Wednesday, October 10, 2012

மெரினாவில் மீண்டும் ஒரு போர்க்களம்



   






சுதந்திரத்திற்குப்  பிறகான அறுபது ஆண்டுகளில் சென்னையின் குடிசைப் புறத்தில்  ஏறிய  தீ நின்ற பாடில்லை;எரிந்து  கொண்டிருக்கிறது;முன்னிலும் குரூரமாக.;முன்னிலும் வெக்கையாக.எளிய உழைப்பாளி மக்கள் குடியிருந்த பல குடிசைப்பகுதிகள் ஓரிரவில் எரிந்து காணாது போயிருக்கின்றன.மறுநாள் அந்தப் பகுதி அவர்களுக்கு அன்னியமாக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டுள்ளனர்;

 எரியும் நெருப்பிற்கு காரணம் மண்ணெண்ணெய் அடுப்பு    அல்லது மின்  கசிவு என்று சொல்லி காரணகர்தாக்களான நில வியாபாரிகளை,பெருநிறுவனங்களை அல்லது தன்னை காப்பாற்றிக் கொள்கிறது அரசாங்கம்.எளிய சனங்கள் இவர்கள் தருகிற ஐநூறை ஆயிரத்தை வாங்கிக் கொண்டு தெருக்களில் புறநகர்ப் பகுதிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து நிற்கின்றனர்.

இவர்கள் விரட்டி அடிக்கப்பட்ட பகுதி மாடி குடியிருப்புகளாக ,அரசு அலுவலக வளாகங்களாக ,பெருநிறுவன வளாகங்களாக மாறி முன் சொல்லப்பட்ட காரணங்கள் உதிர்ந்து அம்மணமாகி நிற்கின்றன.உட்பகுதிகளில் பற்றிய தீ இப்போது கடற்கரையை தொட்டிருக்கிறது.ஏற்கனவே எண்பதுகளில் எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் மெரினாவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட காரணமும் இப்போதைய மெரினா சீனிவாசக் குப்பத்தில் பற்றிய தீயின் காரணமும் ஒன்றேதான்.அணுகுமுறையில்தான் வித்தியாசம்.அன்று நேரடியாக அரசு இறங்கியது.இன்று மறைமுகமாக இயங்குகிறது.

 ஊடகங்கள் உண்மைக்  காரணத்தை சொல்லாமல் சீனிவாசபுரத்தில் திடீர் தீ விபத்து;குடிசைகள் எரிந்தன என்று விபத்து செய்தியாக்கி வெளியிடுகின்றன.மெரினா கடற்கரையின் அயோத்திக் குப்பம்,நடுக்குப்பம்,நொச்சிக் குப்பம்,டுமீங்குப்பம்,ஆல்காட் குப்பம் அடுத்து இருப்பது இந்த சீனிவாசபுர குப்பம்.

இவர்கள் கடலின் மைந்தர்கள் ; ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ;ஒவ்வொரு நாளும் துயரம் என்ற கவிஞர் வாலியின் துயரம் தோய்ந்த வரிகளின் வலி தோய்ந்த் வாழ்வை வாழும் நெய்தல்நில மக்களை மீனவர்களை கடலை விட்டே ஓட்ட வேண்டும் என்ற மீனவநணபனின் ஆசை இன்றும் தொடர்கிறது எனினும் இம்மக்களின் உறுதியான வாழ்வின் மீதான பிடிமானத்தின் காரணமாக கடற்கரையிலிருந்து ஒரு சில கிலோமீட்டர் தள்ளி குடிசைமாற்று வாரிய வீடுகளில் குடிவைக்கப்பட்டுள்ளனர்.இதன் அளவும்கட்டுமானமும் பராமரிப்பும் மோசமாகவே இருக்கின்றன என்பது தனியாக சொல்லப்பட வேண்டியது.

 சீனிவாசபுரத்தில்  போன மாதம் நள்ளிரவில்  குபீரென தீப்பிடித்து  சில குடிசைகள் எரிந்தன.அடுத்த ஒரு வாரத்தில் இது போலவே இதன் இன்னொரு பகுதியில் குபீர் தீயினால் பல குடிசைகள் எரிந்தன.இந்தக் குடிசைகள் எல்லாம் கடற்கரையைப் பார்த்தபடி நீளவாக்கில் இரண்டு தெருக்களில் உள்ளன.இப்படி 175 குடிசைகள் எரிந்து போயிருக்கின்றன.மின்கசிவு இல்லை.சமையல் தீயும் இல்லை.ஒரு பிரபல தொழிலதிபரின் ஆட்கள் வைத்த பாஸ்பரஸ் தீ  என்றே அந்த மக்கள் கருதுகிறார்கள்..இரண்டாம் முறை வைத்த தீயில் சிக்கிய கூலியாள் ஒருவன் தந்த தகவல்படி இது அவரின் வேலைதான்  என்று அம்மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

எரிந்து போன குடிசைகளை  மீளக் கட்டக்கூடாது என்று தலா ஐந்தாயிரம் ரூபாய் அரசால் திணிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் கடற்கரையில் அலைந்து திரிகின்றனர்.காமராஜர் காலத்தில் கட்டித்  தரப்பட்ட வீடுகளின் போதாமையால் இப்படி குடிசைகளில் தங்குபவர்களுக்கு மாற்று வீடுகள் கடற்கரை அருகிலேயே வேண்டும் என்று சீனிவாசபுரம் ஊர்சபை அரசை கேட்கிறது.

 இந்த சீனிவாசபுரத்திற்கு பின்பக்கம் கடலில் கலக்கிற அடையார் ஆற்று கழிமுகத்தை ஒட்டி இவரின் அரண்மனை உள்ளது.தெற்குபுறம் செட்டிநாடு விதயாஸ்ரம் பள்ளி,இடதுபுறம் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபம்,கிழக்குபுறம் கடற்புரத்தை பார்த்தபடி செட்டிநாட்டு டவர்ஸ்,சோமர்செட் கிரீன்வேஸ்,டிவிஹெச்,முரசொலி மாறன் டவர்ஸ் என  உள்நாட்டு,வெளிநாட்டு பெருமுதலாளிகளின் வணிக நிறுவனங்கள் குவிந்திருக்கின்றன.

முன்று கிலோமீட்டர்  சுற்றளவு உள்ள இந்த பகுதிக்கு  எம்.ஆர்.சி நகர் என செட்டிநாட்டரசர் பெயர் வைத்துள்ளார்.அடையார் ஆற்றின் ஒரு பகுதியை மூடிவிட்டு இந்த நகர் எழுப்பபட்டுள்ளது.இந்த நகரில் அமைக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் தகவல் தொழில்நுட்பம்,மென்பொருள்,தொலைத்தொடர்பு,மதுபான விடுதிகள் என சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் வருகின்றது.உள்நாட்டுச் சந்தையைச் சுரண்டி டாலரை பெருக்கம் செய்யும் இவர்களின் மேலுமான தேவைக்கு பின்புறமுள்ள சீனிவாசபுரம் தேவையாக இருக்கிறது

 அடித்து விரட்டி  விட முடியாத மீனவர்கள்  என்பதை புரிந்து கொண்ட  அரசாங்கம்,மக்கள் குறிப்பிடுகிற தொழில் அதிபரின் கைவரிசையை  மறைமுகமாக ஆமோதிக்கிறது.எரிக்கபட்ட குடிசை 175 என்றால் 900 குடிசை எரிக்கபட்டதாக கணக்குச் சொல்லி,மீதமான பணத்தை பங்கு போட்டுக் கொண்டு செட்டியாரின் செயலிற்கு துணையாக இந்தப் பகுதி அதிமுக பிரமுகர்கள் இருக்கிறார்கள்.

2004 ல்  வந்த சுனாமியைக் காரணம் காட்டி ஐநூறு மீட்டருக்குள் எந்த மீனவகுடியிருப்பும் ,சிறுகடைகளும் இருப்பது ஆபத்து என்று அலறிய அரசாங்கம் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை கடற்கரை ஒட்டி விரிவுப்படுத்த அனுமதிக்கும் செயலினால் உண்மை வெளியே வந்து விட்டது.இவர்களின் நோக்கம் மீனவ உயிர்களை பாதுகாப்பது  அல்ல.இந்த பெருமுதலாளிகளின் வணிக நோக்கிற்கு கடற்கரையை கபளீகரம் செய்வதாகும்.இதற்கு உடன்படாத மீனவகுடியிருப்பு மீது பாஸ்பரஸ் தாக்குதல் நடத்தப் படுகிறது.இவர்களின் இந்த தாக்குதலை எதிர்நோக்கியே சீனிவாசபுரத்தின் பதினெட்டாயிரம்  மக்களும் இருக்கிறார்கள்.

பெருமுதலாளிகள்-ஆட்சியாளர்கள்-அரசு எந்திரத்தினர் என்ற இக்கூட்டணியின்  வஞ்சக சூழ்ச்சி வேகம் கொள்ளுமேயானால் இந்தப் பகுதி மீண்டும் போர்க்களமாகும் .ஆனால் முன்பு போல் அல்லாமல் உண்மை தெரிய வந்துள்ள மற்றப் பகுதி மக்களும் இந்தப் பகுதி மக்களுக்குத் துணையாய் அணி வகுப்பார்கள்.

(தீக்கதிர் 2012 அக்டோபர் 08)

No comments:

Post a Comment