனிருந்தார்கள். அந்த மக்கள் மனம் கேளாமல் அலறித் துடித்துக் கொண்டு , எங்கள் பிள்ளைகளொடு தாயாக சகோதரியாக உடன் பிறந்தவர்களாக அவர்கள் களத்தில் நின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் பற்றித் தெரியும்.ஆண்டைகள் பற்றித் தெரியும். இயற்கையின் பாதகங்கள் பற்றித் தெரியும். 

இன்று இரண்டு நாட்களாக அவர்கள் வீடுகள் அலைக்கழிக்கப்படுகின்றன. நள்ளிரவில் வீடு வீடாக சோதனைகள் நடக்கின்றன.அவர்களின் தொழிற்பொருட்கள் அழிக்கப்படுகின்றன.வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றன.அவர்கள் மொழியில் சொன்னால் ரவுடிப் போலீசுகள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி ரவுடித்தனம் செய்கின்றன.

தோழர்கள் களப்பணி செய்கிறார்கள். மனித உரிமைக் கமிசன் நடவடிக்கை கோரி மனு அனுப்பி இருக்கினறது. அந்த கடற்புரத்து மக்களின் ஓலம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டுக் கோரிய மாணவர் திரளோடு அந்த கடலோடி மக்கள் கலந்தது ஆதிக்க அரசிற்கு பிடிக்கவில்லை. அவர்களைத்தான் சமுக விரோதிகள் என்று தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் அடையாளப்படுத்தி, அரசுகளுக்கு பணிவிடை செய்து கொண்டு அறிவிக்கப்படாத தணிக்கையை செய்து கொண்டு இருக்கின்றன.

நேற்றும் இன்றும் இரவில் இந்தச் செய்திகள் யாவும் கேட்டு கேட்டு மனம் களைத்து சோர்வடைந்து போய் விட்ட உணர்வு ஓங்கி நின்றது.சேனல் மாற்றியப் பொழுது , மாடசாமி பாரதியிடம் அய்யா..அய்யா..நம்ம சிதம்பரம் அய்யா கோயம்புத்துர் ஜெயிலுல செக்கிழுக்கிறாகளாம்; சிவம் அய்யா சேலம் ஜெயிலுல கசையடி வாங்குகிறாளாம் என்பார். பாரதி பராசக்தியிடம் முறையிட்டு கண்ணீர் மல்கி வேண்டி பாடுவார் இந்தப் பாடலை : 

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீறாற் காத்தோம் கருகத் திருவுளமோ
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ


பாரதிக்குப் பிறகு வந்த 95 ஆண்டு காலத்தில் நிலைமையில் மாற்றம் இல்லை.ஆணவத்தில் அதிகாரத்தில் பொய் பேசுவதில் உண்மைகளை மறைப்பதில் பரங்கிகாரர்களுக்கும் பன்னீர் , கிரிஜா  ஜார்ஜ் ,  விஜயேந்திர பிதாரி, அமல்ராஜ் போன்றோருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வித்தியசம் உண்டு.  

அவர்கள் வெள்ளைக்கார கொள்ளையர்கள்; 
இவர்கள் உள்ளூர்க்கார கொள்ளையர்கள்

No comments:

Post a Comment