Saturday, May 16, 2026

பாட்டாளி வர்க்கத்தின் பரணிநாயகன்

 


சங்கரப்பன் ஆறுமுகப்பெருமாள் என்ற தோழர் எஸ்ஏ.பி (84)  பற்றிய கனமான நூல் ஒன்றை எஸ்.ஏ.பி யின் சகதோழரும் மைத்துனருமான தோழர் எம்.ஜே.பிரபாகர் 530 பக்கத்தில் தொகுத்து கொண்டு வந்திருக்கிறார். 

எஸ்.ஏ.பி உடன் இயக்கப் பணியாற்றிய அவரால் கண்டெடுக்கப்பட்ட தலைவர்கள்- தோழர்கள்- எழுத்தாளர்கள்- பேராசிரியர்கள் என 143 தோழமைகளின் அனுபவங்களின் தொகுப்பாக வந்திருக்கிறது மார்க்சிய ஆசான் தோழர் SAP. ரெட்ஸ்டார் பப்ளிகேசன்ஸ் நூலை பிரம்மாதமாக  600₹ விலையில் உருவாக்கி இருக்கிறது. 

இதன் வெளியீட்டு விழா மதுரையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி பங்கேற்பில் நடைபெற்றிருக்கிறது.

இந்த கனமான தொகுப்பில் எஸ்.ஏ.பி பற்றிய எனது எண்ணங்கள் பாட்டாளி வர்க்கத்தின் பரணிநாயகன் எனும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது. இந்தக் கட்டுரையை உங்கள் வாசிப்பிற்கு இங்கே இணைத்திருக்கிறேன்.

::::::::::::::::::     ::::::::::::::::::     ::::::::::::::::::     :::::::::::::::

பாட்டாளிவர்க்கத்தின் பரணிநாயகன்::
- இரா.தெ.முத்து

1987 விருதுநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற்றது. சென்னை மாவட்டத்தின் பிரதிநிதிகளுள் ஒருவராக நான் பங்கேற்றேன்.

மாநாட்டில் என்னை ஈர்த்த தலைவர்கள் தோழர்கள் எம்.ஏ.பேபி மற்றும் எஸ்.ஏ.பெருமாள். தோழர் எம்.ஏ.பேபி அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர்.

இராமநாதபுரம் மாவட்டம் என்றாலே மழை பெய்யா பிரதேசம் என அன்று பெயர் பெற்றிருந்தது. தலைநகர் விருதுநகரில் தண்ணீருக்குத் தட்டுப்பாடு. பிரதிநிதிகள் குளிப்பதற்கு நந்நவனம் என்பதான தோட்டங்களில் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

எங்களில் ஒருவராக தோட்டத்தில் வரிசையில் நின்று  தோழர்களை புன்னகை உடன் பார்த்துக் கொண்டு தண்ணீர் எடுத்துக் குளித்துக் கொண்டிருந்தார் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள்.

இந்தக் காட்சி என் மனதில் தங்கி விட்டது.சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் அனைவரோடும் ஒருவராக இருப்பதான எளிமையும் புன்னகையும் அவர்பால் என்னை ஈர்த்துக் கொண்டது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விருதுநகர் மாநில மாநாட்டில்தான் நான் தோழர் எஸ்.ஏ.பி எனும் ஆளுமையைப் பார்க்கிறேன். அவர் மேடையில் மாநாட்டுப் பணிகளை கவனித்துக் கொண்டிருக்க அரங்கிலிருந்த நான் அவரது பரபரப்பை வேகத்தைக் கவனித்துக் கொண்டிருந்தேன். தோழர் எஸ்.ஏ.பியின் பரபரப்பு வேகம் மட்டுமே நான் கவனிக்கத் தகுந்த காரணங்களாக இல்லை.

எஸ்.ஏ.பி பற்றியான செய்தி எப்படியோ என் அறிவுக்குள் நுழைந்து கொண்டது. அநேகமாக நான் 82 முதல் 84 செப்டம்பர் வரை கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் இயக்கப்பணி நிகழ்த்திக் கொண்டிருந்த காலங்களில் தோழர்கள் வழியாக அறிந்திருப்பேன்.

அந்த அறிதல் எஸ்.ஏ.பி ஐ ஒரு புரட்சிக்காரனாக சரித்திரநாயகனாக நான் புரிந்து கொண்டிருந்த அந்தப் புரிதலின் முதல்விதை, 87 ல் டி.ஒய்.எப்.ஐ மாநில மாநாட்டில் எஸ்.ஏ.பி இவர்தான் என பார்த்த அந்த நொடியில் என் புரிதலின் முதல் விதை துளிர்த்துக் கொண்டது.

70,80 களில் இராமநாதபுரம், விருதுநகர்,சிவகாசி போன்ற இடங்களில் நிலவுடைமையாளர்களும் தொழில் அதிபர்களும் திராவிட இயக்கங்களின் தலைவர்களாக பரிணமிக்கிறார்கள். பாட்டாளிவர்க்கத்தின் வாழ்வாதாரக் கோரிக்கைகள் இந்த மாவட்டத்தில் எழுப்பப்படுகிற பொழுது , இது ஆண்டான்களை எதிர்த்த அடிமைகளின் குரலாக திராவிட இயக்கத்தின் பணக்காரர்களால் புரிந்து கொள்கிற பொழுது அங்கே புரட்சி சூல் கொள்கிறது.

பேச்சுவார்த்தை உடன்பாடு கூலி உயர்வு போன்ற சட்டரீதியான அகிம்சைமுறைகள் செல்லுபடி ஆகாதபொழுது அடி திருப்பி அடி என்ற போர்முறைதான் பயன்தருகிறது. பாட்டாளிவர்க்கத்தை இம்மாவட்டங்களில் பாதுகாத்திட இந்த அடிமுறைதான் பயன்பட்டது.எளியவர்களின் பார்வைக்கு தோழர் எஸ்.ஏ.பி ஒரு நாயகனாக தென்பட்டார்.

படிக்கிற இளவயதில் பேராசான் ஜீவாவின் ஆவேசமான இலக்கிய ரீதியிலான போர்முரச உரை தோழர் எஸ்.ஏ.பி யை கவர்ந்து கொண்டு
அவரை கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஊழியராக்கியது.ஊழியரை தலைவராக நாயகனாக மாற்றியதன் பங்கை தோழர் வி.பி.சிந்தன் எடுத்துக் கொள்கிறார். தோழர் வி.பி.சிந்தன் எனும் போராளி வழியாக தன்னை ஒரு போராளியாக வடிவமைக்கிறார் தோழர் எஸ்.ஏ.பி எனும் எஸ்.ஏ.பெருமாள்.

தோழர் எஸ்.ஏ.பி அடிப்படையில் அவர் ஓர் இலக்கியவாதி.இயக்கத்தின் தேவை அவரை களப்போராளியாக வடிவமைத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி சோவியத் இலக்கியங்களை வாசித்தார்.தனது வாசிப்பு ரசனையை இளந்தோழர்களுக்கு தாய்ப்பறவையென பகிர்ந்தளித்து வளர்த்தெடுத்தார். தோழர் எஸ்.ஏ.பியின் ரசனையில் பகிர்தலில் மக்ஸீம் கார்க்கியைக் கண்டவர்கள் மேலாண்மைபொன்னுச்சாமி ஆனார்கள்.தஸ்தாவெஸ்கியைக் கண்டவர்கள் எஸ். ராமகிருஷ்ணன் எனும் எஸ்.ரா, கோணங்கி,மணிமாறன் ஆனார்கள்.

தோழர் எஸ். ஏ.பி எனும் களப்போராளியைக் கண்டவர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், கருமலையான், எஸ்.கண்ணன்,சாமுவேல்ராஸ், சுகந்தி,ராம்கி எனும் என்.ராமகிருஷ்ணன், எனும் வர்க்கப்போராளிகளாக பரிணமித்தார்கள்.

எஸ். ஏ.பி யிடம் இலக்கியத்தையும் உரைவீச்சையும் கண்டவர்கள் முகவைபாலாஜி எனும் பாரதிகிருஷ்ணகுமார் ஆனார்கள்.சூர்யாசேவியர் ஆனார்கள்.

நான் எஸ் .ஏ.பி இடம் லெனின் அமைச்சரவையில் கல்வி பண்பாட்டு அமைச்சராக இருந்த லூனாசார்ஸ்கியைக் கூடுதலாகக் காண்கிறேன்.அதோடு நாட்டார்மரபின் கி.ராஜநாராயணனையும் இணைத்துக் காண்கிறேன்.

தோழர் எஸ்.ஏ.பி உடன் நான் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் முப்பதாண்டுகள் மாநிலச் செயற்குழு உறுப்பினராக பயணித்திருக்கிறேன்.தோழர்களின் தோள்களில் கை போட்டு அறிந்த விடயங்களை புன்னகை உடனும் பகிர்ந்த விடயங்களை தோழர்கள் கேட்பதை உறுதி செய்யும் பொருட்டு கண்டுணர அவர் பயன்படுத்தும் "ம்" எனும் இடையீட்டுச் சொல்(particles) சொல்லுடனும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

No comments:

Post a Comment