Thursday, January 5, 2012

அன்பின் வண்ணம்



  
காட்டுப்  பருத்தி கொய்து நூலாக்கி
வானவில்லின் பிடித்த வண்ணங்களைத் தொட்டு
 குழைத்துப் பூசி மெருகேற்றி
கண்ணுறக்கம் தொலைத்து கவனமோடு
நெய்த துணியில் எழிற்சித்திரம் தீட்டி
ஆக்கிய ஆடை  அணிவித்து
தேக்கம் பூவை கருக்கிச் செய்த
அஞ்சனம் எடுத்து புருவம் வனைந்து
முல்லைப்  பூக்களில் உருக்கிய நெய்யில்
தலைவாரி பின்னலிட்டு
திறந்திருந்த  காதுகளில்
 கவிதையோடு  அன்பை ஓதி
கண் திறந்து உயிர் பெற்ற மரப்பாச்சி
உடனிருந்து எப்போதும்
 விளையாடுமென அன்பைப் பகிர்ந்து
கவிதைகளாக்கி  களிப்புற்றிருந்த
 ஒர் இளவேனிற்காலத்தின்
நண்பகலொன்றில் 
இனிப்போடு கடுந்துவர்ப்பு கலந்து
உண்ணச் சொல்லி
கொடுஞ் சொற்களால்  பகடி செய்து
நெஞ்சில்  நெருஞ்சி விதைத்து
அன்பென உணர்ந்ததின்
வண்ணமும்  சுவையும் மாயையோ என
மருவிய கணமொன்றில்
நடுவீதி நிறுத்தி நீங்கிச் சென்றது என்னை. 
(2012 சனவரி -பூவரசி அரையாண்டு இதழில் வெளிவந்தது)

2 comments:

  1. பூவரசியில் படித்தேன். அருமை முத்து சார்..:)

    ReplyDelete
  2. மகிழ்ச்சி தேனம்மை;நன்றி

    ReplyDelete