Monday, October 3, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-6


அன்பு மனதின் கொதிக்கும் சுவடி




பாரதியின் புதிய ஆத்திசூடி,11ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஒளவையின் ஆத்திசூடி,கொன்றை வேந்தன் பிரதியை விட
பொருளில்,சொற்சேர்க்கையில் தனித்துவமிக்கது;ஆளுமைத்திறன்
வாய்ந்தது.பழைய ஆத்திசூடி இரண்டு,இரண்டு சொற்களாகவும் கொன்றைவேந்தன் நான்கு நான்கு சொற்களாகவும் அமைக்கப்பட்டிருக்கும்
ஒளவையின்  ஆத்திசூடி நிலவுடைமை நோக்கு சிந்தனை கொண்ட,ஆளும் வர்க்கத்திற்கு அனுசரணையான,பெண் குறித்த பழமைவாத நோக்கு கொண்ட,தனிமனித ஆளுமை சுதந்திரத்திற்கு எதிரான எழுத்து
.
ஆறுவது சினம்,சுளிக்க சொல்லேல்,தையல்சொற் கேளேல்,போர்த்தொழில் புரியேல்,முனைமுகத்து நில்லேல்,வல்லமை பேசேல்,ஊருடன் கூடிவாழ் இப்படி  108 வரிகளாக பாடி இருப்பார்.கொன்றை வேந்தனும் உண்டி சுருங்குதல் பெண்டிற்க்கு அழகு,பேதமை யென்பது மாதர்க் கணிகலம்,ஒதார்க்கில்லை உணர்வோடு ஒழுக்கம் என நீள நீளமாய் பேசிப் பெண்களை ,சமூக வளர்ச்சியை நுகத்தடியில் கொண்டு போய் பூட்டும் வேலையாகும்

தொழிற்மயமாதல்,புதிய  தொழிலாளர் திறள் உருவாகும்  சூழல்,சனநாயக சிந்தனை உருவாகிய 19 ஆம் நூற்றாண்டின் இறுதி தொட்டு 20 ஆம் நூற்றாண்டின் இரு தசாப்தம் காலப் பின்னணி கொண்ட பாரதியின் புதிய ஆத்திசூடி இயல்பாகவே புதிய நோக்கில்,புதிய தொனியில் பாடப்பட்டன என்றாலும்,பாரதி என்கிற தலைகீழ் மாற்றம் கோரிய விடுதலைவீரரின் நோக்கு அதிரடியானது.;விடுதலையை பெற எழுத்தை ஓர் ஆயுதமாக பயன் படுத்தும் பார்வை கொண்டது.

கேட்டிலும்  துணிந்து நில்,சீறுவோருக்கு சீறு,தாழ்ந்து நடவேல்,தையலை உயற்வு செய்,நேர்பட பேசு,பாட்டினில் அன்பு செய்,போர்த் தொழில் பழகு ,முனையிலே முகத்து நில் என 229 எழுத்துகளுக்கு 130 எழுத்துகளின் முதல் எழுத்தை கொண்டு வெவ்வேறு பொருளில் பாடியவர் பாரதி.ஒளவையின் பல பார்வைகளை மறுத்து ,ஜனநாயக யுகத்திற்கு தேவையான மாற்றங்களை தன் எழுத்தில் நேர்ந்தவர்.

இயல்பான அன்பு  நோக்கு கொண்ட பாரதி எல்லா உயிரும் நேசிக்கத் தக்கன என்ற சமநோக்கு பார்வையும்,அனைத்தும் ப்ராசக்தி மயம் என்கிற ஆன்மீக நோக்கும் கொண்டவரால் ஒரு கழுதைக் குட்டியின் மீதும் நேசம் கொள்ள முடிந்தது.

”அச்சமில்லை” பாட்டில் இப்படி ஒரு வரி வந்து அச்சமற்ற மனநிலையையும்,அன்பு மனதையும் காட்டி நிற்கும். “நச்சை வாயிலே நண்ப ரூட்டும் போதிலும் அச்சமில்லை,அச்சமில்லை அச்சமென்ப தில்லையே”
 “ பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சே”என்ற பாட்டில்
“தின்ன வரும்புலி  தன்னையும் அன்போடு
சிந்தையிற்  போற்றிடுவாய் நன்னெஞ்சே”

இப்படியான நேசம் கொண்ட கவி மனசு புதிய ஆத்திசூடியில் கொதிக்கிறது. இதற்கு இரண்டு காரணங்கள்:ஒன்று அன்பு கொண்ட மனம் அடிமைத்தனத்திற்கு எதிரானது;கட்டுப்படாதது;கட்டுப்படுத்தாதது.இரண்டு காலபரப்பில் தமிழை முன்னிலை படுத்துவது. முன்னோர் சொற்களை சரியாக மீள்பயன்பாடு செய்வதும்,தேவையின் பொருட்டு மீறி ,மீறலில் இருந்து புதிய சொற்களை ,புதிய பார்வைகளை கண்டடைவதும் ஆகும்.

எட்டபுர மன்னர் வெங்கடேசு ரெட்டப்ப பூபதி  பார்வைக்கு கொடுத்தனுப்பிய ஓலைதூக்கில் பாரதி சொல்லி போகிறான்:
“தமிழ்மொழியைப் புகழி லேற்றும்
கவியரசர்  தமிழ்நாட்டுக் கில்லையெனும்
வசையென்னாற் கழிந்ததன்றே”

இந்த தன்னம்பிக்கை,மொழிஆளுமை,தொடர்ந்து  வரும் அறிவியல் மரபை புரிந்து கொண்ட நுட்பம் காரணமாக புதிய ஆத்திசூடி உள்ளிட்ட புதிய புதிய படைப்புகளை எழுத பாரதியைத் தூண்டியது.
(அக்டோபர் 03 தீக்கதிர் இலக்கியச்சோலையில் பிரசுரமானது)

2 comments:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மகிழ்ச்சி ரத்னவேல் அய்யா;வாசியுங்கள் ;கருத்து பகிருங்கள்

    ReplyDelete