Tuesday, October 23, 2012

புல்லாங்குழல்களும் பூக்குடையும்



நான் வடசென்னையில் குடியேறி முப்பதாண்டுகள் ஆகி விட்டன. பல ஆண்டுகள் பட்டாளம்,ஓட்டேரி பகுதிகளில் திருப்பதிக் குடை பெரும் மக்கள் சூழ பயணிப்பதைப் பார்த்திருக்கிறேன்.வடசென்னையின் உழைப்பாளி மக்கள் பெறும் உற்சாகத்தோடு கலந்து கொள்ளும்  திருவிழா.விட்டல்ராவின் ஒரு நாவலில் இந்த குடை நிகழ்வு காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

 புரட்டாசி மாதம் ஒன்றாம் தேதி மண்ணடி சென்ன கேசவப் பெருமாள் கோவிலிலிருந்து மாலை புறப்படும் குடைகள் நான்கு நாள் நடைபயணத்தில் திருமலையின்  கருடசேவை உற்சவ  நிகழ்வில் போய் முடியும்.வெண்ணிற சிகப்பு நாமம் இடப்பட்டு மஞ்சள் ஆடை அணிந்த பக்தர்கள் ஆயிரக் கணக்கில் உடன் செல்வார்கள்.

திருக்குடைகள் ஒவ்வொன்றும் இரண்டு ஆள் உயரம் கொண்டது.அதன் மேல்பகுதி விட்டம் ஒரு மீட்டர் இருக்கும்.இதை சரியாமல் தாங்கிக் கொள்வதற்கு குறைந்தது ஐந்து ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.புரட்டாசி ஒன்றாம் தேதி என்றால் சுற்று வட்டார பேட்டைகளிலிருந்து பெண்கள்,குழந்தைகள்,ஆண்கள்,பெரியோர்கள் என சாலை எங்கும் இயல்பாகக் கூடி .,கைகளில் வழிபாட்டு தட்டு ஏந்தி வரப்போகும் பெருமாளின் குடைக்காக மணிக்கணக்கில் காத்து கிடக்கிறார்கள்.

லட்சோப லட்ச மக்கள் திரளும் குடைப்பயணம் இயல்பாகவே சந்தைக்கான இடத்தையும் கூடலிற்கான மகிழ்வையும் கொண்டிருக்கிறது.ஒவ்வொரு பகுதியிலும் சிறு மேடைகள் அமைத்து ,அழகுப்படுத்தி ,அதன் மேல் பெருமாளின் பல வகையான திருமேனிகள் அமைத்து, பூக்களால் கூடுதல் அழகுப்படுத்தலும் ,மேடை தோறும் திருமால் பெருமை பேசும் பாடல்கள் இசைப்பதும் ,நாதசுரம்,கிளாரிநெட்,புல்லாங்குழல்,மிருதங்கம்,தபேலாவின் சுரங்கள் வழிதலும்  , ஒலி,ஒளி அமைப்புகள் என்று ஆயிரக்கணக்கான கலைஞர்களுக்கு இந்த நான்கு நாட்களும் பணி கிடைத்து விடுகிறது.

திரளும் குழந்தைகளை மையப் படுத்தி  நெடுவழி எங்கும்  சைக்கிளில் ,தாங்கு கட்டைகளில் காற்றாடிகள் சுழன்றாடுகின்றன.
வண்ண வண்ண பலூன்கள் காற்றில் நெளிந்து குழைந்து வனப்பு காட்டுகின்றன.பேருந்துகளும் கனரக வாகனங்களும் நிறைந்த சாலைகளின் வழியெங்கும் புல்லாங்குழல்கள் மீட்டப்பட்டு வழிகிறது  நாதம்.சிறுகுழலில் ஊதப்படும் .சோப்பு குமிழிகள் பார்வைப் பரப்பை பரவசைபடுத்திக் கொண்டிருக்கிறது.காதெங்கும் சிறு சிறு ஒலிக் கூம்புகளின் ஓசை நிறைகிறது.

தள்ளு வண்டிகளில் கமர்கட்,தேங்காய் பர்பி,அவல் உருண்டை,பால் கடம்பு ,பனிக் குழைவுகள் என வித விதமாய்  ருசிப்படுத்தும் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறன.பூவியாபாரம் மணத்து கிடக்கிறது.பூசைப் பொருட்கள் பைகளில் போட்டு விற்பனை ஆகிறது.

ஆங்காங்கு தொண்ணைகளில் கதம்ப சோறும்,தண்ணீரும் தரப்படுகிறது. பாதை எங்கும் திருக்குடையை சொல்லிக் கொண்டிருக்கும் சுவரொட்டிகள்,டிஜிட்டல் படங்கள்,செலவை ஈடுகட்டும் உபயதாரர்களின் விளம்பரங்கள் என பெரும் சந்தை இதில் புழங்கிக் கொண்டிருக்கிறது.


சாலைத் தடுப்புச் சுவரின் மீது ஒரு பையனின் கைதாங்கலில் ஏறி நின்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.கற்பூரம் எரிந்து கருமையான புகை சூழ , உதிரிப் பூக்கள் திருக்குடையின் மீது வீழ வீழ பதினோறு குடைகள் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக  மெதுவாக கூட்டத்தில் நகர்ந்து வந்து கொண்டிருந்தன.குடையை ஏந்தி வந்தவர்களின் காலருகே பெண்கள் தேங்காயை உடைத்து, சூடத் தட்டை தூக்கி குடைக்கு ஆரத்திக் காட்டினர். பெரும்பாலும் எளிய பிரிவினராகவே பெண்கள் இருந்தனர்.அவர்களின் கழுத்தில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பெருவழக்காய் இருந்த  நாணக்குழா என்கிற தாலியை கோர்த்திருக்கும் சரடு பெரும்பாலும் காணப்படவில்லை.முகப்பு வைத்த ஆரம் அல்லது முருக்கு சரடு அணிந்து காணப்பட்டனர்.

குடையின் மீது விழுந்த உதிரிப் பூக்களை அப்படியே தூக்கிச் செல்லாமல் ,மென்பாரம் அழுத்தும் போதெல்லாம் குடையை  கவிழ்க்க கவிழ்க்க சிதறும் பூ வேண்டி பக்தர்கள் முண்டியடித்து எடுப்பதில்,பூக்கள் இதழ் இதழாக ஆகி மகரந்த துகள் போல காற்றில் பரவி அந்த பகுதி மணத்துக் கொண்டிருந்தது.மற்றபடி அவர்களுக்கு பிரசாதமெல்லாம் தரப்படுவதில்லை;அவ்வளவு கூட்டத்திற்கு அது சாத்தியமுமில்லை.

குடைகள் தம்மை கடக்கும் போது கோவிந்தா கோவிந்தா என மக்கள் மருவிக் கொண்டிருந்தனர்.குடைகளுக்கு பின்னால் பத்து சிறு வண்டிகளில் பெருமாளின் தசாவதார காட்சிகள் எடுத்துச் செல்லப்பட்டன.அந்த வண்டிகளில் உபயம் இந்து தர்ம ட்ரஸ்ட் என்று எழுதப்பட்டிருந்தது.இது இந்துத்வாவின் ஒரு துணை அமைப்பு.இதன் தலைவர் ,செயலாளர் வேதாந்தம் மற்றும் தினமலர் கோபால்ஜி.இருவரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்.

அயோத்தி மசூதி தகர்ப்பிற்கு பிறகு முளைத்த அமைப்பு இது.அதன் முன்பு குடைகள் மட்டுமே பக்தர்களுக்கு காட்சி அளித்துக் கொண்டு,அவர்களின் வறவேற்பை ஏற்றுக் கொண்டு போன திருக்குடைகளின் பின்னால் இந்தக் கூட்டம் வருவது ஆபத்தானது.மெய்யான் ஆன்மீகர்களும் நல்லிணக்கம் விரும்பும் ஆளுமைகளும் இந்த கூட்டத்தை தவிர்த்து திருக்குடையின் திருப்பயணம் நடைபெற சிந்திக்க வேண்டும்.ஜனநாயக விரும்பிகள் சிந்திக்காத இடங்களின் இடைவெளிகளில் புகுந்து விடுகின்ற இந்துத்வா சக்தியை தவிர்ப்பது சகிப்பும் அன்பும் தவழும் ஆன்மீகத்திற்கு அழகு.


குடைகள் தம்மை கடந்ததும் கூட்டமும் கலைய ஆரம்பித்தது.கலைந்த கூட்டத்தின் குழந்தைகளின் தலையில் பொன்னிறத்திலான விசிறி மடிப்பு குல்லாக்கள் ஒளிர்ந்தன.புல்லாங்குழல்களை,ஒலிக் கூம்புகளை இசைத்தவாறு ராஜா முத்தையா சாலை,டிமலெஸ் சாலை வழியாக கூட்டம் வெளியேறிக் கொண்டிருந்தது
(நன்றி:தீக்கதிர் 2012 அக்டோபர் 23)

2 comments:

  1. வாத்யாரே... நானும் வடசென்னை தான்...

    ReplyDelete
  2. அப்படியா?மகிழ்ச்சி பிரபா

    ReplyDelete