Monday, February 6, 2017

பேராலம்


காலம் சும்மா 
கடந்து போக 
அனுமதியேன்
பக்கம் பரபக்கம்  
கூராய்வித்தே
அனுப்புவேன்
அடி மேல் அடி
கண்ணீராற் நிரம்பிய
பெருந்துயர்
தழைப்பதற்கான
துளிர்விட்டே
சரிகிறது பேராலம்


மோடி வைக்கும் ஆப்பு



எங்கள் ஹோம்மினிஸ்டர் காலையில் பேப்பரைப் பார்த்து 
” என்னங்க மோடீ பட்ஜெட்டுல ஒரு கோடி பேருக்கு வீடு கட்ட 23000 கோடி ஒதுக்கீடு பண்ணியிருக்காராம. அதை வகுத்தா தலைக்கு எவ்வளவு வரும்னு சொல்லுங்க ” என்றார். 

கணக்குப் போட்டு “ 23000 ரூபாய் வருது ”என்றேன். ”23000 தில என்ன வீடு கட்ட முடியும்; இந்த ஆளு பன்றது ஒன்னும் சரியில்லையே. பாருங்க இந்தாளு 500 ஐயும் 1000ஐயும் ஒழிச்சாரு. நீங்க என்கிட்ட 3000 ரூபாய் கடன் வாங்கித் தராம இருக்கீங்க.” 

”இரண்டரை லட்சத்துக்கு மேல பேங்குல கல்யாணத்துக்கு காசு தர மாட்டாங்கிறான்னு பக்கத்தில சொன்னாங்க. அதுக்கு ஒவ்வோரு செலவுக்கும் வவுச்சர் வாங்கி பாங்குல தரணுமாம்.”

”நாம என்னா கல்யாணத்துல தங்கபாளமா ரெட்டிகாரு போல வாங்கி கொடுக்கப் போறோம். வர்ற ஆயிரம் பேருக்கு ஒரு வேள சோறு தரப் போறோம். அதுக்கும் ஆப்பு வைக்கிறானே இந்த மோடீ. ஒன்னும் சரியில்லங்க” என்று காலையில் பொரிந்து தள்ளிவிட்டுப் போனார்

முடிந்து போனதா காந்தி சகாப்தம்?






இது போன்றதொரு குளிர்காலம் அது. 1948 ஜனவரி 30 வெள்ளி மாலை 5 மணிக்கு தொடங்கப்பட வேண்டிய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு பத்து நிமிடம் தாமதமாகி விட்டதே என்ற பரிதவிப்பில் 79 வயதைக் கடந்த மகாத்மா காந்தி தன் பேத்திகளான அபா, மனு தோள்களில் மிதந்து வருகிறார்

.புல்வெளியின் குறுக்காக நடந்து மேடைக்கு வர நடக்கிறார். புஷ்கோட் அணிந்த உடல் பெருத்த அந்த நபர் நின்ற இடத்தில் ஒரு குழந்தை நின்றிருந்தால் கூட காந்தி மீதான குறி தப்பி இருக்காதுதான். காலை தொட்டு வணங்குவது போல வந்த நபர், தடுக்க வந்த அபாவை பெண்ணென்றும் பாராது தள்ளி சாய்த்து விட்டு, கால்சராயிலிருந்து பெனிட்டா ரக துப்பாக்கியை எடுத்து, மூன்று முறை காந்தியை நோக்கிச் சுட்டான். 

முதல் இரண்டு குண்டுகள் காந்தியின் வலதுமார்பை துளைத்தது. மூன்றாவது குண்டு காந்தியின் வலது பக்க வயிற்றை துளைத்தது. ஹே ராம் என்ற சொற்களை உச்சரித்தபடி புல்வெளியில் சாய்ந்து விழுந்தார் காந்தி. 

டெல்லி பிர்லா மந்திரின் மேல் ஒளிர்ந்த மாலை நேரச்சூரியன் யாவற்றையும் பார்த்துக் கொண்டுதானிருந்தான். கண நேரத்தில் மகாத்மாவின் சகாப்தம் முடித்து வைக்கப்பட்டது என ஆர்.எஸ்.எஸ் சின் நாதுராம் கோட்சே நினைத்தான். 

எழுபது ஆண்டுகள், என்ன எண்ணாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அரசிலிருந்து மதத்தை பிரிக்க எண்ணியவனின், சிறுபான்மை மக்களின் கேடயமாக விளங்கியவனின் , சிறுபான்மையை மதிக்கும் பெரும்பான்மையின் செயலே சுதந்திரம் என்ற மகாத்மா காந்தியின் சகாப்தம் முடியாது தொடரும். லால் சலாம் மகாத்மாஜி

மெரினா எழுச்சி மீதான அரசவன்முறை




வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ :
கடந்த மூன்று நாட்களாக மனம் ஆலாய் அடித்துக் கொண்டிருகிறது. அரசுகள் பொய் பேசுகின்றன.அதிகாரிகள் பொய் பேசுகிறார்கள். ஊடகங்கள் பொய் பேசுகின்றன. மக்கள் உண்மையை பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அந்த உண்மைகள் அம்பலம் ஏறாமல் காற்றில் கரைந்து விடுகின்றன.கடலோடிகள், தலித்துகள் அரசாங்கத்திற்கு அஞ்சாமல் எங்கள் பிள்ளைகளுக்கு களத்தில் கடலில் அரணாக நின்றார்கள்.குடிக்க தண்ணீரும் சாப்பிட சாப்பாடும் தந்து , கடற்புரத்தில் 23 ஆம் தேதி முழுக்க உடனிருந்தார்கள். அந்த மக்கள் மனம் கேளாமல் அலறித் துடித்துக் கொண்டு , எங்கள் பிள்ளைகளொடு தாயாக சகோதரியாக உடன் பிறந்தவர்களாக அவர்கள் களத்தில் நின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கம் பற்றித் தெரியும்.ஆண்டைகள் பற்றித் தெரியும். இயற்கையின் பாதகங்கள் பற்றித் தெரியும். 

இன்று இரண்டு நாட்களாக அவர்கள் வீடுகள் அலைக்கழிக்கப்படுகின்றன. நள்ளிரவில் வீடு வீடாக சோதனைகள் நடக்கின்றன.அவர்களின் தொழிற்பொருட்கள் அழிக்கப்படுகின்றன.வாழ்வாதாரம் சிதைக்கப்படுகின்றன.அவர்கள் மொழியில் சொன்னால் ரவுடிப் போலீசுகள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி ரவுடித்தனம் செய்கின்றன.

தோழர்கள் களப்பணி செய்கிறார்கள். மனித உரிமைக் கமிசன் நடவடிக்கை கோரி மனு அனுப்பி இருக்கினறது. அந்த கடற்புரத்து மக்களின் ஓலம் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. ஜல்லிகட்டுக் கோரிய மாணவர் திரளோடு அந்த கடலோடி மக்கள் கலந்தது ஆதிக்க அரசிற்கு பிடிக்கவில்லை. அவர்களைத்தான் சமுக விரோதிகள் என்று தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் அடையாளப்படுத்தி, அரசுகளுக்கு பணிவிடை செய்து கொண்டு அறிவிக்கப்படாத தணிக்கையை செய்து கொண்டு இருக்கின்றன.

நேற்றும் இன்றும் இரவில் இந்தச் செய்திகள் யாவும் கேட்டு கேட்டு மனம் களைத்து சோர்வடைந்து போய் விட்ட உணர்வு ஓங்கி நின்றது.சேனல் மாற்றியப் பொழுது , மாடசாமி பாரதியிடம் அய்யா..அய்யா..நம்ம சிதம்பரம் அய்யா கோயம்புத்துர் ஜெயிலுல செக்கிழுக்கிறாகளாம்; சிவம் அய்யா சேலம் ஜெயிலுல கசையடி வாங்குகிறாளாம் என்பார். பாரதி பராசக்தியிடம் முறையிட்டு கண்ணீர் மல்கி வேண்டி பாடுவார் இந்தப் பாடலை : 

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீறாற் காத்தோம் கருகத் திருவுளமோ
எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ


பாரதிக்குப் பிறகு வந்த 95 ஆண்டு காலத்தில் நிலைமையில் மாற்றம் இல்லை.ஆணவத்தில் அதிகாரத்தில் பொய் பேசுவதில் உண்மைகளை மறைப்பதில் பரங்கிகாரர்களுக்கும் பன்னீர் , கிரிஜா  ஜார்ஜ் ,  விஜயேந்திர பிதாரி, அமல்ராஜ் போன்றோருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஒரு வித்தியசம் உண்டு.  

அவர்கள் வெள்ளைக்கார கொள்ளையர்கள்; 
இவர்கள் உள்ளூர்க்கார கொள்ளையர்கள்

எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி...









அது 1982. நான் எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி, அரசியலை எதார்த்தத்துடன் உரசிப் பார்த்து இருந்த காலம். எட்டாவது படிக்கும் பொழுதே, திமுக கூட்டங்கள் கேட்கப் போவேன். திமுக என்றால் எனக்கு எம்.ஜி.ஆர் தான். பின் அவரைத் தொடர்ந்து அதிமுக போனேன்.எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அரசியல் உண்மையோடும் வாழ்வொடும் உரசிப் பார்த்து, இந்தாள் வேஸ்ட் என்று முடிவுக் கட்டி, தேடலுடன் தனித்து இருந்த காலம். ஊர் குடும்பம் யாவும் வாத்தியார் பின்னாடி.நான் மட்டும் தனி. 

அந்த காலத்தில் செங்கொடி மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டது. இன்றும் அந்த ஈர்ப்பு குறையவில்லை.வாழ்வின் ஈர்ப்பாக பேருரு கொண்ட அன்பின் ஈர்ப்பாக செங்கொடி இருந்து கொண்டிருக்கிறது. ஊரின் சிபிஐ எம் கட்சியில் ஆதரவாளனாக சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.. அப்பொழுதுதான் ஊரில் திமுக பிரமுகரும் , பின்னாளில் திமுகவின் சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த, திரு.சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் இருந்த , அறிஞர் அண்ணா கல்லூரியில் மூட்டா தொடங்கி இருந்த நேரம். சங்கரலிங்கம் திமுக என்றாலும், கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை ஏற்பதில் அவருக்கு பெரும் சங்கடம் இருந்தது. அதை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருந்தார்.

நான் சிபிஐ எம்கட்சியின் ஆதரவாளனாக இருந்தாலும், தமுஎசவில் தீவிரமாக இயங்கிய காலம். சங்கரலிங்கத்தின் எதிர்ப்பை சமாளிக்க நான் பேராசிரியர்களுக்கு ஊர்த் துணையாக இருந்த காலம். பேராசிரியர்கள் வெளியூர்காரர்கள். 

அந்த காலத்தில் சிற்பம் என்ற கையெழுத்து ஏடு நடத்திக் கொண்டிருந்தோம். நான் அதன் ஆசிரியர். ஆசிரியர் குழுவில், அறிஞர் அண்ணா கல்லூரி சாந்த சில பேராசிரியர்கள் குறிப்பாக ஜெயராமன் சார், அனந்தகிருஷ்ணன் சார் போன்றோரெல்லாம் இருந்தனர். அன்று 1982 ஜூலை சிற்பம் ஏட்டின் ஆசிரியர் குழுக் கூட்டம். எனக்கு மேற்சொன்ன சார்களைப் பற்றி தொடக்கத்தில் ஒன்றும் தெரியாது. கூட்டத் தொடக்கத்தில் நான் அவர்களைப் பார்த்து, உங்களை எப்படி அழைக்க என்று கேட்டேன்.தோழர் என்றார் ஜெயராமன் சார்.அதுவே தோழர் என நான் கேட்ட முதல் விளியும் என்றும் பரவசம் தரும் விளியும் ஆகும்.

நன்றி தோழர் பேராசிரியர் ஜெயராமன். நன்றி தோழர்அருணாசலம்