Monday, February 6, 2017

எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி...









அது 1982. நான் எம்.ஜி.ஆரின் பிடிப்பிலிருந்து விலகி, அரசியலை எதார்த்தத்துடன் உரசிப் பார்த்து இருந்த காலம். எட்டாவது படிக்கும் பொழுதே, திமுக கூட்டங்கள் கேட்கப் போவேன். திமுக என்றால் எனக்கு எம்.ஜி.ஆர் தான். பின் அவரைத் தொடர்ந்து அதிமுக போனேன்.எம்.ஜி.ஆரின் சினிமா பிம்பத்தை அரசியல் உண்மையோடும் வாழ்வொடும் உரசிப் பார்த்து, இந்தாள் வேஸ்ட் என்று முடிவுக் கட்டி, தேடலுடன் தனித்து இருந்த காலம். ஊர் குடும்பம் யாவும் வாத்தியார் பின்னாடி.நான் மட்டும் தனி. 

அந்த காலத்தில் செங்கொடி மீது தனி ஈர்ப்பு ஏற்பட்டது. இன்றும் அந்த ஈர்ப்பு குறையவில்லை.வாழ்வின் ஈர்ப்பாக பேருரு கொண்ட அன்பின் ஈர்ப்பாக செங்கொடி இருந்து கொண்டிருக்கிறது. ஊரின் சிபிஐ எம் கட்சியில் ஆதரவாளனாக சேர்த்துக் கொள்ளப்பட்டேன்.. அப்பொழுதுதான் ஊரில் திமுக பிரமுகரும் , பின்னாளில் திமுகவின் சட்டமன்ற மேலவை உறுப்பினர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இருந்த, திரு.சங்கரலிங்கம் அவர்களின் தலைமையில் இருந்த , அறிஞர் அண்ணா கல்லூரியில் மூட்டா தொடங்கி இருந்த நேரம். சங்கரலிங்கம் திமுக என்றாலும், கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தை ஏற்பதில் அவருக்கு பெரும் சங்கடம் இருந்தது. அதை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருந்தார்.

நான் சிபிஐ எம்கட்சியின் ஆதரவாளனாக இருந்தாலும், தமுஎசவில் தீவிரமாக இயங்கிய காலம். சங்கரலிங்கத்தின் எதிர்ப்பை சமாளிக்க நான் பேராசிரியர்களுக்கு ஊர்த் துணையாக இருந்த காலம். பேராசிரியர்கள் வெளியூர்காரர்கள். 

அந்த காலத்தில் சிற்பம் என்ற கையெழுத்து ஏடு நடத்திக் கொண்டிருந்தோம். நான் அதன் ஆசிரியர். ஆசிரியர் குழுவில், அறிஞர் அண்ணா கல்லூரி சாந்த சில பேராசிரியர்கள் குறிப்பாக ஜெயராமன் சார், அனந்தகிருஷ்ணன் சார் போன்றோரெல்லாம் இருந்தனர். அன்று 1982 ஜூலை சிற்பம் ஏட்டின் ஆசிரியர் குழுக் கூட்டம். எனக்கு மேற்சொன்ன சார்களைப் பற்றி தொடக்கத்தில் ஒன்றும் தெரியாது. கூட்டத் தொடக்கத்தில் நான் அவர்களைப் பார்த்து, உங்களை எப்படி அழைக்க என்று கேட்டேன்.தோழர் என்றார் ஜெயராமன் சார்.அதுவே தோழர் என நான் கேட்ட முதல் விளியும் என்றும் பரவசம் தரும் விளியும் ஆகும்.

நன்றி தோழர் பேராசிரியர் ஜெயராமன். நன்றி தோழர்அருணாசலம்

No comments:

Post a Comment