Thursday, September 29, 2011


         இழிந்த எம் வாழ்வின் மேல்
         ஒழுகும் பேனாக்கள்
            -இராதெ.முத்து
         அரசிதழின் ஆங்கிலமும்
          அரசாளும் இந்தியும்
          அன்னைத் தமிழை
          அரசாளத் த்டுத்துக் கொண்டிருக்கும்
          கூட்டாட்சி அதிகாரத்தின் உள்ளறைகளில்
          வசதியாய் உட்கார்ந்து கொண்டு
          அதிகாரத்தின் ருசியை சுவைத்துக் கொண்டு
    
          வாரன் ஆண்டர்சன் கொன்ற பிணங்களைக் கடந்தபடி
          வெண்சாமரம் வீசும் வீண்ர்களை விதந்தோதியபடி
         தெற்க்குவாசல் திறக்காத சிதம்பர ரகசியத்தை சொல்லாதபடி
         திறக்கப்பட்ட உத்தப்புரப் பாதைகளில்
         திறக்கப்படாத சமூக நீதியை உணராதபடி
         இழிந்த எம் வாழ்வின் மேல்
         மலத்தையும் அதிகாரத்தையும் வீசும்
        மனுவதிகார மையத்தை ஆரத்தழுவியபடி....
        கதைக்கிறீர்கள்;எழுதுகிறீர்கள்.

ரிக்டர் 7

உறக்கத்தை விரட்டி விரட்டி
பாப்லோ நெருதா கவிதையை வாசித்த வினாடியில்
வீட்டு விதானத்திலிருந்து இறங்கிய
குழந்தையற்ற தூளி
இளங்காற்றில் முன்னும் பின்னும்
மிதந்தாடுவதைப் போல
உடல் அசைந்து கொடுத்த
மெல்லிய மயக்க உணர்வுக் கணத்தில்
மேசை மீதான நீர்க்குவளை தடதடத்ததும்
அஞ்சனம் படர்ந்த மேக வெளியில்
அலறியக் காக்கைக் கூட்டத்தின் இறக்கைச் சடசடப்பும்
அசைந்தாடிய பெண்டூலம் நின்று காட்டிய
சுவர்க்கடிகாரத்தின் அதிகாலை ஒரு மணியில்
உணர்ந்தேன் நிலநடுக்கம்
ஒளிர்ந்த தொலைக்காட்சிப் பெட்டியும்
ரிக்டர் அளவு 7 என செய்தி காட்டியது.

அன்பின் உரையாடல்


சின்னச் சின்ன
முரண்களின் ஊடாகவும்
துளிர்விடும்

கோபத்தீயிலும்
மனச் சருகுகள்
மலரும்

உயிர் நீர்
அன்பின் உரையாடல்

சொல்லற்ற மெளனம்
சூறைக்காற்றின்
பேரோலம்

மயிலிறகொத்த
அன்பின் வருடலில்
வண்ணத் தோகை
விரித்து சிலிர்க்கும் மனம்.

(நன்றி:தும்பைப் பூக்கள் உதிர்ந்த வழித்தடத்தில்
த.மு.எ.க.ச தென்சென்னை)

நான் பனை


யாரின்
கனிவுக்காகவும்
காத்திருப்பதில்லை
நான்

 கூடைகளுக்காகவும்
துயில் பாய்களுக்காகவும்
என் துகிலை அரிந்து கொள்ளலாம்
நீங்கள்

குருத்தோலை நாட்களிலும்
புஞ்சை காட்டு வேலைக் காலங்களிலும்
 குறுத்தரிந்து
சிலுவைகளாக
கஞ்சிப் பட்டைகளாக
உருவாக்கிக் கொள்ளுங்கள்

சுபகாரிய தோரணங்களில்
பெரு விழாக்களில்
என் குலை அரிந்து
ஓலை அரிந்து உங்கள் வாழ்விடங்களை
அலங்கரித்துக் கொள்ளுங்கள்

காட்டுப் பயிர்களையும்
வீட்டுக் காவல்களையும்
கருக்கு மட்டைகளால்
காத்துக் கொள்ளுங்கள்

உங்கள் போதைக்கு
என் பதநீரை கள்ளாக்கிக்
கொள்ளுங்கள்

சூடு தணிக்க
என்
நுங்கை அருந்துங்கள்

 பிள்ளைகள்
சிறுதேர் உருட்டி விளையாட
நுங்கு நீக்கிய
என் கூந்தல்களை
சக்கரமாக்கிக் கொள்ளுங்கள்

உங்கள் சாதிச் சண்டைகளில்
என் கருக்கு மட்டைகளை
 ஆயுதமாக்கிக் கொள்வீர்கள்

ஆனாலும்
நீங்கள் என் வேர்களில்
நீர் ஊற்ற
பிரயாசைப் பட வேண்டாம்


 மழை பொய்த்தாலும்
சூரியன் காய்ந்தாலும் அன்றி
 உங்கள் மனம் 
காய்ந்தாலும்
காயாமல் கனிவேன்
நான் பனை.

Tuesday, September 27, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி -5


அரசியல் பண்பாட்டுப்  போராளி



இருபத்தோராம்  நூற்றாண்டின் சுயநலமிக்க உலக மயமாக்கல் சூழலில்  வாழ்கிறவர்கள் , கொடுமையான இருபதாம் நூற்றாண்டின்  முதல் இருபது ஆண்டுகள் வாழ்ந்து மறைந்து போன பாரதியைப் பற்றி எவ்விதம் ஞாபகம் கொள்வார்கள்?
வாழத் தெரியாதவன்;ஊரோடு ஒட்டிப் போகாதவன்;கிறுக்கன்;குடும்பத்தை நட்டாற்றில் தவிக்க விட்டவன் ;அரசாங்கத்தோடு மோதி அழிந்து போனவன் இப்படித்தான் நினைவு கொள்ள வாய்ப்பு அதிகம்.
இந்த நவீன காலத்தில் ஒரு அமைச்சர் ,பாராளுமன்ற உறுப்பினர்,முதல்வர் இப்படியான ஆளும் வர்க்க தொடர்பு வட்டத்திற்குள் ஒருவர் செல்ல வாய்ப்பு கிடைக்கும் போது,இதையெல்லாம் மக்கள் நலனுக்காக பயன் படுத்த வேண்டும் என்ற நோக்கை விட ,தன் நலன்,குடும்பநலன் போன்றவற்றை  முன்னிட்டே காய் நகர்த்தும் நோக்கு அதிகமிருக்கும்
முதலாளித்துவ  அரசுகள்  எப்போதும் மக்கள் நலனுக்கு குறுக்கே தான் நிற்கும் என்ற புரிதலோடு அரசை எதிர்த்தப் போராட்டத்தில் முன் நிற்க வேண்டும் என்ற புரிதல் கொஞ்ச பேருக்கே இருக்க பெரும்பாலோர் அமைச்சரின் அக்காள்,முதல்வரின் மகள் ,அல்லது முதல்வரின் தோழி தயவுக்காக நயந்து நிற்பபதோடு ,ஆளும் வர்க்கத்தோடு அண்டி நிற்பதையும் நாம் பார்க்கலாம்
எட்டயபுர  சமஸ்தான அதிபரோடு கிடைத்த நட்பை சரச,சிலேடை கவிதைகள் பாடி மகிழ்வித்து சுகவாழ்வு வாழும் சூழலுக்காக பயன் படுத்தாமல்  விட்டொழித்து,தன்நலன், குடும்ப நலன் பாராது தேசச் சூழலை முன் நிறுத்தி தேச விடுதலைக்காக இயங்கிய ஒர் அரசியல் பன்பாட்டுப் , போராளி பாரதி.
கலாநிதி சிவத்தம்பி எழுதுகிறார்:பாரதி முழு தமிழிலக்கியப் பாய்ச்சலிலும் குறிப்பாக  நவீன இலக்கியத்தில் முதன்மைப் படுத்தப் படுவது ,அவன் தமிழிலக்கிய ஓட்டத்தில் ஏற்படுத்திய மடை திருப்பமாகும்.அந்த மடை திருப்பம் காரணமாகவே இன்று நாம் சமூக-அரசியல் இயக்கங்களின் பரவலுக்கு இலக்கியத்தை இன்றியமையாத கருவியாக-சாதனமாக-ஊடகமாக கொள்கிறோம்.தமிழிலக்கியப் பரப்பில் பாரதி நிகழ்த்திய சாதனை சமூக-அரசியல் விமர்சனத்தை தமிழ் இலக்கியத்தின் பணி ஆக்கியமையாகும்.(கி.பார்த்திபராஜாவின் பாரதி நூலுக்கு முன்னுரை)
மேற்கண்ட இந்த அரசியல்,பன்பாட்டுப் பார்வைதான் திலகர் தலைமையிலான தீவிரவாத காங்கிரஸின் தமிழக பிரிவின் முன்னணித் தலைவரான பாரதியை ,தான் சார்ந்த குரு திலகரின் கருத்துகளை விடுதலைக் கனலை தமிழ் மண்னில் பரப்ப கவிதையை ஓர் ஆயுதமாக வார்க்கச் செய்தது.
பாரதி ஆழ்ந்த ஞானத்தோடு,தொலைதூரப் பார்வையோடு தன்னல மறுப்போடு எளிய மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் பலபல இலக்கிய முயற்சிகளை கவிதை,கதை,கட்டுரை,கார்டூன்,நாடகம்,காவியம்,மொழிபெயர்ப்பு,இசைப்பாடல்,வாசகர் கடிதம் முன்னெடுக்கிறான்.
இவனின் வசனக்கவிதை தொகுப்பில் ”விடுதலை” எனும் பெயரில் இரண்டு காட்சிகளிலான நாடகம் இருக்கிறது.இந்திரன்,வாயு,அக்னி,சூரியன்,சில முனிவர்கள் என பாத்திரங்கள் வருகின்றன.
இந்திரன்:உமக்கு நன்று தோழரே
மற்றவர்:தோழா உனக்கு நன்று
இந்திரன்:பிரம்மதேவன்  நமக்கோர் பணியிட்டான்
மற்றோர்:யாங்ஙனம்?
இந்திரன்:மண்ணுலகத்து மானுடன் தன்னைக்
கட்டிய தளையெல்லாம்  சிதறுக என்று
அக்னி:வாழ்க  தந்தை;மானுடர் வாழ்க
மற்றோர்:தந்தை  வாழ்க தனி முதல் வாழ்க
உண்மை வாழ்க  உலக மோங்குக
தீது கெடுக,திறமை  வளர்க
என்று கவிதை  வளர்ந்து போகப் போக சூடேறி இந்திரன் சொல்லுகிறான்:
மண்ணுலகத்து மக்களே,நீவிர்
.....................................................
செயல் பல செய்வீர்,செய்கையில் இளைப்பீர்
.........................................................................................
தோழரென் றெம்மை நித்தமும் சார்ந்தீர்
நும்மையே  அவுணர் நோவுறச் செய்தார்
ஆஅ அ மறவுக் குறும்பா,அரக்கா
என விளித்து ஆங்கிலேய ஆட்சியை 
அரக்கரே மனித அறிவெனும் கோயிலை
விட்டுநீ  ரொழிந்தால் மேவிடும் பொன்னுலகம்

 இதில்  பாரதி கையாண்டிருக்கும்  மொழி எளிமையானது;வலிமையானது.இன்று  நாம் நமது படைப்புகளில்  எளிமையை கொண்டுவர முயன்று  நம்மை அறியாமல் புலமை  மொழியில் விழுந்து விட,நூறு ஆண்டுகளுக்கு முன்பே தான் சார்ந்த இயக்கத்தின் ,தலைவரின்  கருத்தை புராணத்தை மறுபயன்பாடு செய்து   கச்சிதமாக கலையில் இலக்கியத்தில் பயன் படுத்தி இருக்கிறான் பாரதி.
இந்திரன்  மூலம் பாரதி சொல்லும் செய்தி திலகரின் செய்திதான்.தோழர்  என்ற சொல்லை நவீன காலத்தின் பரப்பில் முன் வைக்கிறான்.நம்மை அவுணர் என்கிற அன்னியர்(பாரதியின் புதுச் சொல்) நோவுறச் செய்கிறார் எனச் சொல்லி ,நமது கல்வியை வெறும் ஆங்கில மொழி கற்கும் கல்வியாக ஆங்கிலேயர் மாற்றியதை பாரதி விமர்ச்சிக்கிறான் ;இதன் அடையாளம் தான் மனித அறிவெனும் கோயிலை விட்டு அன்னியர் ஒழிந்தால் பொன்னுலகம் வரும் என்கிற வரிகள்
குரு திலகரின் ,அவன் நேசித்த தந்தை திலகரின் கொள்கை தமிழ் மண்னில் பரவ,இதனூடாக  விடுதலை ஒளி பரவிட அரசியற்  கருத்துகளை இலக்கியத்தில்  பதிந்த முதல்வன்;முன்னத்தி  ஏர் நம் பாரதி.விடுதலை வேள்வியினூடாக தன் வாழ்க்கையை எரிதழலில் இடுவதற்கு அவன் அஞ்சவில்லை.இவ்வாறு அஞ்சுவோர் இந்த பணிக்கு தேவை இல்லை என்கிறான்.பலர் நினைப்பது போல் அவன் கிறுக்கன் அல்ல;விடுதலையை முன்னெடுத்த சித்தன்;தலைவன்.(செப்டம்பர் 25 தீக்கதிர் இலக்கியச் சோலையில் வெளியானது)

Wednesday, September 21, 2011

பேசாப் பொருளை பேசிய பாரதி-4



சமூக ஊழியர்களும்  காதலும்


பாரதி மறைவிற்க்கு  பிறகு பாரதியின் ஆளுமைகள்,குணங்கள்,அரசியல் செயற்பாடுகள் குறித்து அவரது நண்பர்கள் எழுதி,பாரதியின் தம்பி விசுவநாதன் பாரதி பிரசுராலயம் என்ற பெயரில்1928 ல் வெளியிட்டிருக்கும் பாரதியார் சரித்திரம் என்ற ஒர் அருமையான சிறு நூலை விருத்தாசலம் தோழர் ஆர்.ஜீவானந்தம் படிக்கத் தந்தார்.இதிலிருந்து சில விசயங்களை போன வாரம் எழுதினோம்


.
தொடரினைப் படித்து நூலாகக் கொண்டு வரலாமென ஜீவி,மதுரை சாந்தாராம்,சென்னை ஜேசுதாஸ்,நாமக்கல் நம்புலட்சுமி கேட்டுக் கொண்டுள்ளனர்.தொடர் முடிந்ததும் இது குறித்து யோசிக்கலாம்.
போன வாரம்  பத்தினிப்பெண் என்ற சொல்லை பாரதி மோனைக்காக இட்டுள்ளார்  என நாம் எழுதியிருந்த கருத்தை  நாமக்கல் நம்புலட்சுமி மறுத்து,மோனைக்காக  மட்டுமல்ல;அந்த காலத்தில் மனைவியை குறிக்கும் சொல் அது என்றும் கற்பு என்ற நோக்கில் அவர் சொல்லவில்லை ஆணுக்கு கற்பை முன் மொழிந்தவர் ,ஆணிய் நோக்கில் பத்தினியை கையாண்டிருக்க மாட்டார் எனவும் பேசியது சரியே.பத்தினி சொல்லாடலை முன் வைத்த கொற்றவை இதை வாசிக்க நேர்ந்தால் சிந்திகட்டும்.
.
 விவேகபானு,ஹிந்து,வருணசிந்தாமணி,சுதேசமித்திரன்,இந்தியா என பல ஏடுகளில் பாரதி எழுத்துகள் வந்துள்ளன.இவரின் புதிய கலை முயற்சிகள் சுப்பிரமணியம் சிவாவின் ஞானபானு மாத இதழில் வெளி வ்ந்திருக்கின்றன.பெண்களுக்கான முன்னேற்றத்திற்காக தொடங்கப்பட்ட சக்ரவர்த்தினி இதழின் ஆசிரியரும் பாரதிதான்.
1910 ல் பாரதியின்  இறுக்கமான மரபுக்கவிதை ”கனவு” தென் மாவட்டத்தில் பிரபலமாக இருந்திருக்கிறது.இது புதுச்சேரியில் அச்சாகி உள்ளது.ஆக்ஷ் கொலை வழக்கில் சந்தேகப்பட்டவர்கள் மத்தியில் இந்த கவிதை நூல் அன்று அதிக பிரபலம்.


இது ஒரு வகையில்  பாரதியின் தன் வரலாற்று நூலும் கூட.இதில் அவரின் கல்வி,குடும்பசூழல்,அன்றைய ஆங்கிலேய கல்வி முறை,அரசியல் சூழல்,திருமணம்,திருமணத்திற்க்கு முன்பான அவரின் காதல் என பாடிச் செல்கிறார்.
392 வரிகளிலான  இந்த கடுமையான செய்யுளில் 8 பகுதிகள் ஆங்கிலேய அரசால்  ஆட்சேபனை செய்யப்பட்டு ,முழு  நூலும் தடை செய்யப்பட்டிருக்கிறது


.இதில் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் ,சமூக மாறுதலை உருவாக்கக் கூடிய போராளிகள் மனதில் எழும் காதல் உணர்வை எவ்விதம் எதிர் 
கொள்ள வேண்டுமென  பாரதி சொல்லும் இடம் முக்கியமானது.
பாரதியின் தடை செய்யப்பட்ட கவிதைகளுள் ஒன்று  பயனற்ற ஆங்கிலேய கல்வியை சொல்லி விசனப்படுகிறது
.”மந்தற்               
பாற்பொருள்  போக்கி பயின்றதா
 மடமைக்  கல்வியில் மண்ணும் பயனில்லை
 எந்த மார்க்கமும்  தோற்றில தென்செய்கேன்
 ஏன்பி  றந்தன னித்துயர் நாட்டிலே”

இதற்கான ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டு எந்த பாராவில் வருகிறது என குறிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது இதே நூலில் காதல் பற்றி அவர் சொல்லும் இடம் இது:
“காத லென்பது  மோர்வயி னிற்கு மேற்
கடலின் வந்த கடுவினை யொக்குமால்
ஏதமின்றி  யிருபுடைத் தாமெனில்
இன்ன மிர்து மிணைசொல லாகுமோ?
ஏதொ ணாத பெருந்தவம் கூடினோர்
உம்பர் வாழ்வினை யெள்ளிடும் வாழ்வினோர்
மாத ரார்மிசைத் தாமுறுங் காதலை
மற்ற வர்தரப்  பெற்றிடு மாந்தரே”

குறிப்பிட்ட வயதிற்க்கு மேல் கடற்புயலைப்  போல துன்பம் தரும்
காதலை,அமிர்தத்திற்கு இணையென சொல்லலாகுமா?இதெல்லாம் சின்னங்சிறுசுகளின் ஒரு காலகட்ட ஈர்ப்பு மட்டுமே.
.தேச ,சமூக வாழ்வில் புரட்சிகர மாற்றத்தை உருவாக்கும் வீரர்கள் ,ஏட்டில் எழுத இயலாத தியாகத்தை செய்யும் தீரர்கள்,விண்ணுலக வாழ்வை மறுத்து மண்ணில் நல்ல வண்ணம் வாழப் போராடும் போராளிகள் பெண் மீதான காதல் உணர்வுக்கு மாற்றாக, தம் மீது படரும் நேசத்திற்கு ஈடாக மற்றவர்கள் தரும் ,உணர்த்தும் அன்பை பெற்றிடுங்கள் எனச் சொல்லும் இடம் முக்கியத்துவம் பெறுகிறது.இங்கு மற்றவர்கள் என்பது குழந்தைகளாக,நண்பர்களாக்,தோழர்களாக,இயற்கை சூழலாக,நலம் நாடிகளாக என அடையாளபடுத்தலாம்


(செப்டம்பர் 19 தீக்கதிர் இலக்கியச் சோலையில் பிரசுரமானது)

பேசாப் பொருளை பேசிய பாரதி-3



இந்து தேசியம்+பத்தினிப் பெண்=பாரதி


எழுத்தாளர்கள் தி.க.சி ,சிகரம் செந்தில்நாதன் ,ச.தமிழ்செல்வன், எஸ்.வி.வேணுகோபாலன் ஆகியோர் தொடர் குறித்து வெளிப்படுத்திய   தங்கள் மகிழ்ச்சியை , பாரதிக்கான மரியாதையாக  எடுத்துக் கொள்ளலாம். வேலூர் காவேரிப்பாக்கம் ஆசிரியர் உமாமகேசுவரி போன வாரத் தொடரை அவர் வகுப்பு மாணவர்களிடத்தில் அறிமுகப்படுத்தி பேசி இருக்கிறார் என்கிற செய்தி மீண்டும் மீண்டும் பாரதி பயிலப்படுகிறான் என்ற மகிழ்வைத் தருகிறது.

இந்த செப்டம்பர் 11 பாரதி திருவல்லிக்கேணியில்  எரியூட்டப்பட்டு வங்கக் கடலில் கரைக்கப்பட்டு  தொண்ணூரு ஆண்டுகள்ஆகிறது. 1980 வரையிலும் 370 தலைப்புகளில் ,150 எழுத்தாளர்கள் ,162 பதிப்பகங்கள் என பாரதி குறித்த ஆய்வு நூல்கள் வெளிவந்திருகின்றன.இன்று நடக்கும் விவாதங்கள் பாரதி ம்காகவியா?அல்லவா?என்பதல்ல.இந்து தேசியத்தை வழி மொழிந்து பாடினான்.காணிநிலம் கேட்டவன் அங்கே ஒரு பத்தினி பெண்னைத்தானே கேட்டுப் பாடினான் என்கிற ரீதியில் பாரதி விவாதிக்கப்படுகிறான்.

இந்து கடவுள்களை  மட்டுமா பாடி இருக்கிறார்.அல்லா.ஏசு  பற்றியும் பாடி இருக்கிறார்.1918 ல் பத்தாண்டு கால புதுச்சேரி தலைமறைவு வாழ்வைத் துறந்து சென்னைக்கு வரும் வழியில் ஆங்கிலேய உளவாளிகளால் மோப்பம் பிடித்து  கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களில் விடுவிக்கப்பட்ட பாரதி அன்றைய தொழிலாளர் தலைவர் வி.சர்க்கரை செட்டியாரிடத்தில் கிறித்தவ விவிலியத்தை சிறப்பானதொரு தமிழ் மொழி பெயர்ப்பாக கொண்டுவர வேண்டும் என்கிற தன் ஆவலை வெளிப்படுத்தி இருக்கிறார்.

                                         

சென்னை வந்த அடுத்த மூன்றாண்டு காலமும் கடும் வறுமை,உடல் நலிவு காரணமாக 1921 ல் அகால மரணம் எய்தாமல் இருந்திருந்தால்
கீதை மொழி பெயர்ப்பை போல நமக்கு ஒரு அழ்கியத்  தமிழ் பைபிள் மொழி பெயர்ப்பை பாரதி தந்திருப்பார். மதம் ,கடவுள் தாண்டி எல்லா உயிரிடத்தும் நேசம் கொண்டிருந்தார்.கடவுள் மீதான பாரதி கொண்ட நம்பிக்கை வேறு.
அதே வேளை மதம் சார்ந்த அறிவுக்கு ஒவ்வாத வேறு சில நம்பிக்கைகளை சாடுகிறார்
.
கீதைக்கு  உரை எழுதியவர் பூர்வ கர்மப் பலன் என்ற இந்து மதம் சார்ந்த ,ஆளும் வர்க்கத்திற்க்கு சாதகமான இந்த கோட்பாட்டை கேள்விக்குள்ளாக்குகிறார்.பாரதி எழுதுகிறார் “சாதரணமாக ஒருவனுக்கு தலை நோவு வந்தால் கூட ஆராயும் முன்பாகவே அது பூர்வ ஜன்மத்தின் கர்மப்பலன் என்று ஹிந்துக்களில் பாமரர் கருதக்கூடிய நிலைமை வந்து விட்டது”(அ.மார்க்ஸின் சிற்றிலக்கியங்கள் சில குறிப்புகள்)  மனித சமூகத்தின் ஆதாரமான ஐந்து சமூகப் பிரிவினரும் ஒரே நிலன் சார்ந்த மக்கள் திறள் என பாரதியும் கருதியதால் இவர்களை ஹிந்துக்கள் என சொன்னானே அன்றி சிலர் சொல்வது போல் இந்து தேசியத்தை மொழிந்தவன் அல்ல பாரதி. 
இம்மாத உயிர்  எழுத்து இதழில் மறுவினை  பகுதியில் ஒரு விவாதத்திற்க்கு பதில் சொல்ல வந்த கொற்றவை பாரதியை பத்தினிப் பெண்ணும் கேட்டவர் என்று சொல்லி சென்றிருக்கிறார்.பாரதியை இப்படி தடாலடியாக மட்டம் தட்டி விட முடியுமா என்ன?

பறையருக்கும்  இங்கு தீய புலையருக்கும் விடுதலை கேட்டு பாடியவர் பாட்டின் இறுதியில்,”மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்;வைய வாழ்வு தன்னில் எந்த வகையிலும் நமக்குள்ளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே” என்று அழுத்தம் கொடுத்து முடிக்கிறார்.
வீட்டில்,பணியிடங்களில்,அரசியல்  இயக்கங்களில்,படைப்பில்,மத அமைப்புகளில்,உற்பத்தி தளங்களில்,நட்பு  உறவுகளில் என எந்த வகையிலும்  தாதர் என்கிற அடிமை உறவறுத்து  சரிநிகர் சமானமாக வாழ்வோம் என்று பாடிய்வனைத்தான் பத்தினி பெண் கேட்டவர் என்று சொல்லுகிறார்கள்
.
குறிப்பிட்ட காணிநிலப் பாட்டில் “பாட்டுக்  கலந்திடவே அங்கே ஒரு  பத்தினிப் பெண் வேணும்” என்பது மோனைக்காக பாரதி கையாண்ட சொற்கள்.அடுத்த வரியில் ”எங்கள் கூட்டுக் களியினிலே கவிதைகள் கொண்டு தர வேணும்”என்பது கருத்தொருமித்த ஆண் பெண் உறவை சுட்டும் அற்புத சொல்லாகும்.

மீள்வாசிப்பு,பெண்ணிய  வாசிப்பு,மையம் தகர்க்கும் வாசிப்பு என எந்த வாசிப்பும் படைப்பாளியின் கருத்தையும்,சூழலையும் ,காலத்தையும் கணக்கில் கொண்டு வாசிக்கப்பட வேண்டும்.

Sunday, September 4, 2011

பேசாப் பொருளைப் பேசிய பாரதி-2


சிவகங்கையிலிருந்து எழுத்தாளர் ஜனநேசன் போன வாரம் வந்த முதல் பகுதியைப் படித்து விட்டு,மாரியைப் பாடியதால் சோமாறி எனச் சொல்லலாமா? அந்த இடம் மட்டும் நெருடுகிறது என்றார்.அது நான் சொன்னதில்லை.பாரதியை சரியாகப் பயிலாதவர்களின் சொற்பிரயோகம் என்றேன்.
         மதுரையிலிருந்து வெளியான ஞானபானு இதழில் 1904 ல் பாரதியின் முதல் கவிதை வெளியாகிறது.அன்றிலிருந்து கடந்த 100 ஆண்டுகளாக பாரதி பல்வேறு கோணங்களில் ,பல்வேறு சார்பை ஒட்டி,பல்வேறு தரப்பினரால் பயிலப் பட்டும் பழிக்கப்பட்டும் வருகிறான்.
எந்த வாசிப்பின் பாற்பட்டாலும் பிரதி எனப்படுகின்ற text ல் என்ன இருக்கிறது?எதை நோக்கி இந்த எழுத்து கட்டமைக்கப் பட்டுள்ளது?எந்த காலத்தில் எழுதப்பட்டுள்ளது? என்பதை பார்க்காமல் மரபு வாசிப்பு என்றும் நவீன வாசிப்பு என்றும் பின்னப்படுத்தக் கூடாது.அதற்காகப் படைப்பை புனிதத்தில் வைத்து பாருங்கள் என்றும் சொல்லவில்லை;காலத்தில் வைத்து பார்ப்போம் என்கிறேன்.
        இந்த கால உணர்வு பாரதிக்கு இருந்தது.எப்படி எழுத வேண்டும்?எதை எழுத வேண்டும்?எதற்காக எழுத வேண்டும்?என்ற புரிதல் பாரதிக்கு இருந்தது.
அவன் சொல்கிறான்: “கதை சொல்லு என்பார்;கவிதை எழுது என்பார்;காவியம் செய்யென்பார்;எதையும் வேண்டில;அன்னை பராசக்தி இன்பம் ஒன்றினைப் பாடுவேன்என்கிறான்.
       அம்பிகையே ஈசுவரியே எமை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி இந்த ரேஞ்சிலா பாரதி பாடினான்?மசூதியை இடிப்பது மகிழ்ச்சி என்றானா?சிறுபான்மை சோதரரை சின்னாபின்னப் படுத்தல் மகிழ்ச்சி என்றானா?எது மகிழ்ச்சி?பாடுகிறான்: “நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்,நையப் பாடென்று ஒரு தெய்வம் கூறுமே:இதோடு பாரதியின் பராசக்தி வேலை முடிந்து விடவில்லை.கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக் கொண்டுசரி ஒன்றெனக் கொண்டு என்ன செய்ய?
        “வையம் முழுதும் பயனுறப் பாட்டிலே அறங்காட்டெனும் ஒர் தெய்வம்இதுதான் பாரதி காணும் தெய்வம்.தெய்வத்திடம் போய் அஞ்சக் கொடு.பத்தக் கொடு என்பதோ;வறுமானத்திற்க்கு மீறி சொத்து சேர்த்து விட்டேன் காபந்து கொடு என்பதோ பாரதியின் பணி அல்ல.அவன் பணி பெறும் பணி;அவன் ரேஞ்சே தனி.
       பாட்டிலே அறம் காட்டு என்ற வரி ரொம்ப சாதாரண வரியா?இன்றளவுக்கும் படைப்பாளிகளை மிரட்டிக்  கொண்டிருப்பது இந்த அறம்.அரசு அதிகாரம்.அதிகார வர்க்கம்,இவைகளோடு தொடர்பு கொண்டு தன் பெயர் முன்னுக்கு வரும்படி பார்த்துக் கொள்ள்லாமா?வரும்படியும்[சம்திங்]  வரும்படி பார்த்துக் கொள்ளலாமா? என்று ஆசைப் படாத மனம் இந்த தாராளமய சந்தை வணிகக் காலத்தில்இருப்பது அரிதான விசயம்.படைப்பில் தெரியும் முகம்,நிஜத்தில் வேறு மாதிரி தெரிகிறது.இந்தத்  திரிதல், அறம் அற்றுப் போனால் வருவது.அறம் எப்போது அற்றுப் போகும்?எளிய மக்களுக்கான தொண்டூழியம் செய்கிற  படைப்பு மனம் பிசகும் போது அறம் அற்றுப் போகும்.வையம் முழுதும் பயனுற வேண்டும் என்கிற மனம் நசியும் போது அற்றுப் போகும்.
     பாரதியின் வைதீக வாழ்க்கைச் சூழலில் அவனோடு வந்த இறை நம்பிக்கை,நசிவை நோக்கியது அல்ல;வளர்ச்சியை நோக்கியது;நாளையை நோக்கியது. பண்ணில் இன்பமும் கற்பனை விந்தையும் ஊட்டி எங்கும் உவகை பெருகிட ஒங்கும் இன்கவி ஓது என சொல்வதுதான் அவனின் பராசக்தி;அவனுக்கு கருத்தைச் சொல்ல உதவியஒரு ஊடகம் கடவுள்.
     எங்கும் உவகை பெருகிட சொல்வதுதான் அவன் சக்தி.ஒன்றை மறுக்கிற போது ஒன்றை ஆக்கவும் வேண்டும்.ஆக்கமற்ற மறுப்பு வெறுப்பை வளர்க்கும்.எப்பொழுதும் ஆக்கத்தை,இன்பத்தை,அன்பை,உண்மையை அவன் நம்பிய கடவுள் ஊடாக வைத்தான்.
(2011 செப்தம்பர் 5 /தீக்கதிர் இலக்கியச் சோலையில் பிரசுரமானது)

Saturday, September 3, 2011

ஆகும் அறம்





இது
எந்தத் தூளியிலிருந்து
அவிழ்க்கப்பட்ட சேலை?

எந்த குழந்தைக்காக
முலைப்பால் சுரந்திருந்த சேலை?

எந்த பூம்பெண்ணின்
உடல் காத்திருந்த சேலை?

யாரின் கண்ணீர் சுவடுகள்
படிந்திருந்த சேலை?

யாரின் சித்தம் துறந்திருந்த சேலை?

எந்த பங்களா ருசிக்காக
குதறப்பட்ட சேலை?

எந்த லத்திக் குறிகளால்
புணரப்பட்ட சேலை?

சக
 உயிர்
நட்பு
மனிதம் என
பாராமல்

காமம் வனைந்து
வளைய வரும் குழியென
பெண்ணைப் பார்க்கும்
பொதுப்புத்தியை
தீயிட்டு அழித்தல்
ஆகும் அறம்.