Wednesday, January 11, 2012

இதயமும் மூளையுமான இளைய சக்தி

                                                                                                         
இன்றைய இந்தியாவிற்கும்                                            

இனிவரும் இந்தியாவிற்கும்
என்றைய இந்தியாவிற்கும்
இதயமும் மூளையும் நீ.....

நீ இல்லையெனில்
ஓரணுவும் அசையாது உணர்.

உன்னால் தேசம்
புதுமை கொள்ளும்
உன்னால் தேசம்
துடிப்பு கொள்ளும்
உன்னால் தேசம்
உண்மை கொள்ளும்.

உனது ஆட்காட்டி விரலிலிருந்துதான்                                                 
அதிகாரம் பிறக்கிறது
அதிகாரம் என்பதும்
ஆட்சி என்பதும்
கோட்டை கொத்தளங்கள்
என்பதும் நீ..

உன்னால் தேர்வு செய்யப்பட்டவர்கள்
அதிகார போதை தலைக்கேறி
உன்னை மறந்து போனார்கள்
தேசத்தை வளமாக்க வேண்டியவர்கள்
குடும்பத்தை வளமாக்கிக் கொண்டார்கள்

பாதை எங்கும் பார்வை பதித்து
பழுது பார்க்க வேண்டியவர்கள்
பழுது பட்டு புழுதியில் கிடக்கிறார்கள்.

தீட்சண்யம் சுடரும்
உனது விழிகளுக்கு முன்னால்
நித்தியானந்தங்கள் ஆன்மீகத்தை
அழுக்காக்கிக் கொண்டு
சரசமாடிக் கிடக்கிறார்கள்

மகிழ்ச்சிக்கும் ஒற்றுமைக்கான
போட்டி விளையாட்டுகள்
சூதாட்டக் களங்களாகி
உன்னை மட்டுமின்றி
மொத்த தேசத்தையே
களங்கப்படுத்திக் கொண்டிருக்கிறது

நான்கு சுவர்களுக்குள்
பகிர்ந்து கொள்ளப்பட வேண்டிய
காதலையும் காமத்தையும்
சுதந்திரம் என்ற பெயரில்
ஊரறிய நிகழ்த்திக் காட்டுவது
ஏனையோர் சுதந்திரத்தை
எள்ளி நகையாடுவதன்றி
வேறென்ன?

எத்தர்களுக்கும் பித்தர்களுக்கும்
சாதி மதக் காரர்களுக்கும்
ஏய்க்கும் சுயநலக்காரர்களுக்கும்
ஒடு பிள்ளையாய்
எடுபிடி வேலை செய்ய வேண்டியதா
உனது வேலை?
சுவரொட்டி ஒட்டுவதும்
கட்டவுட் கட்டுவதும்
வாழ்க ஒழிக முழக்கம் போடுவதா
உனது இலக்கு?

நிதி மூலதன பெருமுதலாளி சந்தைக் கூட்டங்களும்
அவர்தம் அடிவருடிகளும்
உனக்கான வாழ்க்கையை
நாசப்படுத்தும் பொழுது
உன்னை காக்கவும்
மானுடம் காக்கவும்
ஆயுதங்கள் எடுக்க வேண்டியதும்
உன் பொறுப்பு

குடும்பம் சார்ந்தது அல்ல
உனது பரம்பரை
தேசம் சார்ந்தது
உலகம் சார்ந்தது

ஹோசே மார்த்தியும்
சேகுவேராவும்
 கிளாரா ஜெட்கின், ரோசாலக்சம்பர்க்
கல்பனாதத் கேப்டன் லட்சுமிகளும்
லெனின், ஸ்டாலின், அலன்டே, நெருடா
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ்
ஞானத் தொப்புள் வழி
வளர்ந்து படர்ந்து வரும்
வீரப்பரம்பரையின் இன்றைய முகம் நீ.

இடியிடமிருந்து மொழியையும்
மழையிடமிருந்து காதலையும்
தீயிடமிருந்து தீரத்தையும்
ஆகாயத்திடமிருந்து அரவணைப்பையும்
கைக்கொண்டதும் நீ

காற்றை குதிரையாக்கி
சந்திர சூரிய ஜோதி எடுத்து
மின்னல் வாளேந்தி
சுழலும் பூமியை முகமெனக் கொண்டு
புதிய உலகையும் புதிய பண்பாட்டையும்
அமைத்திடும் பொறுப்பு
பாலினம் தகர்த்த
உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது

அவனும் அவளுமான
இளைய சக்தியே
உருகி ஓடும் எரிமலைக் குழம்பில்
படை நடத்திட வா
பகடை அழித்திட வா....!

No comments:

Post a Comment