Tuesday, November 12, 2013

சங்க காலத்தை மீட்டிய சஹ்ருத வேதி







தீபாவளிக்கு அடுத்த நாள் காலை சரியாக பத்தரை மணிக்கு பாலக்காடு மணிகண்டன் குழுவினரின் செண்டை மேளத்தோடு தொடங்கியது சஹ்ருத வேதி அமைப்பின் கேரளநாள் விழா.கேரள மாநிலம் உருவான நவம்பர் 1 ஆம் தேதியை முன்னிட்டு சகோதர மேடை என்கிற அமைப்பு இந்நாளை கலாச்சார விழாவாக  சென்னை அண்ணா ஆதர்ஸ் கல்லூரி அரங்கில் நடத்தியது.

பண்டிகை நாளில் அணியப்படும் வெள்ளை,மஞ்சள் சேலை உடுத்தி திரளான பெண்கள் கலந்து கொண்டிருக்க ,வேட்டி சட்டையோடு சில ஆண்களைப் பார்க்க ,பல ஆண்கள் பேண்ட் சட்டையோடு விழாவில் கலந்து கொண்டிருந்தார்கள்.அரங்கின் வாசலில் அழகான பெரிய கோலமிட்டு வறவேற்றார்கள்.

முழுநாள் விழாவின் மதியம் வரையிலான கொண்டாட்டத்தில் கவிசங்கமம் என்கிற கவியரங்கம்,ஓவியப் போட்டி,பாடல் போட்டி என இளைஞர்கள்,குழந்தைகளின் பங்கேற்பில் அரங்கு அழகானது.மாலை விழாவில் அமைச்சர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ,தொழில் முனைவர்கள் என பலர் பங்கேற்றனர்.

காலை அமர்வில் முனைவர் ரவீந்திரராஜா,கும்பளங்காடு உன்னிகிருஷ்ணன்,இரா.தெ.முத்து,வி.பி.கங்காதரன்,வி.பரமேசுவரன் நாயர்,அமராவதி ராதாகிருஷ்ணன்,ஆர்.முகுந்தன்,சன்னி ஜான்,ஓவியர் சண்முகன் திருப்புணித்துரா போன்ற ஆளுமைகள் பங்கேற்றனர்.

ஈழத்தில் உயிரோடு பிடிக்கப்பட்டு பின்னர் சிங்கள ரானுவத்தால் கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா மரணத்திற்கு விழா தொடக்கத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.கேரள அரசு விடுத்த வேண்டுகோள்படி தாய்மொழி காப்பு உறுதிமொழியை பின்னர் எடுத்துக் கொண்டனர்.

கவிசங்கமத்தை தொடங்கி வைத்த கும்பளங்காடு உண்ணிகிருஷ்ணன்,மலையாள மொழி காலந்தோறும் நவீனப்பட்டு வருகிறது.புதிய நோக்கில் புதிய பார்வையில் படைப்புகள் வெளிவருகின்றன.முகநூல்,வலைப்பூக்களில் இப்படியான படைப்புகளை காணமுடிகிறது.நைரோபியக் கவிஞர் கோஃபி அவனுர் மொழியில் மக்களின் பாடுகள் வாதைகள் பதியப்பட வேண்டுமென்றதை நாம் கவனத்தில் கொண்டு புதிய சூழலிற்கேற்ப சென்னையில் வாழும் மலையாள படைப்பாளர்களும் தமது படைப்புகளை அளிக்க வேண்டுமென்றார்.

தமிழ்நாட்டு கவிஞர்கள் சார்பில் விழாவிற்கு அழைக்கப்பட்டு சிறப்புரையாற்றிய இரா.தெ.முத்து,தமிழுலகமும் அயல் உலகமும் கொண்டாடும் சங்க இலக்கியம்,காப்பியங்கள்,பதிணென்கீழ்கணக்கு போன்ற படையல்களை தந்ததில் ஆறாம் நூற்றாண்டு வரையிலும் தமிழோடு இணைந்திருந்த உங்கள் ஆதி வாழ்கைக்கும் அனுபவத்திற்கும் பங்குண்டு.இளங்கோவடிகள்,தொல்காப்பியர்,திருவள்ளுவர்,அவ்வை,அதங்கோட்டாசான் போன்ற படைப்பாளிகள் உங்களுக்கும் சொந்தமானவர்கள்தான்.

தமிழும் மலையாளமும் இன்று உலகமயமாக்கல் சூழலில் ஆங்கிலத்தின் பாதிப்பிற்கு உள்ளாகி கொண்டிருக்கிறது.மலையாளத்தை பாதுகாக்க நீங்கள் எடுத்துக் கொண்ட உறுதிமொழியைப் போல,தமிழைக் காக்க தமிழ் படைப்பாளர்களும் தாய்மொழிவழிக் கல்விக்கான இயக்கம்,மாநாடு என்று இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இனம்,மொழி,வர்க்க உணர்வோடு இந்தியாவின் எந்தவொரு பகுதியிலும் வாழ அனைவருக்கும் உள்ள உரிமையைப் பாதுகாக்க தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் முன் நிற்கிறது என்று பேசினார்.

தொடர்ந்து நிகழ்ந்த கவிசங்கமத்தில் கிரேஸ் நெல்சன்,அய்யப்பன் காரியத்,சரோஜினி ஜெயதேவன்,தாமஸ் வண்ணப்புரம்,கலா.எஸ்,செருதுருத்தி ராதாகிருஷ்ணன்,ஆஷா சசிகுமார்,காஞ்சனா அரவிந்த்,டவ்டன் மோகன்,மன்மதன் மாவேலிக்கரா என பங்கேற்று சங்கக் கவிமரபின் ஓசையோடு கவிதை பாடியது,அனைவரையும் சங்க காலத்திற்கே இட்டுச் சென்ற உணர்வை 
அளித்தது.
 தொகுப்பு:கும்பளங்காடு உண்ணிகிருஷ்ணன்,கிரேஸ் நெல்சன்

Saturday, September 28, 2013

தமிழ் ஒளி பரவுக



`கவித்துவம் கம்பீரம்
பொதுமை நோக்கோடு இயங்கிய
தனித்த அடையாளம்
எளிய மக்கள் ஏற்றம் பெற
எழுதுகோல் தரித்த சூறாவளி’

என்ற பிம்பத்தை விட்டுச் சென்றிருக்கும் சி.விஜயரங்கம் என்ற தமிழ்ஒளி (1924-1965) பாரதி,பாரதிதாசன் என்ற ஆளுமைகளின் வழித்தடத்தில் பயணப்பட்டவர்.பாரதிதாசன் மீது மிகுந்த நேசம் கொண்டு அவரின் அன்பைப் பெற்றவர்.1940 ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதான ஈடுபாட்டால் தன்னை பாட்டாளிகளின் பாவலனாக மாற்றிக் கொண்டவர்.

அமரர் ஜீவாவிற்கு அடுத்து `ஊரை எழுப்பிடவே-துயர்
ஒன்றை நொறுக்கிடவே
தாரை முழக்கிடுவேன்’என்று பாடவந்தவர்.யாப்பு முறையில் அற்புதமான சந்தத்தோடும் எதுகை மோனையோடும் பாவேந்தரிடம் கவிதை எழுதக் கற்றுக் கொண்டவர்,வாழும் சூழலையும் மக்களின் வாழ்க்கைப் பாடுகளையும் அடிமைப்பட்டுக் கிடந்த தேசச் சூழலையும் கவனித்து வந்த தமிழ்ஒளி பாவேந்தரின் அரசியற் கொள்கையிலிருந்து விலகி`இந்தத் தத்துவம்(மார்க்கியம்),உலகில் எவராலும் வெல்ல முடியாத தத்துவமும் உண்மையென்று நீரூபிக்கப் பெற்ற தத்துவமும் ஆகும். பழைய வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் இதன் முன்னே தலைகுப்புற விழுந்து தவிடு பொடி ஆகி விட்டன.இதை உணர்ந்தே நான் என்னுடைய கொள்கையை வகுத்துக் கொண்டேன்” என்று உணர்ந்து இடதுசாரி அரசியல் சார்ந்த கலை இலக்கியத்தை தன் வாழ்வாகவும் பாதையாகவும் வகுத்துக் கொண்டவர்.

கவிதைகள்,காவியங்கள்,கதைகள்,கட்டுரைகள்,நாடகங்கள் என தொடர்ந்த இருபதாண்டு காலத்தின் பெரும் பகுதி இந்தப் பாதையில் பயணித்தார்.அரசியல் கொந்தளிப்புகளும் போராட்டங்களும் எழுச்சிகளும் நிறைந்த காலத்தில் வாழ்ந்த தமிழ்ஒளி இவைகளை தம் படைப்பில் பதிந்தார்;ஆளும் வர்க்கங்களை ஆவேசங் கொண்டு தாக்கினார்;தொழிலாளர்களின் போராட்டங்களை வாழ்த்தி எழுச்சி ஊட்டினார்;போர் வெறி பிடித்து அலைந்த அரசுகளைச் சாடினார்.


சீனப்புரட்சியின் முன்னேற்றத்தை வெற்றியை 
`ஓ ஓ என்றார்ப் பரித்தே எழுந்தது பார் ஊழிப்போர்
உலகமெங்கும் ஆஆ என்றதிசயிக்க ஆசியத்தாய் மனங்குளிர” இப்படி முறசரைந்து மகிழ்ந்தார். பாரதி ரஷ்யப் புரட்சியை முதலில் தமிழில் பாடிய கவிஞன் என்றால் தமிழ்ஒளி சீனப்புரட்சியை தமிழில் பாடிய கவிஞன் எனலாம்.

இந்தியா பெற்ற சுதந்திரம் யாருக்கானது எப்படிப் பட்டது என்பதை
`வந்த விடுதலை யாருக்கென்றே அதை வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம்
நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா?’ என கேட்டு 47 லேயே கேள்வி தொடுத்தார்.

`கண்ணின் கருமணியே காசினிக்கு மாமணியே
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக’
என்று மேதினத்தை முதலில் தமிழில் நெடுங்கவிதையாகப் பாடியவரும் தமிழ்ஒளிதான்.

`காதெலாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான்
கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கலியாணம் என்று’ 1947ல் எழுதிய வீராயி காவியத்தில் இப்படி ஓர் இடம் வருகிறது.இந்த காவியம் தலித் மக்களைப் பற்றி தமிழில் பதிந்த முதல் காவியம்.பஞ்சம் பிழைக்க கிழக்காசிய நாடுகள்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தலித் மக்கள் படும் வாதைகளை பாடும் காவியம் ஆகும்.

 ஒன்றாய் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் ஏடான ஜனசக்தி தடை செய்யப்பட்ட காலத்தில் கட்சியின் கருத்தை ,போராட்டச் செய்திகளை கொண்டு செல்ல தொடங்கப்பட்ட `முன்னணி’ வார இதழின் துணை ஆசிரியராக இருந்து ,இதுவும் தடை செய்யப்படும் வரை சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.முன்னணியில் அரசியல் கட்டுரைகள்,கவிதைகள்,இலக்கிய விமர்சனம்,நாடகம் என வாரந்தோறும் எழுதி இருப்பதையும் காண முடிகிறது.

1949ல் வெளிவந்த தொ.மு.சி.ரகுநாதனின் இலக்கிய விமர்சனம் என்கிற நூலுக்கு முன்னணியில் விமர்சனம் ஒன்றை தமிழ்ஒளி எழுதி இருந்தார்.அதில் தொ.மு.சி கவின்கலை,பயன்படுகலை பற்றி எழுதி இருந்தார்.கவின்கலை மனம் சார்ந்த ரசனை உணர்ச்சி என்றும் பொதுமக்களுக்கான பயன்படும் முறையில் உள்ளவைகள் பயன்படுகலை என்றும் சொல்லி, இரு உணர்ச்சி சார்ந்த கலைகளும் எக்காலமும் இருந்தே தீரும்,இருக்க வேண்டும்  என்று எழுதி இருப்பார்.இதற்கு தீவிரமான எதிர் விவாதம் ஒன்றை சிலவாரம் எழுதினார் தமிழ்.ஒளி.இந்தப் போக்கு வர்க்க சமரசம் என்றும் மார்க்சிய அழகியல் இதுவல்ல என்றும் எழுதி இலக்கியத்தில் முற்போக்கு கண்ணோட்டத்துடன் ரகுநாதன் செயல்பட முயற்சிக்க வேண்டும் என்று முடித்து இருப்பார்.

அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளையாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1949 களில் அமைப்புக் குழுவாக இருந்த பொழுதும்,1952 களில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் ஒரு நிர்வாகியாக துணைச் செயலாளராக இருந்து செயல்பட்டவர் தமிழ்ஒளி.அன்று இடதுசாரிகள் மீது அடக்குமுறைகள் ஏவப்பட்டக் காலத்தில்,இப்படி ஓர் இலக்கிய அமைப்பு இயங்கியது பற்றியும்  மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அது குரல் கொடுத்ததையும் இதன் வரலாற்றை நாம் திரட்டியாக வேண்டிய தேவையிலும் இருக்கிறோம் என்பது தனி.இது போல் முன்னணியில் வெளிவந்த படைப்புகளை பதிப்பித்து தமிழ்மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டிய பொறுப்பும் முற்போக்கு அரசியல் அமைப்பிற்கும் ,இலக்கிய அமைப்பிற்கும் உள்ளது.

தமிழ்ஒளியும் அவரது எழுத்தும் அறுபத்து மூன்று ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதை நாம் மேலும் பரவலாக்க வேண்டும். புதிய பொருளாதாரச் சூழல் காலத்தில் வருவதை ஏற்கும் மக்களின் மனநிலையில் மாற்றம் வர,  உண்மையை யோசிக்க வைக்க,பிரிட்டிஷ் அடக்குமுறைகள் கோலோச்சிய காலத்தில்,புதிய இந்தியா உருவாகிவிட்டது என்று மக்களிடம் இருந்த ஏற்கும் மனநிலையைப் பயன்படுத்தி நேரு அரசு அராஜகத்தை கட்டவிழ்த்த காலத்தில் ,நீ எந்தப் பக்கம் என்று அறைகூவிய படைப்புகளை மனதிற்கு எழுச்சியூட்டிய தமிழ்ஒளி படைப்புகளை இன்று பரவலாக்க வேண்டும்.

தமிழ்ஒளியை   ஒடுக்கப்பட்டவர் என்று சொல்லி அவரின் கொள்கையை அரசியல் நோக்கை பின்னுக்கு தள்ளவும் இதன் வழி இடதுசாரிகள் முற்போக்கு இலக்கிய அமைப்புகள் மீது அவச்சொல் சுமத்தவும் இன்று சிலர் கிளம்பியுள்ள காலத்தில் தமிழ்ஒளியின் அரசியலை பாதுகாக்க அவரின் படைப்புகளை பாதுகாக்க மேலும் கவனத்தோடு முற்போக்காளர்கள் இருக்க வேண்டியது தேவை என்றாகிறது.

தமிழ்ஒளி ஓர் இடதுசாரி படைப்பாளியாக முகிழ்த்த பொழுதும் அதன் பின் வந்த காலங்களும் அவர் இறக்கும் காலமும் கம்யூனிஸ்ட் அமைப்பிற்கு மிகுந்த சோதனைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற்பட்ட காலம்.எளிய மக்களின் அன்பும் ஆதரவும் தவிர,வேறெந்த வாய்ப்புகளும் இல்லாத காலம். அமைப்பு தலைமறைவாக இருந்து மக்கள் பணியைச் செய்திருந்த காலம்.மக்களைப் போலவே அமைப்பு சார்ந்த ஊழியர்களும் குறைந்த வருவாயில் வாழ்வை வாழ்ந்த காலத்தில் தமிழ் ஒளியும் இருந்தார்.இந்தச் சூழல் தமிழ் ஒளியையும் பாதித்தது.படைப்பாளியாக இருந்து படைப்பதற்கான சூழல் அவருக்கு வாய்க்கவில்லை.

 இந்தப் பின்னணியைப் புரிந்து கொள்ள இயலாதவர்கள் தமிழ் ஒளி நிழலடிப்பு செய்யபட்டார் என்றும் கவனிக்கப்படவில்லையென்றும் இடதுசாரிகளை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் மறைந்த தமிழ் ஒளியை பயன் படுத்தி காழ்ப்பை முன் வைக்கிறார்கள்.இதிலிருந்து தமிழ் ஒளியைப் பாதுகாப்பதும் அவர் படைப்பை முன்னெடுக்க வேண்டியதும் ஒவ்வொரு முற்போக்காளரின் கடமையாகும்.

`காற்றில் நெருப்பாய்
கடலில் அலைப் பெருக்காய்
ஆற்றில் புனலாய்
தேக்கிலை போல் காதுடைய

யானைக்கூட்டத் திரள் போன்று புறப்படுவோம்’(தமிழ்ஒளி)

நன்றி:தீக்கதிர்(2013 செப்டம்பர் 21)
கவிஞரின் 90 ஆவது பிறந்த நாள் ஒட்டி எழுதப்பட்டது

Monday, August 12, 2013

அதிகாரத்தை நோக்கி நீண்ட சொற்கள்



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின்,2012 ஆம் ஆண்டின் கவிதை இலக்கியத்திற்கான , செல்வன் கார்க்கி நினைவு விருது மற்றும் பரிசு ரூபாய் 5000 ஐ பெற்ற தொகுப்பு சிறகு முளைத்த பெண்.

ஸர்மிளா ஸெய்யித் கிழக்கிலங்கை மட்டக்களப்பு பகுதியின் ஏறாவூர் சார்ந்தவர்.`வாழ விரும்புகிறேன் இவரின் முதல் கவிதை. சிறகு முளைத்த பெண் இவரின் முதல் தொகுப்பு.கவிஞர்;ஊடகவியலாளர்;செயற்பாட்டாளர்;பெண்ணியவியலாளர் என பன்முகம் கொண்டவர்.

இலங்கை ஆளும் வர்க்கத்திற்கு இணக்கமான பகுதியினர் என சொல்லப்படும் கிழக்கு இலங்கையின் இஸ்லாம் சமுகத்திலிருந்து ஆளும் வர்க்கத்திற்கு எதிராக  வெளிப்பட்ட குரல் இவருடையது.  கண்டு கொள்ளாது நடப்பதும்,மெளனமாக இருப்பதும் மார்க்கப் பெருமையென சொல்லப்பட்டதிற்கு மாறாக ,அச்சமற்ற நெஞ்சோடும் நேர் பார்வையோடும், இழிவுகள் மீதான கருத்தாடலோடு இயங்குவதும், தன்னைத் திறந்த சிந்தனைகளின் சாவியால் மலை மீறி பறப்பதும் ,மத அடிப்படைவாதத்திற்கு ஆகாதென்பதனால்  அடிப்படைவாதிகளின் அச்சுறுதலுக்கும் ஆளானவர்.

சமகாலத் துயர்களின் மீதான கவனமும், அதிகாரத்தின் சிம்மாசனத்தை நோக்கி நீளும் சொற்களுமாய், மதத்தின் போலிமையை பொது வெளியில் காட்சிக்கு வைக்கும், வேலி மீறி துளிர்க்கும் சுதந்திரத் தன்மையும் அரசியலும் அழகியலும் கைவரப் பெற்ற ஒரு பெண்ணின் வாக்குமூலச் சொற்கள் இது.

சுருட்டப்பட்ட சூரியன் ,ஒளியிழந்த நட்சத்திரம் ,வெடிக்கும் வானம் ,தீப்பந்த மேகம்,பொங்கும் கடல்,பிளவுறும் பூமி,வெடித்துச் சிதறிய கர்ப்பிணி ஒட்டகம் என்று படிமத்தை அடுக்கி அடுக்கி யுத்தப் பேரழிவைக் காட்சிப்படுத்தி `நேற்று நாமிருவரும் சுவைத்த ஈச்சங்கனிகளின் மரம் அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கிறதுஎன்று சொல்கிற பொழுது பாரிபடுகளத்திற்குப் பிறகு கபிலர் பாடும் இருந்த வாழ்வின் இல்லாமையின் பிம்பம் போலுமான `நீ இல்லாத இரவு என் கழுத்தை நெரிக்கிறது என்ற வரிகள் வழியாக துயறுரு பெண்களின் வாதையின் சித்திரம் காட்டப்படுகிறது.

உண்மையை எதார்த்தத்தை எந்த மாமன்னனும் விரும்பாததைப் போலவே தொகுப்பில் வரும் மன்னனும் காட்டப்படுகிறான்.`எங்கள் வயல்கள் அடையாளம் அறியாதோரால் ஆதாரம் இன்றி உரிமைக் கோரப்படுகின்றன;
எங்கள் வாழிடங்கள் அத்துமீறி ஆக்ரமிக்கப்படுகின்றனஎன்று மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகளை கட்டுக்கதைகள் என்றும் இவர்களெல்லாம் குழப்பவாதிகள் என்றும் சினந்து சீறும் மன்னன் பகிடி மொழியில் பகிறப்பட்டிருக்கிறான்.

 `அது குஞ்சோடும் ஆறாத காயங்களோடும் ,அலகினால் பொறுக்கும் நெல்மணி போல, சிறுகச் சிறுகக் காதலை சேமிக்கும் ;விட்டுப் பறந்த இடத்தில் காத்திருக்கும்.காதலை ஓயாது கூவும் என்ற வரிகளில் போரின் இருபக்கமும் சிக்குண்டு  வாழ்வும் வாழ்விடமும் பறிபோனச் சூழலில், தஞ்சம் சொல்லி வந்த பறவையை நீங்கிப் போன காட்சி வழி வெளிப்படும் ஒரு பெண்ணின் வாழ்வின் மீதான வாஞ்சை விருப்பு பக்கம் எங்கும் பரவிக் கிடந்து பதைப்பூட்டுகின்றன.

ஆலங்கட்டி,வேம்பு,தும்பை,இரவு,காற்று,பறவைகள்,நிலம் என இயற்கைப் படிமங்கள் வழி உணர்ந்தவைகளை அவைகளின் மீது சார்த்தி,தான் அவைகளாகவும் அவைகள் தானாகவும் துணையாய் சாட்சியாய் இருப்பதை தொகுப்பில் பார்க்கலாம். 

`ஒரு முறை எனைப் பாட விடுங்கள்;என் துயரங்களை இசைக்க விடுங்கள்
நான் சிட்டுக்குருவிகளோடு வானத்தை அளக்க வேண்டும்
விலங்குகளினால் இறுக்கினாலும் வார்த்தைகளால் அடித்தாலும்

நான் இசைப்பேன் எழுதுவேன்

என்று வாழ்வின் மீதான பேராவலில் சுதந்திர எழுத்தின் மீதான விருப்பில் அதிகாரத்தை மதபீடங்களை எதிர்த்த அறைகூவலில் முகிழ்த்த வரிகள் சிறகு முளைத்த பெண்

நன்றி:தீக்கதிர்/இலக்கியசோலை
2013 ஆகஸ்ட் 12


















































Friday, July 19, 2013

அவமதிப்பிற்கு ஆளான வாலி





++வாலிக்கு இறுதி அஞ்சலி செய்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளிகள்.++
படம்{கவாஸ்கர்}

வெள்ளி நிலவே விளக்காய் எரியும்
 கடல்தான் எங்கள் வீடு
-வாலி

கவிஞர் வாலி இன்றில்லை என்றாகி நம் நினைவுகளில் மட்டுமே இனி இருப்பார் என்றாகி விட்டார்.வாலியின் எழுத்துகளில் எளிமையின் வசீகரமும்   மொழின் துள்ளலும்  அடர்த்தியின் நளினமுமாக இருக்கும்.தொடர்ந்து ஐம்பதாண்டு காலமாக எழுதி வந்தவர்;புதிது புதிதாக சொற்களை எடுத்து இயங்கி வந்தவர்.1961 மேஜர் சந்திரகாந்தில் ஆரம்பித்து 2013 ன் கூத்தாடிகள் வரை திரைப்படம் வழியாக காதல்,தத்துவம்,மகிழ்ச்சி,துன்பம்,அரசியல்,எழுச்சி என தமிழ் தொட்டு தொடர்ந்து வந்தவர் வாலி.பதினைந்தாயிரம் பாடல்களில் விதவிதமான ரசரசமான வரிகளை காற்றில் உலவ விட்டவர்

 .சிக்கல் இல்லாத சிடுக்கு இல்லாத வரிகளை நெய்யும் ஆற்றல் கொண்டவர் .இவரின் வரிகளால் எம்.ஜி.ஆர் அரசியலில் தனது கருத்துகளை அழுத்தமாக அழகாக சொல்ல முடிந்தது.தொடர்ந்து திரைப்படத்தில் இயக்கி வந்ததோடு,அச்சு ஊடகத்தில் கவிதை,கட்டுரை,பத்தி எழுத்து,சொல்லோவியம் என கவனம் காட்டியவர்.மத்திய ,மாநில அரசுகளின் விருதுகள் பெற்றவர்;தமிழகத்தின் ஐந்து முதல்வர்களை அறிந்தவர்;பழகியவர்.அன்பின் முகத்தோடு யாவரிடமும் இருந்தவர் என்று வாலி உணரப்பட்டாலும் அவருக்கான அவர் தமிழுக்கான மரியாதையோடு அவரின் இறுதி அஞ்சலி நடைபெறவில்லை.

திரை உலகம் சார்ந்த சிலர் அவருக்கு அஞ்சலி செய்தாலும்,வாலியின் ரசிகர்கள்,சக படைப்பாளிகள் வாலியின் இறுதி நேரத்தில் பார்த்து  விடை கொடுக்க இயலவில்லை.வாலியின் இடம் தமிழில் என்னவாக இருக்கிறது என்று அவரின் சொந்த உறவுகளுக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் இவரின் வரிகளால் வளர்ந்த திரைஉலகம்,படைப்பாளிகள்  வாலியின் இறுதி அஞ்சலியை ஒழுங்கு படுத்தி,அனைவரும் காண உதவ முன் வந்திருக்க வேண்டும்.குறிப்பாக அவரோடு நெருங்கிப் பழகிய கலைஞர் கருணாநிதி, வைரமுத்து,இளையராஜா,கமல்ஹாசன்,சங்கர் போன்றோர் இதை ஒழுங்கு செய்திருக்க வேண்டும்.

திரை உலகத்தின் உண்மை முகத்தை பார்த்து வந்த வாலியின் உறவுகள்,திரைஉலகத்தின் மீதான விமர்சனத்தை திரைஉலகத்தினரிடம் வெளிப்படுத்தாமல்,இறுதி அஞ்சலி செய்ய வந்த கவிஞர்கள்,பொதுமக்களிடம் வெளிப்படுத்தியது வருத்தமாக இருந்தது.மாலை ஐந்து மணிக்கு இறுதி சடங்கு என தெரியப் படுத்தி,ஒன்றறை மணிக்கு எடுத்ததோடு இல்லாமல் ,அஞ்சலி செய்ய வந்த பொது மக்களை அஞ்சலி செய்ய விடாமல் தடுத்து அனுப்பியது வாலிக்கு நிகழ்ந்த அவமதிப்பாகும் என்பதை வாலியின் குடும்பத்தாரோ அல்லது திரைஉலகமோ புரிந்து கொண்டிருக்க வேண்டும்.

ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்து கொட்டும் மழையில் பெசந்து நகர் மின்மயானம் வரை சென்ற இறுதி ஊர்வலத்தில் அதிகபட்சமாக கலந்து கொண்டோர் இருநூறு என்கிறார் கவிஞர் பாரிகபிலன்.தலை சிறந்த ஒரு கவிஞரின் இறுதிப் பயணம் நிகழ்கிறது என்ற எந்த உணர்வும் இன்றி முகம் தெரியாத ஒருவரின் பயணம் போல சாலையில் போனது கொடுமை.ஒரு நீதிபதி கார் வந்தால் வழி கொடுக்கும் காவல்காரர்கள்,ஓர் அமைச்சர் கார் வந்தால் விலக்கி வழி தரும் போக்குவரத்து காவல்துறையினர் வாலியின் ஊர்வலத்தில் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தது.

அடிமைப்பெண் படத்தில் வாலியின் பாடலான அம்மா என்றால் அன்பு என்ற பாடலைப் பாடிய முதல்வர் ஜெயலலிதா, தனது தலைவரான எம்.ஜி.ஆரின் செல்வாக்கிற்கு தனது பாடலால் உதவிய  கவிஞருக்கு அஞ்சலி செய்ய கொடநாட்டிலிருந்து வந்து போயிருந்தால்  மரியாதையாக இருந்திருக்கும்.அதுவும் இல்லை;ஒ.பன்னீர்செல்வம் போன்ற இரண்டாம் நிலை தலைவர்கள் வழியாக அஞ்சலி செய்திருக்கலாம் தமிழ்நாட்டு அரசு.

அண்டை மாநிலமான கேரளத்தில் ஒரு படைப்பாளி,ஒரு கலைஞர்,ஒரு கல்வியாளர்  இறந்தால் மாநில அரசு ,இறந்தவருக்கு  மரியாதை செய்து,இறுதி விடை கொடுக்கிறது.

ஆனால்  பெசந்த் நகர் மின் மயானத்தில் வாலிக்கு வணக்கம் செய்ய  வந்த வைரமுத்து,பாக்யராஜ்,மேத்தா,பா.விஜய்,கபிலன் போன்ற  சொற்ப கலைஞர்களுக்கு ஒர் அஞ்சலி உரை நிகழ்த்தி,வாலிக்கு விடை கொடுக்க வேண்டும் என்று உணர்வில்லாது போனதை  ஏதும் அறியாதவர்கள் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது காற்றுள்ள போது தூற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகள் என்று எடுத்துக் கொள்வதா?

மனசு உடுத்தின கவலைத் துணி
அவிழ்த்து எறி எதற்கு இனி

-வாலி

Sunday, June 30, 2013

சமணர்கள் யார்?










இவர்கள் பிராமணர்கள் அல்லர்.பிராமணர்களுக்கு முன்பு,இந்தியாவில் ஆரிய குடியேற்றம் நிகழ்வதற்கு முன் இருந்த,திராவிடர்களின் சமயம் இது.

சமணம் என்றால் உருவ வழிபாடற்ற சமயம் என்று பொருள்.
ஆன்மாவில் நம்பிக்கை இல்லாத ,இயங்கு பொருள்(matter) சார்ந்த செயற்பாட்டின் மீது நம்பிக்கைக் கொண்டவர்கள்.
இந்தப் பார்வை வைதீக மதமான பிராமணியத்திற்கு ,பிற்காலத்தைய இந்து மதத்திற்குக் கிடையாது.

அன்றைய இனக்குழு,அதன் பின்னான தொடக்க வேளான் சமுகப் பொருளாதாரத்தின் மையமாக விளங்கிய ஆடு,மாடுகளை அழிப்பதிலிருந்து காக்க வேண்டி,கொல்லாமை,புலால் உண்ணாமையை கடைபிடிக்க வழி காட்டியவர்கள்.

இந்தியாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள முயன்ற வைதீக மதம்,இவர்களிடமிருந்தே புலால் புசிப்பதை விடுத்து,புலால் மறுப்பை கடைபிடிக்கத் தொடங்கினார்கள்.

தொல்காப்பியர்,திருவள்ளுவர்,இளங்கோவடிகள் போன்றோர் சமணம் சார்ந்த படைப்பாளிகள்;அறிவாளிகள்.

தத்துவம்,அறிவியல்,இலக்கியம்,கலை,மருத்துவம் போன்ற துறைகளில் சமண அறிஞர்கள்,கலைஞர்கள்  மதிப்புவாய்ந்த பங்களிப்பை தமிழுக்குச் செய்தவர்கள்.

கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரை செல்வாக்கோடு இருந்து,மாறிய சமுகத்தின்  பொருள் சார்ந்த அதீத நாட்டத்திற்கு,சமணத்தின் முப்புரக் கொள்கையான காமம்,வெகுளி,மயக்கத்தை அழித்தல் என்ற செயற்பாடு, ஆசை,அனுபவித்தல் போன்ற தன்னோக்குப் பார்வைக்கு உதவியாக இல்லாததால்,கி.பி 16 க்கு பின் பின்னடைவை  சந்தித்தது.

என்றாலும் முற்றாய் அழிந்துவிடவில்லை.காத்திரமான தத்துவ,இலக்கிய செயற்பாட்டை இன்றளவும் தமிழுக்குத் தந்து கொண்டிருக்கிறது சமணம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

என்ற குறளின் முதற்பாட்டில் உள்ள ஆதிபகவன் என்பது கடவுள் அல்ல.
சமணத்தின் ஆதி தீர்த்தங்கரரான ஆதிநாதர் குறிப்பது.இந்த ஆதிநாதர் நிலந்தருதிருவின் பாண்டியனின் முதற்சங்கத்தில் இருந்த மதிப்புமிகு தமிழாசானும் ஆகும்.

Sunday, June 16, 2013

மணிவண்ணனின் அகாலம்








இயக்குநர் நண்பர் மணிவண்ணன் அவர்களை 13 ஆண்டுகளுக்கு முன் விருகம்பாக்கத்தில் ஒரு பழைய படப்பிடிப்பு அரங்கில் ஒரு கலை இரவிற்கு அழைக்கும் பொருட்டு போய் சந்தித்தேன்;உடன் கலை இரவை நடத்தும் ஊரின் தோழர்கள் வந்திருந்தனர்.உள்ளே அவரை நான் தேட அவரோ,`தோழர் இந்தப் பக்கம் வாங்க’ என்று மரம் ஒன்றின் கீழ் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து எங்களைப் பார்த்து புன்முருவல் பூத்துக் கொண்டிருந்தார்.எங்களுக்கான இருக்கை எடுத்து வரச் சொல்லி,என்ன சாப்பிடுறீங்க என விசாரித்து, விவரத்தைக் கேட்டுக் கொண்டார்.சொன்னோம்.சரி வருகிறேன் என்று ஒத்துக் கொண்டு வந்தார்.

அன்றிலிருந்து தொடங்கிய எம் நட்பு அவரின் இறுதி வரைத் தொடர்ந்தது.நேரம் கிடைக்கும் பொழுது அவரைப் பார்க்க அவரின் திநகர் அலுவலகம்,வீடு என போயிருக்கிறோம். போகும் பொழுதெல்லாம் புதிய நூல்கள் குறித்த விசாரிப்பு,அரசியல்,சினிமா என பேசுவோம். தமுஎசவின் பல கலை இரவில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.2008 ல் அவர் விபத்து ஒன்றில் சிக்கி வீட்டு ஓய்வில் இருந்த பொழுது,தமுஎசவின் 11 ஆவது மாநில மாநாடு சென்னையில் நடக்க இருந்தது.அது பற்றி பேசினோம்.தான் மாநாட்டிற்கு வர இயலாது என்றார்.ஆனாலும் நிதி சேகரிப்பில் அவர் சொல்லி கதாநாயக நடிகர் ஒரு தொகை தந்து உதவினார்.

2004 ல் தமிழ்திரை உலக கலைமலர் ஒன்றை நாங்கள் கொண்டு வந்த பொழுதில் பல ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொண்டு ஆலோசனை தந்து உதவினார்.அவர் மகள் திருமணத்திற்கு அவர் அனுப்பிய அழைப்பு தாமதமாக கிடைத்ததால்,நேரில் சென்று வாழ்த்த இயலாததை சொன்ன பொழுது என்ன சம்பிரதாயம் தோழர்?விடுங்க; அடுத்தப் பணியைப் பார்ப்போம் என்று இயல்பாக பேசினார்.

இறுதி சில ஆண்டுகளில் முன் போல் பார்க்கவில்லை என்றாலும் தொலைபேசியில் பேசுவோம்;விசாரித்துக் கொள்வோம்.மணிவண்ணன் ஆரம்பத்தில்(1980) கோவையில் சோசலிஸ்ட் வாலிபர் முன்ணணியில் இருந்தார்.மார்க்சிஸ்ட் இயக்கத்தின் தொடர்பில் இருந்தார்.சினிமாவில் அவர் வளர்ந்த பொழுதும்,வேறு இயக்கத்தின் செல்வாக்கில் அவர் போன பொழுதும் தான் எங்கிருந்து புறப்பட்டோம் என்ற ஓர்மையை விட்டதில்லை.

அவருக்கு அஞ்சலி செலுத்த இன்று மாலை 4 மனிக்கு,கே.கே நகர் ஜெய்பாலாஜி நகர் வீட்டிற்கு சென்றிருந்தோம்.எளிய மக்கள் இரு பக்கமும் திரண்டு நின்றிருந்தனர்.சாரை சாரையாக அவர்கள் அஞ்சலி செய்து கொண்டிருந்தனர்.மணிவண்ணனோடு பழகிய பல கலைஞர்கள் வந்து சென்று கொண்டிருந்தனர். உடல் அருகே சீமான்,சத்யராஜ்,மனோபாலா அமர்ந்திருந்தனர். உடல் மீது அவர் இறுதியாக இருந்த நாம் தமிழர் அமைப்பின் புலிக் கொடி போர்த்தப்பட்டிருந்தது.

மதுரவாயல் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், நாம், சிகரம் செந்தில்நாதன்,தென்சென்னை தமுஎகச தலைவர்கள் அன்பரசன்,மயிலைபாலு வடசென்னை தமுஎகச செயலாளர் ஜேசுதாஸ் என நேரில் சென்று அஞசலி செய்தோம். நாம் போனதும் சீமான்,சத்யராஜ் கைக் கொடுக்க பற்றிக் கொண்டு நமது இரங்கலை இழப்பை புலப்படுத்தினோம்.அகால மரணம்.சினிமாவை செரிக்க வேண்டியவன் சினிமா சிக்கலில் மாட்டிக் கொண்டும்,நோய்மையில் சிக்கிக் கொண்டும் இறந்து போனது பேரிழப்பு..பேரிழப்பு..
படம்:தீக்கதிர் பிரகாஷ்

Sunday, June 9, 2013

காட்சி ஊடகம் :அகத்தை புறத்தை மாற்றும் தூண்டல்



இப்பொழுது படித்தவர்களும் விரும்பிப் பார்க்கப்படுகிற ஊடகமாக தொலைக்காட்சி மாறி இருக்கிறது.செய்திகள் மட்டுமே பார்த்த இப்பிரிவினர் பொழுது போக்குகளுக்கான செலவையும் நேரத்தையும் கணக்கில் கொண்டு தொலைக்காட்சி முன் தன்னை ஒப்புக் கொடுத்திருக்கின்றனர்.இவர்களை வசிகரிக்க வேண்டி புதிய புதிய நிகழ்வுகளை இவ்வூடகங்கள் முன் வைக்கின்றன.

திரைப்படங்கள்,நெடுந்தொடர்கள்  மட்டும் தொலைக்காட்சிகளுக்கு போதுமானதாக இல்லை.பார்வையாளர்களின் பல அடுக்குகளை கைப்பற்ற வேண்டி டாக் ஷோ எனப்படுகிற கலந்துரையாடல்,விவாதமேடை,உரத்த சிந்தனை  நடத்தப்படுகின்றன.

எத்தனைக் கோணம் எத்தனைப் பார்வை,உண்மையைச் சொல்கிறேன்,நாடும் நாமும் போன்ற தலைப்புகளில் முன்னுக்கு வருகின்ற பொதுவான பிரச்சினைகளின் அடிப்படையில் செய்தி அலசல்கள்,விமர்சனங்கள் செய்யப்படுகின்றன.உழைக்கும் மக்கள்,நடுத்தர மக்கள் படும் அல்லல்கள்,சந்திக்கும் தாக்குதல்கள்  இந்த அலசல்கள்,விவாதங்களில் காண முடிவதில்லை.

இந்த நிகழ்வுகளில் நமது படைப்பாளிகளான அ.குமரேசன்,ச.செந்தில்நாதன்,அருணன்,தமிழ்ச்செல்வன்,களப்பிரன்,பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்றவர்களை  அவ்வப்பொழுது பார்க்க முடிகிறது.நந்தலாலா கேப்டன் தொலைக்காட்சியில் தினந்தோறும் காலையில் பல்சுவைத் தகவல்களை பேசி வருகிறார். கிடைக்கும் வாய்ப்புகளை நமது பார்வையிலான செய்திகளை சொல்லவும் பகிரவும் நம்மவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.இது மாதிரியான பார்வைகள் தொலைக்காட்சியின் பரவலிற்கும் அவசியப்படுகிறது.தொலைக்காட்சியின் எல்லை வரம்பை நமது உரையாடல் மீறும் பொழுது தணிக்கை செய்யப்படுவதையும் காண முடிகிறது.

விஜயகாந்த் அவரின் தொலைகாட்சியில் மக்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார்.

 தந்தி தொலைக்காட்சியில் சீமான் மக்கள் முன்னால் என்கிற விவாத அரங்கை ஞாயிறு தோறும் நடத்தி வருகிறார்.இந்நிகழ்ச்சிகளில் தம் நிலை சார்ந்து மத்திய அரசை,மாநில அரசை விமர்சிக்கவும் சில உள்நாட்டு நிறுவனங்களை விமர்சிக்கவும் பயன்படுத்துவதன் வழியாக மாநில முதலாளிகளின் தொழில் நிறுவனங்களின் ஆதரவை ஊடக ஆதரவை பெற முயற்சிக்கின்றனர்.

நாதஸ்வரம்,வாணி ராணி,உதிரிப்பூக்கள் போன்ற நெடுந்தொடர்கள் வீட்டுப் பெண்களை வசீகரித்திருக்கின்றன.வீட்டுப் பெண்களின்  தனிமை, பணி,பொழுதுபோக்கு, நுகர்வுச் சந்தை போன்றவைகளை மையப்படுத்தி இத்தொடர்கள் தயாரிக்கப்படுகின்றன.சிரமங்களுக்கு பெண்கள் முகம் கொடுப்பது, குடும்பத்திற்காக பெண்கள் சவால்களை ஏற்பது ,அதில் பெண்கள் வெற்றி பெற முயல்வது போன்ற உளவியல் கூறுகளால் இத்தொடர்கள் வெற்றிகரமாக பெண்களிடம் உலா வருகின்றன.

சமூகப் பொறுப்புள்ள,சக மனிதர்கள் மீது அன்பும் கடப்பாடும் உடைய ஆட்டோ ஓட்டுநராக நடிகர் சேட்டன், சிவநேசன் என்கிற  பாத்திரத்தில் உதிரிப்பூக்கள் தொடரில் நடித்து வருவது தொலைக்காட்சியின் இன்னொரு முகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் , இம்மாதிரியான காட்சிப்படுத்தலிற்கு தொழிலாளர் இயக்கத்தின் அன்றாட போராட்டப் பங்களிப்பும் காரணமாக இருக்கின்றது.

 மகாபாரதம் தமிழில் தமிழ்க் கலைஞர்களால் நடிக்கப்பட்டு திராவிட அரசியல் குடும்ப   சன் தொலைக்காட்சியில் ஞாயிறு தோறும் ஒளிபரப்பப்படுகிறது.இதே குடும்பத்தை சார்ந்த சுட்டி தொலைக்காட்சியில் பக்தி சார்ந்த அனிமேஷன் சித்திரக் கதைகள், தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன.கிருஷ்ணன்,முருகன்,சிவன் தொடர்களை தயாரிப்பவர்களுக்கு குழந்தைகளிடம் சமுக மறுமலர்ச்சிக்கு உழைத்த திருவள்ளுவர்,பெரியார்,அம்பேத்கர்,திரு.வி.க,அண்ணா என்றாவது கொண்டு செல்லத் தோன்றவில்லை. 

மூன்,லோட்டஸ் என புதிய தொலைக்காட்சிகள் வந்திருக்கின்றன.முன்னர் என்.டி.டி.வி-ஹிந்து தொலைக்காட்சியாக இருந்தது இப்பொழுது தந்தி டிவியாக வந்து கொண்டிருக்கிறது.உள்ளூர் அளவில்  சிறு வணிகம்,தொழில் சார்ந்து நிறைய  தண்டுவட தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன.உள்ளூர் தொலைக்காட்சி சார்ந்த  நிகழ்வுகள் வடிவமைப்பு,ஆலோசனை சொல்வது என்ற முறையில் இவர்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு நமது கருத்து பரவலிற்கு முயலலாம்.

முன்னர் சில தொலைக்காட்சிகளில் குறும்படம்,ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை இப்பொழுது காண இயலவில்லை.கலைஞர் தொலைக்காட்சியில் சினிமாவில் நுழையும் ஆர்வத்திலுள்ள புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் நாளைய இயக்குநர்  நிகழ்வில் சினிமாவின் சிறிய வடிவமான குறும் படங்கள் ஒளிபரப்பப்படுகின்றன.

தொடர்ந்து கவிதைகள்,கவின்கலைகள்,நிகழ்த்துக் கலைகள்,தமிழிசை போன்றவைகளுக்கு பெரிய தொலைக்காட்சிகளில் இடமில்லை என்கிற யதார்த்தம் நம்மை ஏதோ செய்கிறது;ஏதோ செய்யத் தூண்டுகிறது.இந்தத் தூண்டல் நம் அகத்தையும் புறத்தையும் மாற்றும்படி தொடரட்டும்.

(தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டத்தில் (2013 ஜூன் 08,09)வைக்கப்பட்ட அறிக்கை)

Saturday, April 6, 2013

அயலும் தமிழும் சந்திக்கும் வலசை






கவிஞர் நேசமித்ரன்,கார்த்திகைப்பாண்டியனின்  ஒருங்கிணைப்பில் வலசை 3 ஆம் இதழ்  வெளிவந்திருக்கிறது.ஏற்கனவே உடலரசியல்;முன்றாம் பாலினம்(?) இதழ் வந்ததை அடுத்து இப்பொழுது குழந்தைகளின் கற்றல் குறைபாடு குறித்த பொருளை எடுத்து 212 பக்க இதழாக வந்திருக்கிறது.

வடிவும் ஆக்க முறையும் மகிழ்ச்சி தருகின்றது;நம்பிக்கை தருகின்றது.இதழாசிரியர்கள் இடைச்சேர்க்கை என்ற தலையங்கப் பகுதியில்,`அனுமதிக்கப்பட்ட சுவாச வெளியில் கருவறுக்கப்பட்ட பிராணிகளாய் மானுடர்கள்;கல்விகூடத்திற்கும்,பிராய்லர் கோழிப்பண்ணைகளுக்கும் வித்தியாசம் இல்லாத கல்விச்சூழல்’பற்றி தமது  கவலையை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இதழ் நெடுக அயலும் தமிழும் சந்திக்கும் புள்ளியாக வலசை இருக்கிறது.மதிப்புமிகு கூட்டுழைப்பாகவும் இதழ் இருப்பதை பார்க்க முடிகிறது.

ஒரு சிறு ஆதிக்க அதிகார கூட்டத்திற்கான வளர்ச்சியை ஒட்டி வணிக பிராந்தியமாகவும், தேவையானதை திருப்பிச் சொல்லும் அரசியற் கிளிப்பிள்ளைகளாகவும் மக்களை தேசத்தை வார்க்கும் அசமத்துவ சமுகச்சூழலில் கல்வியும்,மாணவர்களும் ஜனநாயகமற்று படைப்பூக்கமற்று , கற்றல் குறைபாடுகளும் மனச்சிதைவுகளும் கொண்டதான  நம் காலச்சூழலை இடைமறித்து மாற்றத்திற்கான விவாத மேடையாக வலசையின் படைப்புகள் ஆக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சி.

படைப்புகள் கல்வியின் இருப்பை  யதார்த்தத்தை கட்டுரையாக,கவிதையாக,கதையாக சொல்கிறது.மாற்றம் கோரும் சூழலிற்கான படைப்புகள்,கேள்விகள்,விவாதங்கள் இல்லாமல் இருப்பது குறைபாடுதான்

வலுக்கட்டாயமான போதனாமுறை சிந்தனையை அழிக்கிறது எனில் இதன் மாற்றுதான் என்ன?நாம் கடந்து வந்த பழைய திண்ணைகளுக்கோ மரத்தடிகளுக்கோ காடுகளுக்கோ செல்வது மாற்றா?இயற்கையை புரிந்து கொள்வது கல்வியின் மிக முக்கியமான அம்சம் எனில் புரிந்து கொண்ட இயற்கையை மானுட வளர்ச்சிக்காக மேம்படுத்துவதும் அதனோடு வினை செய்வதும் அவசியம்

.வினையும் எதிர்வினையும்  மானுடத்திற்கும் இயற்கைக்கும் தேவை.இயற்கையின் காலில் விழுந்து புலம்புவதை விடுத்து இயற்கையை மானுட வளர்ச்சிக்கு ஆற்றுப்படுத்துவதே காலம் தோறுமான வளர்ச்சிக்கு ஏற்றது

கல்விக்கான மாற்று என்று விவாதிக்கும் பொழுது பாவ்லோ ஃபிரைய்ரே தவிர்க்க இயலாத ஆளுமையாக நம் முன் வரவேண்டும்.இதழில் ஃபிரைய்ரே குறித்த கட்டுரைகள் இல்லாதது குறைபாடே.எனினும் நேசமித்ரன்,கார்த்திகைப்பாண்டியன் மீது நம்பிக்கை இருக்கிறது;பெயர்தலிற்கான வலசையாக இன்றி பேசு பொருளாகவும் வலசையை மாற்றுவார்கள்.வலசை 4 ஐ எதிர்நோக்குகிறேன்.

Sunday, March 10, 2013

மாற வேண்டிய சாகித்ய அகாதமி


சாகித்ய அகாதமி நிறுவப்பட்ட நாளை சென்னையில் வரும் 12 ஆம் திகதி  அகாதமி, பாரதிய வித்யாபவனில் விழாவாக நடத்துகிறது.இது மக்களின் வரிப்பணத்தில் இயங்குகிற அமைப்பு.

 பல்வேறு மொழிகள்,பண்பாடு,சிந்தனைப் போக்கு,இலக்கிய போக்குகளின் மேடையாக செயல்பட வேண்டிய அமைப்பு.யார் ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் பின் செல்லாது,இலக்கிய வளர்ச்சியை முன்னிட்டு இயங்க வேண்டிய அமைப்பு.விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்டு பலரையும் இணைக்க வேண்டிய அமைப்பு.

இந்த சிந்தனை இல்லாமல் (அகில இந்திய அளவில் எப்படியோ) ஆனால் தமிழ்நாட்டு அளவில்  சிந்தனைத் தெளிவு இல்லாத கரடு தட்டிப் போன,ஆளும் கட்சிகள் சார்ந்த இலக்கிய  பிரமுகர்களுக்கு முறைவாசல் வேலை செய்கிற, பிரபலங்களுக்கு  சொறிந்து விடுகிற திண்ணையாக இருக்கிறது.

அகாடமி பெயரில் தமிழ்நாட்டில் நடைபெறும் விழா அழைப்பை பார்த்தால் தொடர்ச்சியாக சில பேர்களே பொதுக்குழு உறுப்பினர் என்ற அளவில் தன் பெயரை வறவேற்புரை,தொகுப்புரை,சிறப்புரை,ஆய்வுரை,கவியுரை என்று தங்களுக்கான வாய்ப்பை தாங்களே பங்குப் போட்டுக் கொள்கிற கேவலங்களின் கூடாரமாக இருக்கிறது.

நேரில் சொன்னோம்;அலுவலகம் பக்கம் போகிற போது அணுகுமுறையை மாற்றுங்கள் என்று சொல்கிறோம்.மண்டல அதிகாரியை பார்த்தப் பொழுதும் சொன்னோம்.ம்கூம்..மாற்றம் இல்லை.மீண்டும் அதே அணுகுமுறை,அதே கேவலங்களின் அரங்கேற்றம் என் தொடர்கிறது.

ஒர் அமைப்பு நிறுவப்பட்ட நாளின் விழா என்பது பல்வேறு இலக்கிய,சிந்தனைப் போக்குகளின் சார்பாளர்களை இது சார்ந்த படைப்பளர்களை அழைத்து கொண்டாடுவது என்பதே சரியானது.

மாறாக ஆளும் கூட்டணி,ஆளும் கட்சிகள் சார்பாளர்களை அழைத்து கொண்டாடுவ்து சாகித்ய அகாடமி தொடங்கப்பட்டதன் நோக்கத்தை குழி தோண்டிப் புதைப்பது ஆகும்


.இவர்கள் தமிழக அளவில் நடத்தும் அரங்குகள்,கூட்டங்களுக்கு நவீனப் படைப்பாளிகள்,இடதுசாரிகள்,பெண் படைப்பாளர்கள் ,அசல் தலித் படைப்பாளிகள், ஜனநாயக அணுகுமுறை கொண்டவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்.அங்கொன்று இங்கொன்றாக ஊறுகாய் காரணம் காட்ட சில பேர்களை அழைத்திருக்கலாம்.

பொதுக்குழு உறுப்பினர்களை யார் திருப்தி செய்கிறார்களோ  அவ்ர்களை அழைத்து பேச வைப்பார்கள்;அவர்களை சுற்றி இவர்கள் நின்று கும்மியடிப்பார்கள்;ஆளும் கட்சிகள் சார்ந்த படைப்பாளிகள் அழைக்கப்படுவார்கள் என்கிற    நிலை தொடர்வதை எதிர்த்து, மக்கள் சார்ந்த படைப்பாளிகள் புறக்கணிக்கபடுவதை எதிர்த்து  மீண்டும் குரல் கொடுக்க வேண்டும்;போராட வேண்டும்.சாகித்ய அகாதமி பொது அமைப்பு;இதன் செயல்பாடும் பொதுவில் இருக்க விழைகிறோம் 

வரும் 12 ஆம் திகதி அமைப்பு நிறுவப்பட்ட நாள் விழாவிற்கு அழைக்கப்பட்டிருப்போர் யார்? யார்? அறிமுக உரை இராம குருநாதன்;பேச்சாளர்கள்:மாலதி செந்தூர்,அசோகமித்திரன்,சா.கந்த சாமி,அப்துல் ரகுமான்,இரா.வைரமுத்து,ஈரோடு தமிழன்பன்,மு.மேத்தா

Tuesday, February 19, 2013

சீற்றத்தை உள்ளடக்கியக் குரல்



பெண்ணியக் கவிதைகளால் தமிழ்க் கவிதை வேகம் பெற்று அர்த்தத்தில் அடர்த்தியில் புதுவீச்சோடு திகழ்ந்து வருகின்றது.பெண்மொழியால் தமிழ்மொழி புதிய புதிய பார்வையைப் பெற்று ஜனநாயகப்படுத்தப்பட்டு வருகின்றது.70களின் இரா.மீனாட்சி தொடங்கி 2008ன் கலைஇலக்கியா,ச.விசயலட்சுமி என புதியத் தடங்களை அவதானிக்கலாம்.

 ச.விசயலட்சுமியின் `பெருவெளிப்பெண் கவனத்தில் கொள்ளத்தக்க கவிதைத் தொகுப்பு.பெண்ணின் சீற்றத்தை உள்ளடக்கிய உரத்தக் குரலாக வெளிப்படும்  விசயலட்சுமியின் கவிக்குரல் சமுகம் சார்ந்த அக்கறை,பிரபஞ்சம் தழுவிய  அரசியல் குரலாகவும் ஒலிக்கிறது.

 ஜனநாயகமற்ற குடும்பத்தில் பெண் படுகின்ற பாட்டை,   பெண்ணின் சுயம்,அடையாளம் குறித்த தகிக்கும் குரல்களை  பதிந்து செல்கிறது தொகுப்பு.

சொற்களின் மாய விளையாட்டுகளை தள்ளி எளிய சொற்களின் வலிய அனுபவங்களை விசயலட்சுமி கவிதையாக்கி இருக்கிறார்.

மனுநீதி, ஆணாதிக்க அச்சில்களால்  வனையப்படுகின்ற பெண்ணின் தோற்றத்தை மறுத்து,தங்களின் உயிர்த் துடிப்பை உற்றுக் கற்றுக் கொள்ள  மொழிகின்ற, வேட்டை மிருகங்களின் வயிற்று இரையானாலும், செரிக்க மறுத்து உயிர்த்தலிற்காக போராடுகின்ற பெருவெளிப் பெண்கள் குறித்த நம்பிக்கைப் பதிவு.

குடும்பமும் சமுகமும் சூட்டும் பட்டப்பெயர், வசைப்பேச்சு கேட்டு புழுங்கும் பெண்ணாக இல்லாமல்,

`எல்லாவற்றிற்கும் நானே காரணம் என்ற/இரைச்சலுக்கு மத்தியில்/குத்தகை விட்ட யோனி மீட்டு/மீண்டும் உயிர்த்தெழுவேன்என்று தன் சுதந்திரத்தை மீட்டெடுக்க முயலும் நவயுகப் பெண்களின் குரலாக ஒலிக்கின்றது.

`புணர்வுகளில் முலை வெடித்து/தாயெனும் பட்டம் என்னைத்/தேய்த்து தேய்த்து உருவங் கொடுக்கையில்/சேகரித்த உள்மனக் கொந்தளிப்புகள்/நான் யாரென/வினா தொடுக்கும் நான்

ஆண்களின் நான் அகங்காரத்தின் வெளிப்பாடு.பெண்களின் நான் சுதந்திர வெளிப்பாடு.ஆணின் நானிலிருந்து பெண்ணின் நான் ப்ரமாண்ட வித்தியாசம் கொண்டது.பெண்ணின் நான் சுயத்தின் வெளிப்பாடு.

உலகமயமாக்கல் நகரங்களை மனிதர்களை வாழ்க்கையை சிதைக்கும் என்பதை `தெறித்த விலாகவிதையில் உணர்ந்து கொள்ள முடிகின்றது.

பசியழித்து உயிர் வளர்க்கும் அமுதசுரபியே கிடைத்தாலும் அதை வைத்து உறுபசி போக்க எண்ணாமல் எண்ணெய் வயல்களுக்காகவும்,அணுகுண்டுகளுக்காகவும் பயன்படுத்தும் ஆதிக்க நாடுகளின் அசல் முகவரியை காட்டுகிறது பயணம் கவிதை.

கொசாவா,ஈழம்,ஆப்கன் என தொடர்ந்த போர்கள் ஆனாலும் அரசியல்,சாதி, மதம் சார்ந்த வன்முறை ஆனாலும் இலக்காகி பலியாகுவது உயிர்ப்புகளின் கருவூலமான பெண்களே.

இயற்கையின் வடிவுறுவானப் பெண்களின் மீது தொடரும் ஆண்களின் கால கால யுத்தம் உறுப்புகளை சிதைப்பதோ வல்லாங்கு செய்வதோ மட்டுமின்றி  பெண்ணினத்தையே கருவறுக்கும் போருக்கு எதிரான அறைகூவலை ஏற்று அழிய மறுத்து உயிர்ப்பின் அரசியற்குரலாக  வெளிப்படுகின்றது இப்படி:

`வரையறைகளும் குறியீடுகளும்
குறி வைத்தாலும்
யாம்
விழுங்கி ஒளிரும் சூரியக் கரும்புள்ளிகளாய்
உயிர்த்தலின்
தொப்பூழ்க் கொடியாய்த் தொடரும்
பெருவெளிப் பெண்
என்று வெளிப்படும் குரல் ஆண்களால் பின்னப்படும் அழிமான வலைகளை அறுத்தெறியும் புதியக் குரலாக வெளிப்படுகின்றது.

 பெருவெளிப் பெண்,உயிர்ப்பு,நிரவல்,தனிமை,நட்பு,கதவின் ஓலம்,வழிந்தோடும் விசும்பல்,எல்லைகளுக்குள் இல்லை என சொல்லத்தக்க கவிதைகளால் நிறைந்திருக்கிறது பெருவெளிப் பெண்.
(நன்றி:புதிய புத்தகம் பேசுது/2008 நவம்பர்)