Sunday, March 5, 2017

திரைக்காதலன் பாலுமகேந்திரா







இயக்குநர் பாலுமகேந்திரா அவர்களின் உதவியாளர் ரோஸ்லின் பிப்ரவரி 9 ஆம் தேதி காலையில் போன் செய்து, 13 ஆம் தேதி நம்ம சாரோட மூணாவது நினைவுநாள். வரணும் என்றார்.அவசியம் வருவேன் என்று பிப்ரவரி 13 காலை 11 மணிக்கு சென்னை ஏ.வி.எம் பிரிவியூ தியேட்டர் 1  சென்றேன். போகும் பொழுது இயக்குநர் பாலுமகேந்திரா  குறித்த டாக்குமெண்ட்ரி( இயக்கம் வசந்த்) ஓடிக் கொண்டிருந்தது.ஒன்றரை மணிநேரம் ஓடியது டாக்குமெண்ட்ரி.அருமையான முயற்சி.

பின்னர் பாலுமகேந்திரா குறித்த ஞாபகப்பதிவு. இதில் பாலுமகேந்திரா மகன் சங்கிபாலுமகேந்திரா,இயக்குநர் சீனுராமசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், நடிகர் அர்ச்சனா, ஓவியர் வீரசந்தனம், ஒளிப்பதிவாளர் மூர்த்தி, ஜூனியர் பாலையா, இயக்குநர் மீரா கதிரவன், நிழல் திருநாவுக்கரசு, இரா.தெ.முத்து,ரோஸ்லின் என் பங்கேற்றுப் பேசினோம்.

சங்கி தனக்கு  ”தன் அப்பா  நண்பர் ”   என்றார். சீனுராமசாமி ” தன் உதவியாளர்களை மிகுந்த தோழமையோடு நடத்தியவர் சார்’  என்று நெகிழ்ந்தார். ”தன் ஞானத்தகப்பன் பாலு சார்” என்று குறிப்பிட்டார் எஸ்.ராமகிருஷ்ணன்.நடிகை அர்ச்சனா பேசும் பொழுது “ சினிமாவில் பலரால் மறுக்கப்பட்ட சுதா என்கிற என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி எனக்கு வாழ்வும் முகமும் தந்தவர் சார் ” என்றார்.

  “பாலுவை மகத்தானக் கலைஞன் என்று கொண்டால் அவரின் பிறகுணங்கள் காணாமல் போகும் “ என்று விமர்சனங்களுக்கு பதில் தந்தார் வீர சந்தானம்.  ” பொருத்தமான பாத்திரங்களில் தன்னை நடிக்க வைத்தவர் பாலுமகேந்திரா” என்றார் ஜூனியர் பாலையா. “நானும் சாரின் மாணவர் “ என்று மகிழ்ந்தார் மீரா கதிரவன்.

 “பாலுமகேந்திராவிற்கும் எங்கள் தமுஎகச அமைப்பிற்கும் எனக்கும் முப்பதாண்டு நட்பு என்றும், எதையும் வெளிப்படையாக எங்களோடு விவாதித்து, உடன் நின்று செயற்படும் நல்ல நண்பர்; ஆசிரியர் என்றும், அவர் நடத்திய சினிமாப் பட்டறை கட்டிடத்தில் அவருக்கான படைப்புகளை அவர் புழங்கிய நூல்களைக் கொண்ட காப்பகம் ஒன்றை அமைக்க ஷங்கி உள்ளிட்டு அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்றும், அவர் காலத்திலேயே அழிந்து போன அவரின் சினிமாக்களை போல் அல்லாமல் , தமிழின் மிச்சமுள்ள சினிமா படைப்புகளை திரை ஆவணக் காப்பகம் உருவாக்கி அதில் வைத்து தமிழ்நாட்டு அரசாங்கம் பராமரிக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் “ என்றும் நான் ( இரா.தெ.முத்து ) பேசினேன்

1 comment:

  1. தமிழ்நாட்டு அரசாங்கம் பராமரிக்க நாம் குரல் கொடுக்க வேண்டும் “ என்றும் நான் ( இரா.தெ.முத்து ) பேசினேன் -- நன்று. அரசாங்கத்தை மட்டும் நம்பாமல், பேசுபவரே நடத்திக் காட்டுங்கள்.

    ReplyDelete