Tuesday, August 16, 2016

நா.முத்துக்குமார் : ஞாபகத்தில் எழும் புன்னகை







நா.முத்துக்குமார் என்ற இளைஞனை நான் 1998 ல் அறிந்தேன். அந்த இளைஞன்  அன்று , சு.ப.வீரபாண்டியன் அவர்களை ஆசிரியராகவும்    நா.அருணாசலம் அவர்களை பதிப்பாளராகவும் கொண்ட  , நந்தன் மாத இதழில்  செய்தியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்

98 செப்டம்பர்.11 பாரதி நினைவு நாளில் , சென்னை திருவல்லிக்கேணி பாரதி இல்லத்தில் , வடசென்னை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் , நாள் முழுவதும் கவிதைத் திருவிழாவிற்கு ஏற்பாடு செய்து, கவிதைத் திருவிழா நடந்து கொண்டிருந்தது. மதிய உணவு வேளையில் அர்ஜூன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் அடியாட்கள், பாரதி இல்லத்தில் நுழைந்து , இங்கு உங்களுக்கு என்ன வேலை என்று கேட்டுக்,   கவிஞர்களை தாக்கி ரவுடித்தனம் செய்த, அந்தச் சம்பவம் வரலாற்று நிகழ்வாக மாறிப்போனது.

 பாரதி இல்லத்தில் நடந்தது  அனைத்தையும் உடனிருந்து பார்த்து,  நந்தன் இதழிற்கு முத்துக்குமார்  கட்டுரை எழுதினார்.  வண்ணதாசன், பா.ஜெயப்பிரகாசம், கந்தர்வன், சிகரம் செந்தில்நாதன், இரா.தெ.முத்து என இவ்ர்களின் கருத்துகளையும் தொகுத்து, 98 அக்டோபர் நந்தன் இதழில் மூன்று பக்கம் எழுதி இருந்தார். இது நா.முத்துக்குமாருனூடான முதல் சந்திப்பு. அன்றிலிருந்து தொடர்ந்து அவரோடு பழகி வந்திருக்கிறேன். பார்த்த இடங்களில் எல்லாம் புன்னகையுடன் அவர் பேசிய காட்சி ஞாபகத்தில் எழுகிறது.

பாலுமகேந்திரா சார் அலுவலகத்தில் , பின்னர் அவரின் சொந்த அலுவலகத்தில் என்று பார்த்து பழகி இருக்கிறோம். நா.முத்துக்குமாருடன் பேசும் பொழுதெல்லாம்  , தான் எழுதி வெளி வந்தப் படங்களின் பாடல்கள் அல்லது அவர் எழுதிய பத்திரிகைத் தொடர்கள் குறித்து ஆர்வத்துடன் கேட்பார். சில முறை அதற்கு என்னால பதில் சொல்ல இயலாது போனதும் உண்டு.  2009 ல்  அவரைக் காண , சாலிகிராம் கருணாநிதி சாலையில் இருந்த அவரின் அலுவலகம் போயிருந்தேன்.

மனம் விட்டுப் பேசினார் அன்று. தனக்கு வரும் பட வாய்ப்புகள் பற்றிப் பேசினார். பாடல்களின் வெற்றி , வருமானம் , செலவு என ஆத்மார்த்தமாகப் பகிர்ந்து கொண்டார். தனக்கு தன் குடும்பத்திற்கு உணவு, வாடகை, மருத்துவம் உதவி என  மாதம்  ஒன்றரை லட்சம்  தேவைப்படுகிறது. வருவதெல்லாம் செலவாகிறது தோழர் என்று எந்தக் கிரீடமும் சுமக்காமல் இயல்பாகப் பேசினார் நா.மு.  பையன் ஆதவன் ; ஒரு வயதாச்சு என்று  போட்டோவைக் காட்டினார். தொடர்ந்து தேவை ஒட்டி மொபல் வழி பேசுவோம்.

கடந்த 2016 பிப்ரவரி 14 அன்று பிரசாத் ஸ்டூடியோ அரங்கில் , ரோஸ்லின் ஒருங்கிணைத்த , பாலுமகேந்திராவின் இரண்டாமாண்டு நினைவு நாளில் நடிகை அர்ச்சனா, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், பாமரன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ,நா.முத்துக்குமார் உடன் நானும் பங்கேற்றேன்.முதல் வரிசையில் நான், முத்துக்குமார், பாலுமகேந்திரா மனைவி அகிலா என அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

என் அருகில் முத்துகுமார் இருந்தார். தமுஎகச பற்றி ச.தமிழ்ச்செல்வன்,சு.வெங்கடேசன் பற்றி கேட்டார். புதிதாய் பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்றார். அந்த நிகழ்வில் பாலுமகேந்திரா குறித்து வெகு அற்புதமாகப் பேசினார்.

தலைமுறைகள் சினிமாவில் தனக்கு மகனாக நடிக்க தன்னை பாலுமகேந்திரா  கேட்டார் என்றார்.தலைமுறைகள் சாரின் வாழ்க்கை தான் என்று பேசினார். பாலுமகேந்திராவின் நினைவை அடுத்த ஆண்டு முதல் பெரிய விழாவாய் நடத்தப் போவதாகச் சொன்னார். பேசி மீண்டும் வந்து அருகில் அமர்ந்தார்.கிளம்புறேன் தோழர்; அலுவலகம் வாங்க பேசுவோம் என்று சொல்லிப் போனார் நா.முத்துக்குமார்.

சினிமாவில் பலரைத் தொடர்ந்து பார்க்கிறோம்.பேசுகிறோம்.பழகுகிறோம். ஆனாலும் நா.மு  நா.மு தான். மனிதர்களை மதிக்கத் தெரிந்த கவிஞன்.
இனி முத்துக்குமாரை பார்க்க இயலாதோ....
( நா.முத்துக்குமாருக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாநிலக்குழு சார்பான அஞ்சலி செலுத்துதல்.
2016 ஆகஸ்ட் 14 மாலை 4.30 மணி
படம்: ராமச்சந்தின் / தீக்கதிர் )

No comments:

Post a Comment